என் மலர்tooltip icon

    சென்னை

    • மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.
    • த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    * ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உயரதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    * அரசு தரப்பு நியாயத்தை மட்டும் உள்துறை செயலர் பேசியது ஏன்?

    * த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக ஐகோர்ட் கடுமையான வார்த்தைகளை கூறியது.

    * விசாரணையே இல்லாமல் த.வெ.க. மீது தான் தவறு என்பது போல் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    * எங்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன.

    * மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.

    * த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். த.வெ.க.வை முடக்க முயற்சிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சாதி அடையாள பெயர்களை நீக்குவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தமிழகத்தில் உள்ள பல சமூக மக்கள் இடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர். அவர்கள் நினைவாகவும், அவர்களை போற்றி நினைவு கூறும் வகையில் அவர்களின் பெயர் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் குல பெயர் உடன் முழுமையாக பெயரை கொண்டு அவர்கள் பெயர் அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூட்டப்பட்டது. அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடிய தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்கள் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் சமுதாய மற்றும் குல பெயர் உடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது. நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது.

    இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும் ஆங்காங்கே முரண்பாடுகள் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதேசமயம் ஒரு சமுதாயத்தின் பெயர் நீக்கப்படும் இடத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் பெயர்தான் சூட்டப்பட வேண்டும். அப்போது தான் அந்தப் பகுதி மக்களிடத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரும். இது அனைத்து சமுதாயப் பெயர்களுக்கும் பொருந்தும்.

    அந்தந்த பகுதி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் முழு பெயர்களை அந்தந்த பகுதியில் தான் சூட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைவுகளை அந்த பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள். அதை தவிர்த்து தன்னிச்சையாக அரசு நிர்வாகம் பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல.

    தமிழ்நாடு முழுக்க இப்படி சமூக அடையாள பெயர்களை அகற்ற நினைத்த தமிழக அரசு 9-ஆம் தேதி கோவையில் தமிழக முதல்வர் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு "ஜி.டி.நாயுடுவின்" பெயரினை வைத்துள்ளது அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. நாயுடு என்பது சாதிய பெயர் இல்லையா ? அப்படி எனில் தலைவர்களின் பெயருடன் வருகின்ற அவர் அடையாள பெயரும் சாதிய பெயர் அல்ல என கொள்ள வேண்டும்.

    சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது. சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும்.

    எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது.
    • தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்தது.

    வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையான நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.

    மாலையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையானது. நேற்றும் தங்கம் இதே விலையில் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 195 ரூபாய்க்கும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720

    09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400

    08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-10-2025- ஒரு கிராம் ரூ.190

    11-10-2025- ஒரு கிராம் ரூ.190

    10-10-2025- ஒரு கிராம் ரூ.184

    09-10-2025- ஒரு கிராம் ரூ.177

    08-10-2025- ஒரு கிராம் ரூ.170

    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்பா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு மற்றும் அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை அண்ணா நகரில் உள்ள மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீடு, தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் தீபா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

    • சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.
    • சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

    மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது.

    சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கற்குறிப்பு வாசிக்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

    சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது. இதற்கான கூட்டம், சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் பங்கேற்கிறார்கள். 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் அவை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.

    • பெங்களூருவில் இருந்து 16-ந்தேதி மாலை புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை கொல்லம் சென்றடையும்.
    • கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை பெங்களூரு சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * பெங்களூருவில் இருந்து வருகிற 16-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06561), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06562), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    * பெங்களூருவில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (06567), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06568), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    * பெங்களூருவில் இருந்து வருகிற 17, 21 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரெயில் (06297), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வருகிற 18, 22 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06298), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
    • ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி ஒருமையிலும், கொச்சைப்படுத்தியும் பேசி தரம்தாழ்ந்த அரசியலை செய்கிறார். எங்களை வம்புக்கு இழுத்து அநாகரிகமாக பேசி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலும், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என மக்கள் பிரச்சனை என்று வரும்போது நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமி நாளிதழ்களை படிப்பதில்லை. அரசியலும் தெரிவதில்லை. வாயில் வந்தபடி பேசிவிட்டு செல்கிறார். அவரைப் போன்று கொச்சைப்படுத்தி பேச எங்களுக்கு தெரியாது.

    கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர். அதுபோன்று நான் பொதுவெளியில் பேச முடியாது.

    நாங்கள் கூடுதல் தொகுதி கேட்கவில்லை என யார் சொன்னது. எங்களுடைய பிரச்சாரங்களை ஆரவாரம் இல்லாமல், உயிரிழப்பு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜனவரியிலேயே தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    • தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு.
    • அதனால் தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.

    மக்களவை எம்.பி. ஆ.ராசா சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த ஆட்சி தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது. 30 வருடங்களாக நான் எம்.பி.யாக இருக்கிறேன். PL2 தெரியுமா? PLC தெரியுமா? (நிகழ்ச்சியில் இருந்தவர்கள் பார்த்து) எதுவுமே தெரியாது.

    தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு. பூத் ஸ்லிப் நம் கையில், வாக்காளர் பட்டியல் நம் கையில், ஸ்லிம் கொடுக்கிறது நம் கையில், சின்னம் கொடுக்கிறது நம் கையில்.

    ஏனென்றால் ஓட்டு போடுறதில் 10 பேர் திருடர்களாக இருப்பார்கள். இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் அந்த வேலையை பார்த்தோம். தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.

    தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் வந்துவிட்டார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. தேர்தல் ஆணையத்தின் திருட்டை தடுக்கத்தான் இவ்வளவு வேலை. இப்படி தடுத்துதான் முதலமைச்சராக வேண்டுமென்றால், வேண்டியதில்லை. வந்துவிடுவார்கள்.

    130, 150 என இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் அது தமிழ்நாட்டுக்கான தேர்தல். இது தமிழ்நாட்டுக்கான தேர்தல் மட்டுமல்ல. இந்த தேர்தல் இந்தியாவுக்கான தேர்தல். மத்திய அரசுக்கு தற்போது மெஜாரிட்டி இல்லை. தமிழக தேர்தலில் 150 முதல் 200 தொகுதிகளை பிடித்துவிட்டால், பாராளுமன்ற தேர்தல் இல்லாமலேயே மத்திய அரசு மாறும்.

    இவ்வாறு ஆ. ராசா தெரிவித்தார்.

    • தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

    நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அது புரளி என்றும் தெரிய வந்தது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைதொடர்ந்து, உடனடியாக தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்.
    • நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது:-

    கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.

    ஒரு மனு இறந்தவரின் உண்மையான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, மற்றொன்று அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஆவணங்களில் கையொப்பமிட தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தோன்றும் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல். இது மலிவான அரசியல் ஆதாயத்திற்காக துக்கத்தையும் சோகத்தையும் பயன்படுத்துவதற்கான ஆபத்தான முயற்சி.

    நீதிமன்றத்தின் மீது திமிர்பிடித்த மோசடியாகத் தோன்றுவதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை அவர்கள் தகுதியான கடுமையுடன் கையாளும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.
    • தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் காலை உணவு திட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், "முதல் மணி அடிப்பதற்கு முன்பு லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளிக்கும் பெண்களைப் பற்றியும், தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை இயக்கும் சமையலறைகளுக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களைப் பற்றியும் செய்தி நிறுவனம் தொடர்ந்த வீடியோவை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்," காலை உணவு திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.

    தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    • தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    • ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசிய மர்மநபர் முதலமைச்சரின் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

    இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கியதில் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் சிக்கினார்.

    மாற்றுத்திறனாளியான இவர் இதுபோன்று ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பன் 2021-ம் ஆண்டிலும் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த நிலையில்தான் தற்போதும் அவர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஐயப்பன் மாற்றுத்திறனாளி என்பதால் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை எச்சரித்து அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இருப்பினும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×