என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுந்தோண்டி கிராமத்தில் இருந்து தேவமங்கலம் கிராமம் துரைராஜ் என்பவரது இல்லத்திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாடகை வேன்பேசி கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள உறவினர்கள் நேற்று காலை தேவமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவமங்கலம் சுடுகாடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மனைவி தேவி(48), வெங்கடேசன் மனைவி கஸ்தூரி(62), ஜோதி மனைவி சித்ரா(25), பாண்டியன் மனைவி இளவரசி(32), கண்ணன் மனைவி செல்வகுமாரி(45), சின்னப்பன் மனைவி சரோஜா(50), செல்வராஜ் மனைவி ஜெயம்(55), செல்லப்பன் மனைவி மலர்க்கொடி(40), ராமசாமி மனைவி வளர்மதி(50), கண்ணன் மனைவி செல்வராணி(40), சின்னையன் மனைவி சரோஜா(50), கோவிந்தன் மனைவி சின்னம்மாள்(62), சந்திரசேகரன் மகன் சஞ்சய்(16), நடராஜன் மகன் ராமச்சந்திரன்(18), இளையநாதன் மகன் அஸ்வின்(5) கொண்டான்குடி சுந்தரபாண்டியன் மனைவி வசந்தா(19) உள்பட 16 பேரும் காயம் அடைந்தனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 வயது சிறுவன் அஸ்வின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரான வாரியங்காவலை சேர்ந்த குமாரை(30) வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் ஜெயச்சந்திரன்(வயது 18). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரைக்குறிச்சி நூலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தா.பழுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, தனியார் பஸ் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ராஜாராமன்(40) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள காட்டுப்பெரும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுமதி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. 5 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளான்.
வேல்முருகன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். இதனால் சுமதி, தனது மகனுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த சுமதி திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று சுமதி இறந்தார்.
இது குறித்து சுமதியின் தாயார் இடையத்தான்குடியைச் சேர்ந்த தேன்மொழி கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். புகாரில் அரியலூர் பேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் காமராஜ் என்பவர் டார்ச்சர் செய்ததால்தான் தனது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர், போலீஸ்காரர் காமராஜ் டார்ச்சரால் சுமதி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சுமதி சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. சுமதிக்கும், அரியலூர் மாவட்டம் பேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் மூலம் காமராஜ், சுமதியிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். சுமதியும் காமராஜ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுமதி, காமராஜூடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
கடந்த 3-ந்தேதி சுமதி வீட்டிற்கு சென்ற காமராஜ், அங்கிருந்த சுமதியிடம் செலவுக்கு பணம்-நகை, தாலிச் செயின் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சிம்கார்டை கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுமதி எதையும் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ், சுமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
காமராஜ் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த சுமதி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் காமராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழ வண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). விவசாயியான இவர், அரியலூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
டிராக்டர் வாங்கியதற்காக மாதந்தோறும் வங்கியில் கடன் தவணையை செலுத்தி வந்த அவர், கடந்த 2 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லை.
2 மாத கால தவணை தொகையை வருகிற 6-ந் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் எனவும், செலுத்த தவறினால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் கடந்த 30-ந்தேதி தேவேந்திரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் நேற்று தேவேந்திரன், அவரது வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வங்கி அதிகாரிகள், திடீரென டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் விரக்தியடைந்த தேவேந்திரன், பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.
உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் ஒன்றியம் கடுகூர் கிராமத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் கடுகூர் ஊராட்சிசெயலா ளர் பஞ்சநாதன் வரவேற்று பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் எழிலரசன், தெய்வசிகாமணி, திருமானூர் ஒன்றிய செயலாளர் ராஜ் குமார், ஜெகதீசன், தாபழுர் ஒன்றிய செயலாளர்அறிவ ழகன், அரியலூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஒன்றிய தலைவர்செந்தில் குமார், மாவட்ட தொழிற் சங்கம் பழக்கடை பாண்டியன், வேல்முருகன், உடையார் பாளையம் செயலாளர் முனியசாமி, கடுகூர் கிளை செயலாளர் பிரகாஷ்,ஒன்றிய துணைசெயலாளர் ராஜீவ் காந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில விவசாயஅணி துணைசெயலாளர் சாமிநாதன், அரியலூர் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம், காவனூர் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி காந்தி(வயது 60). இவர் நேற்று முன்தினம் நாச்சியார்பேட்டை தைலமர காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், காந்தியின் கழுத்தில் கிடந்த தாலி, தோடு உள்ளிட்ட 1 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் காந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலரழகன் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சில்லறை வணிகர்களை பாதிக்கும் வகையில் ஆன்லைன் வணிகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆட்சியில் யார் இருந்தாலும் வெளிநாட்டுக்காரர்களுக்கு துணையாக இருக்கிறார்கள். இதை எதிர்த்து அக்டோபர் 2-ல் போராட்டம் நடைபெறும்.
அந்நியர்களை விரட்டி அடிக்காமல் அந்நியர்களுக்கு உதவுகின்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த போராட்டம் அமையும்.
வெளிநாட்டு வங்கிகளால் உள்நாட்டு வங்கிகள் திவால் ஆகி வருகிறது. திவாலான வங்கிகளுக்கு மறு முதலீடு கொடுப்பதாக மத்திய அரசு கூறுவது தவறான செயலாகும். உள்நாட்டு தொழில்களை முடக்கி விட்டு வெளி நாட்டுக்காரர்கள் கொள்ளையடிப்பதற்கு நமது தலைவர்கள் துணை போகிறார்கள். இதை எதிர்த்து போராட மக்கள் அனைவரும் தயாராக வேண்டும்.
தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு. நமது நாட்டு தொழில் முனைவோரை முதல்வர் முதலில் ஊக்கப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் எந்த அசைவாக இருந்தாலும் உள்நாட்டு சில்லறை வணிகத்தை ஒழிப்பதற்கான செயலாகத்தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர்:
கடந்த 30 ஆண்டுகளாக ஊராட்சி பணியாளர்களை எம்.பி., எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன், ஊராட்சி தலைவர்கள் ஆகியோரே பார்த்து தகுதியின் அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது.
அதன்படி 8-ம் வகுப்பு படித்திருந்தால் ஊராட்சி எழுத்தராகவும், 10-ம் வகுப்பு படித்திருந்தால் ஊரக வளர்ச்சி துறையில் டிரைவராகவோ, இளநிலை உதவியாளராகவோ சேர்த்துக் கொள்ளலாம். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஊராட்சியில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மருதூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 58) என்பவரின் தந்தை மருதூர் ஊராட்சி எழுத்தராக பணி புரிந்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அன்பழகன், மருதூர் ஊராட்சி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.
10-ம் வகுப்பு படித்திருந்தால் யூனியனில் இளநிலை உதவியாளராக பணியில் சேரலாம் என்பதால், அன்பழகன் 10-ம் வகுப்பு படித்ததாக போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண்டிமடம், செந்துறை யூனியனில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவர், பதவி உயர்வு பெற்று அரியலூர் யூனியன் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அடுத்த மாதம் (செப்டம்பர்) பணி ஓய்வு பெற வேண்டிய நிலையில் அவரது சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, போலிசான்றிதழ் கொடுத்து அன்பழகன் வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய் அன்பழகனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அன்பழகன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்பில் பணிபுரிபவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது அரசுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






