என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
    • தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

    * தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருக்கிறது.

    * சாதி ஆணவ படுகொலைகள் அதிகரிப்பது கவலைக்குரியது.

    * சாதி வெறியிலிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டியது அவசியமாகிறது.

    * ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

    * தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

    * நீதிபதி ராமசுப்ரமணியம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.

    * சாதி ஆணவ கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை.

    * ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.

    * தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.
    • சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்பூர் மாவட்டம் சிக்கனுத்து கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று தானே பொருள். தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்; தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? தமிழகத்தில் யாருமே அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை நிலவுவதையே இந்தக் கொலை காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றாலும் கூட, காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை; காவல்துறைக்கு ஏராளமான எஜமானர்கள் உள்ளனர்; முதலமைச்சரின் குடும்பத்தில் உள்ளவர்களும், முதலமைச்சரை சுற்றி வளையம் அமைத்திருப்பவர்களும் காவல்துறையின் அதிகார மையங்களாக திகழ்கின்றனர்; அதனால் தான் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை காவல் அதிகாரி சண்முகவேலின் படுகொலை உறுதி செய்திருக்கிறது.

    காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தப் போவதில்லை என்றால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவழித்து ஏன் ஆணையம் அமைக்க வேண்டும். அதற்கு பருத்தி மூட்டை கிடங்கிலேயே இருந்திருக்கலாமே?

    சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறியதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
    • திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.

    வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    • இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில்.
    • இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு!

    * இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…

    * அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

    * இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!

    * 2030-ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

    * எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், நேற்று சவரனுக்கு 600 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-08-2025- ஒரு கிராம் ரூ.125

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    03-08-2025- ஒரு கிராம் ரூ.123

    02-08-2025- ஒரு கிராம் ரூ.123

    01-08-2025- ஒரு கிராம் ரூ.123

    • சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்
    • கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப் புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின் போது சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

    சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும் பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தர விட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
    • கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11, 12-ந்தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.

    கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.

    சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.

    இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
    • அக்டோபர் 27-ந்தேதி எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    சென்னை:

    கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். செப்டம்பர் 12-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    நவம்பர் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது. 

    • இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
    • நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.

    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.

    காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.




    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • மடிப்பாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    எழும்பூர்: ராமானுஜம் தெரு, விநாயகமுதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, மரத்தடி தெரு, அம்மன் கோவில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா ஷாகிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, சின்னநாயக்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, PKG ஏரியா, தாண்டவராயன் தெரு, அருணாச்சலம் தெரு, திருப்பலி தெரு, KN அக்ரஹாரம், சின்ன தம்பி தெரு, கேஎன் டேங்க் தெரு, பெத்தநாயக்கன் தெரு, வீரப்பன் தெரு, என்எஸ்சி போஸ் ரோடு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, ஜட்காபுரம் கந்தப்பா தெரு, ஏல கந்தப்பா தெரு, இடையபாளையம், பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆவுடையப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காளத்திப்பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, ஆடியப்பா தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, எம்.எஸ். நகர், ஹவுசிங் போர்டு, கன்னையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டிஏ நாயுடு தெரு, தெரு லேன், பெத்தநாயக்கன் தெரு.

    தண்டையார்பேட்டை பிரிவு: கும்மாளம்மன் கோவில் தெரு, ஜிஏ சாலை, TH சாலையின் ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, விபி கோவில் தெரு, ரெய்னி மருத்துவமனை, தாண்டவராயன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.

    நீலாங்கரை: கேனால் ரோடு மெயின் ரோடு, பழைய கணேஷ் நகர் 1 முதல் 7வது தெரு, மகாத்மா காந்தி 1 முதல் 12வது தெரு, காமராஜர் நகர், கோபிநாத் அவென்யூ 1 முதல் 3வது தெரு, அண்ணா தெரு, எம்ஜிஆர் நகர், பாரதி தெரு, ராமலிங்கம் நகர், கற்பக விநாயகர் 7வது மெயின் ரோடு, நாராயண நகர், விவேகானந்தா தெரு, செந்தாமரை தெரு.

    அடையாறு பிரிவு: கஸ்தூரி பாய் நகர், கற்பக விநாயகா நகர், கிளாசிக் என்கிளேவ், ராயல் என்கிளேவ், சரவணா நகர், ராஜன் நகர், பிரார்த்தனா அவென்யூ, சேரன் நகர் 1வது மற்றும் 2வது அவென்யூ, வெட்டுவாங்கணி, பிருந்தாவன் நகர்.

    கிண்டி பிரிவு: மடிப்பாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், அம்புகா நகர், எல்ஐசி நகர், லட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, முவரசம்பேட்டை ஐயப்பா நகர், காந்திபுரம், மேடவாக்கம் சாலை, கேஜிகே நகர், விஷால் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, ராகவ நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரகாளி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, புழுதிவாக்கம், வெங்கட்ராமன் தெரு, பாரத் தெரு, ராஜா தெரு, திலகர் அவென்யூர், ஆண்டவர் தெரு, ஓட்டேரி சாலை, EVR காலனி, ராவணன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்கலையம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை.

