என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும், பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதியில்லை.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா ஞாயிற்றுக்கிழமை மூடப்படுகிறது. மற்ற நாட்களில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஞாயிற்றுக்கிழமை (9-ந் தேதி) பொது ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுகிறது. அதைத்தவிர மற்ற வார நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்.

    பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும், பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதியில்லை. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவினுள் பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    முகக்கவசம்

    முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கி கொள்ளலாம். முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும்போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

    பார்வையாளர்களால் கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.


    வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு கே.கே. தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மேட்டுத் தெருவைச் சேர்ந்த மகேஷ் அடுத்தடுத்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டனர்.

    கொலை வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது ரவுடி கும்பல் கார்த்திக்கை சுற்றி வளைத்து வெடிகுண்டு வீசி கொன்றது.

    பின்னர் அந்த கும்பல் மேட்டுத் தெருவில் உள்ள மகேஷ் வீட்டுக்கு சென்று வீடு புகுந்த அவரை சரமாரியாக வெட்டி கொன்றது. செங்கல்பட்டில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இருவரும் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், மொய்தீன் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை பிடிப்பதற்கு செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வடிவேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு, சங்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கொலையாளிகள் இருவரும் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்பாபுலியூர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு விரைந்து சென்றனர்.

    இரட்டை கொலையில் தொடர்புடைய மொய்தீன், தினேஷ் இருவரும் மறைவாக ஒரு இடத்தில் பதுங்கி இருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி முனையில் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடிகள் இருவரும் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளை எடுத்து வீசினார்கள்.

    இதை போலீசார் எதிர்பார்க்கவில்லை. போலீசாரை நிலை குலைய செய்து விட்டு, தப்பி ஓடி விட 2 ரவுடிகளும் முயற்சி செய்தனர். என்றாலும் போலீசார் துணிச்சலுடன் 2 ரவுடிகளையும் பிடிக்க நெருங்கி சென்றனர். அப்போதும் 2 ரவுடிகளும் திடீரென ஆவேசத்துடன் போலீசாரை அரிவாளால் தாக்கினார்கள்.

    ரவுடிகளின் எதிர்பாராத திடீர் தாக்குதலை சமாளித்து முன்னேறிய தனிப்படை போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரவுடிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இதில் மொய்தீன், தினேஷ் இருவரும் போலீஸ் என்கவுண்டரில் பலியானார்கள். இதுபற்றி உடனடியாக தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் என்கவுண்டர் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

    போலீசாரை கொலை செய்யும் நோக்கத்தில் ரவுடிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் தற்காப்புக்காக அவர்களை சுட்டுக்கொல்ல நேரிட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டில் நேற்று நடந்த இரட்டை கொலை சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் அதில் தொடர்புடைய 2 ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

    இதனால் இரட்டை கொலை நடைபெற்ற செங்கல்பட்டு, என்கவுண்டர் நடைபெற்ற உத்திரமேரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் 2 ரவுடிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகி இருப்பதால் மற்ற ரவுடிகளும் கலக்கத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம், படப்பை பகுதிகளில் தொழிற்சாலைகளில் கட்டப்பஞ்சாயத்தை ஒழித்துக்கட்ட என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட் அதிகாரியான வெள்ளத்துரை ரவுடிகளை ஒழிப்பதற்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் செங்கல்பட்டில் வெடிகுண்டு வீசி 2 பேரை கொலை செய்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட 2 ரவுடிகளை போலீசார் அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

    இதற்கிடையே செங்கல்பட்டு இரட்டை கொலைக்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கார்த்திக், மகேஷ் இருவரும் சேர்ந்து தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட தினேசை வெட்டி உள்ளனர். இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இதில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என கார்த்திக், மகேஷ் இருவரும் தினேசை மிரட்டி உள்ளனர். இதன் காரணமாகவே தினேஷ் தனது கூட்டாளியான மொய்தீனுடன் சேர்ந்து இருவரையும் கொன்றது தெரிய வந்தது.

    வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட கார்த்திக்குக்கு தீபிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகேசின் மனைவி பெயர் தேவி, அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும், ஒரு பெண் குழந்தைஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இரட்டை கொலை மற்றும் என்கவுண்டர் சம்பவங்களை தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக செங்கல்பட்டு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடலும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக ரவுடிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர். இதனால் அங்கும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
    எம்.ஐ.டி கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    தாம்பரம்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 4,862 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து இன்று 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று ஏற்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தனியாக வசித்து வந்த 2 குழந்தைகளின் தாயுடன் நெருங்கிய பழகிய வாலிபரே நண்பர்களோடு சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்போரூர்:

    சென்னை அடுத்துள்ள கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் ஷாஇன்ஷா. 26 வயதான இவருக்கும் வரதராஜ் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கணவர் வரதராஜ் மரணம் அடைந்ததையடுத்து மகன்களுடன் ஷாஇன்ஷா தனியாக வசித்து வந்தார். அவரது தாய் மகளுடன் ஒன்றாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ஷாஇன்ஷாவின் குழந்தைகள் இருவரும் பாட்டியுடன் வெளியில் சென்று விட்டனர். அப்போது ஷாஇன்ஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பினர்.

    மாலையில் தாய் வீடு திரும்பியபோதுதான் இந்த கொலை சம்பவம் வெளியில் தெரிந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வண்டலூர் உதவி கமி‌ஷனர் சிங்கார வேலு, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஷாஇன்ஷா கழுத்தை நெரித்து, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    2 குழந்தைகளின் தாயான பெண் பட்டப்பகலில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த கொலை சம்பவத்தைப் பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கொலையாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக துப்பு துலக்கப்பட்டது.

    இதில் ஷாஇன்ஷா கொலை வழக்கில் 3 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கில் கொட்டிவாக்கம் இளங்கோ நகர், தெற்கு காந்தி தெருவைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்களான கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுக்குகாபி, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கொலை வழக்கில் கார்த்தி முக்கிய குற்றவாளி ஆவார்.

    ஷாஇன்ஷாவை கொலை செய்தது ஏன் என்பது பற்றி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷாஇன்ஷா, கார்த்தியின் அண்ணன் விஜய்யுடன் பழகி உள்ளார். அவர் பழகிய சில மாதங்களில் விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் மரணம் அடைந்த பிறகு இது தொடர்பாக ஷாஇன்ஷாவிடம் பலமுறை அண்ணன் எதற்காக தற்கொலை செய்தார் என்று கார்த்தி கேட்டு வந்துள்ளார். இதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஷாஇன்ஷாவுடன் நெருங்கி பழகி அவரை கொலை செய்ததாக கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    எனது அண்ணன் விஜய் ஷாஇன்ஷாவுடன் பழகிய பிறகு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஷாஇன்ஷாவிடம் கேட்டபோது எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி வந்தார்.

    இதையடுத்து அவருடன் நெருங்கி பழகி உண்மையை தெரிந்து கொள்ள நினைத்தேன். கடந்த 2-ந்தேதி ஷாஇன்ஷாவின் வீட்டுக்கு சென்று அதுபற்றி கேட்டேன்.

    அதற்கு ஷாஇன்ஷா அதையெல்லாம் கேட்காதே. நீ வந்த வேலையை மட்டும் பார் என்று கூறினார். இதையடுத்து அவருடன் நான் உல்லாசமாக இருந்து விட்டு அதன் பிறகு மீண்டும் அண்ணன் விஜய் மரணம் பற்றி கேட்டேன்.

    அப்போது ஆத்திரம் அடைந்த ஷாஇன்ஷா திரும்ப திரும்ப அதைபற்றி கேட்டால் உனது அண்ணன் நிலைதான் உனக்கும் ஏற்படும் என எச்சரித்தார்.

    இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. ஷாஇன்ஷாவை கொலை செய்ய முடிவு செய்தேன். இதையடுத்து எனது நண்பர்களான ஆனந்த், சுரேஷ் இருவரையும் ஷாஇன்ஷாவின் வீட்டுக்கு வரவழைத்தேன். 3 பேரும் சேர்ந்து டவலால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.

    இவ்வாறு கார்த்தி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதான 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    தனியாக வசித்து வந்த 2 குழந்தைகளின் தாயுடன் நெருங்கிய பழகிய வாலிபரே நண்பர்களோடு சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சாக மாறி இருக்கிறது.
    மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஏற்படும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை மருத்துவர்கள் தயாராக வைத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த கர்நாடக பக்தர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கொரோனா தொற்று ஒமைக்ரானாக மாறும் நிலை உருவாகலாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மாமல்லபுரத்தில் அதிகளவில் கர்நாடக பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் அங்கு சுகாதார சீர்கேடாக தெருக்கள், வீதிகளில் சமைப்பது, உணவு கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவது, இயற்கை உபாதைகள் கண்ட இடங்களில் கழிப்பது போன்ற சுகாதார சீர்கேடுகளை செய்கிறார்கள். மாமல்லபுரம் பேரூராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கர்நாடக சக்தி பக்தர்களை கண்டு கொள்வதில்லை.

    இதனால் மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மேல்மருவத்தூர் பக்தர்களிடம் தொற்று அதிகரித்து வருவதால், மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஏற்படும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை மருத்துவர்கள் தயாராக வைத்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    தாம்பரம்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,731 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குரோம்பேட்டையில் உள்ள கல்வி நிறுவனத்தில் 65 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் மட்டும் சுமார் 1,600 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    முதல்கட்டமாக 1,417 மாணவ-மாணவிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மாணவிகள் ஆவர்.

    இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கு சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவலை அடுத்து கல்வி நிறுவனத்துக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


    பல்லாவரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாலையில் பிரபல தனியார் வங்கியான ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது.

    நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால் பணத்தை திருட முடியாததால்திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனிடையே இன்று காலை வங்கி ஏடிஎம்ல் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் ஒருவர் வந்து போது ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சி.சி.டிவி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கடற்கரை ஓரத்தில் 40 வயது மதிக்கத் தக்க திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கடற்கரை ஓரத்தில் 40 வயது மதிக்கத் தக்க திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. மர்ம நபர்கள் திருநங்கையை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேளம்பாக்கம் விதவைப் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தப்பிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஷா இன் ஷா (வயது26). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து ஷா இன் ஷா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் ஷா இன் ஷா மட்டுதனியாக இருந்தார். அவரது தாய் மற்றும் மகன்கள் வெளியில் சென்று இருந்தனர்.

    சிறிதுநேரம் கழித்து ஷா இன் ஷாவின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மகள் ஷா இன் ஷா கட்டிலில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வண்டலூர் உதவி ஆணையர் (பொறுப்பு) சிங்காரவேலு உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஷா இன் ஷா டவலால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. பாலவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஷா இன் ஷா நெருங்கி பழகி வந்துள்ளார். இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    சம்பவத்தன்று ஷா இன் ஷாவின் வீட்டுக்கு காதலன் வந்து சென்றதாக தெரிகிறது. எனவே அவர் ஷா இன் ஷாவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்தள்ளது. அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
    அச்சரப்பாக்கத்தில் கடன் தொல்லையால் காப்பீடு முகவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரிய கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 52). காப்பீடு நிறுவனத்தில் முகவராக உள்ளார்.

    கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக தொடர்ந்து புதிதாக பாலிசிதாரர் சேர்க்க முடியாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் போதிய வருமானம் இல்லாததால் தனக்கு சொந்தமான வீட்டை அச்சிறுபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றார்.

    இதைத்தொடர்ந்து தனியார் நிறுவன கடனை அடைக்க பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு மோகனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மன முடைந்த மோகன் நேற்று இரவு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவிலுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வெண்ணை உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மட்டும் கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    கடற்கரை கோவில் பகுதிக்கு சென்று சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடலில் குளித்து மகிழும் ஆவலில் வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடற்கரைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர். அதையும் மீறி கடற்கரைக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

    பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று திரண்ட பொதுமக்கள் கூட்டத்தால் அனைத்து புராதன சின்னங்களிலும் கூட்டம் களைகட்டயது. இதனால் சாலையோர வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோவளம் சாலை மற்றும் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் சுற்றுலா பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

    மாமல்லபுரம்:

    புத்தாண்டையொட்டை இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இதையடுத்து செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் சுற்றுலா பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

    பஸ்சில் வரும் சுற்றுலா பயணிகள் ஊருக்கு வெளியே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பஸ்சை நிறுத்தி விட்டு நடந்து வர வேண்டும் என மாமல்லபுரம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×