search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    மாணவர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    ஆசிரியர்கள் நியமிக்க கோரி கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவர்கள் முற்றுகை

    போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க கோரி கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தமிழ், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை நடத்த போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை.

    இதனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை தங்களது வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் வந்து பள்ளியில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். ஆசிரியர்பணியிடங்களை நிரப்பவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×