    ஐடி காரிடார்: எழில் நகர், கண்ணகி நகர், விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன்குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்ஜிகே அவென்யூ, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், ஈஞ்சம்பாக்கம், பூம்புகார் நகர்.

    • புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது.
    • தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது. பறக்கும் ரெயில் திட்டத்தை சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் பணிகள் நடப்பாண்டுக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

    பறக்கும் ரெயில் தண்டவாளங்கள், பாலங்கள், சமிக்ஞை, மின்மயமாக்கல், நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழக அரசு பராமரிக்கும்.

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் சென்னை மெட்ரோ நிர்வாகம் வசம் வரும்.

    • பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாள்களில் அறிக்கை தாக்கல்.
    • வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை அதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் நாகமோகன் தாஸ் ஆணையம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் தாக்கல் செய்திருக்கிறது.

    பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாள்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பட்டியலின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அவர்களில் பல சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்காத நிலையில், அத்தகைய சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஆணையிட்டது.

    அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என். நாகமோகன் தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் கர்நாடக அரசு அமைத்தது. அன்றிலிருந்து சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. நாகமோகன்தாஸ் ஆணையத்தின் அர்ப்பணிப்பு உணர்வையும், வேகத்தையும் பாராட்டியே தீர வேண்டும்.

    ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே பணிகளைத் தொடங்கிய நீதியரசர் நாகமோகன்தாஸ், அடுத்த 35-ஆம் நாள், அதாவது மார்ச் 27-ஆம் நாள், பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்றும், பட்டியலினத்தில் உள்ள 101 சாதிகளின் மக்கள்தொகை விவரங்கள் துல்லியமாக திரட்டப்பட வேண்டும் என்பதால், அதற்கான பட்டியலின மக்களை சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என்று கோரி அரசிடம் இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்தார்.

    அதை ஆய்வு செய்த கர்நாடக அரசு, நாகமோகன்தாஸ் ஆணையத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் அதே நாளில் ஏற்றதுடன், அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. அதன்பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்த ஆணையம், மே 5-ஆம் நாள் தொடங்கி, ஜூலை 6-ஆம் நாள் வரை 63 நாள்களில் கணக்கெடுப்பை நடத்தி முடித்து, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 101 பட்டியலின சாதிகளைச் சேர்ந்த 27 லட்சத்து 24,768 குடும்பங்களில் உள்ள ஒரு கோடியே 7 லட்சத்து 1982 பேரின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இது ஓர் இமாலயப் பணி என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

    கர்நாடக அரசும் அறிக்கையை பெற்றுக் கொண்டு சும்மா இருக்கவில்லை. ஆகஸ்ட் 4-ஆம் தேதியான நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை மறுநாள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கவுள்ளது. கர்நாடகத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் அம்மாநில அரசும், ஆணையங்களும் காட்டும் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்க்கும் போது நமக்கும் தான் ஒன்றுக்கும் உதவாத ஓர் அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் வாய்த்திருக்கிறதே என்ற ஏக்கப் பெருமூச்சும், கோபமும்தான் எழுகிறது.

    சமூகநீதியின் அடிப்படை அதை தாமதிக்காமல் வழங்குவதுதான் என்ற அடிப்படையை புரிந்து கொண்டு கர்நாடக அரசு செயல்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம், தமிழ்நாட்டு மக்கள்.

    பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து சரியாக 369-ஆம் நாளில் அதற்கான பரிந்துரை அறிக்கையை கர்நாடக அரசு பெற்றிருக்கிறது. ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1224 நாள்கள் ஆகும் நிலையில் தமிழக அரசும், ஆணையமும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆணையம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அதைக் காட்டி வன்னியர்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

    கர்நாடகத்தில் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, சரியாக 165-ஆம் நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முழுமையான பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 937 நாள்களாகின்றன. இதுவரை 6 முறை காலநீட்டிப்பு வாங்கியதைத் தவிர வேறு எதையும் ஆணையம் செய்யவில்லை.

    பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்பதை 35 நாட்களில் கண்டறிந்த நாகமோகன் ஆணையம், அதை கர்நாடக அரசிடம் இடைக்கால அறிக்கை மூலம் தெரிவித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்றே அனுமதி பெறுகிறது. ஆனால், தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான தரவுகள் இல்லை என்பதை கண்டறியவே ஆணையத்திற்கு 30 மாதங்கள் ஆகியுள்ளது.

    சமூகநீதி சார்ந்து அரசால் அமைக்கப்படும் அனைத்து ஆணையங்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை என்ற தனது அதிகாரத்தை கர்நாடக ஆணையம் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு கூறிவரும் பொய்யை மறுப்பதற்கு கூட திராணியில்லாமல் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

    பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தாலும், பட்டியலின மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்கிறது; இல்லாத வாய்ப்புகளைக் கூட உருவாக்கிக் கொள்கிறது. இந்த சமூகநீதி முயற்சிகளுக்கு அங்கு அமைக்கப்பட்ட ஆணையங்களும் துணை நிற்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைக் கூட பயன்படுத்த மறுக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சமூகநீதியின் எதிரி என குற்றஞ்சாட்டி வருகிறேன்.

    உண்மையாகவே சமூகநீதி என்றால் என்ன? என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். சமூகநீதிக்கு மேலும், மேலும் துரோகம் செய்யாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ×