என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • பாஜக எம்.பி உபேந்திர சிங் ரவாத், வெளியான ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி தொகுதி பாஜக எம்.பி., உபேந்திர சிங் ராவத், மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் உடன் உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அறிவுறுத்தலால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது

    ஆனாலும், பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத், அந்த ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் DeepFake AI தொழில்நுட்பத்தால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், நேற்று மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.

    பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • சாலையில் சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.
    • காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் தொடர்ந்து மழை பெய்தது.

    இந்நிலையில், விகாஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் திடீரென ராசத பள்ளம் ஏற்பட்டது.

    இதில், அந்த வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
    • வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.

    வாரணாசி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.

    இதனால் வாரணாசியில் உள்ள பாஜக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் கொண்டாடினர்.

    • ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றச்சாட்டு.
    • ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

    உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.

    இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

    அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.

    இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

    வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேசத்தில் ஏழு இடங்களுக்கு பதிலாக 8 இடங்களில் வெற்றி.
    • இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு வாய்ப்பு இருந்து நிலையில், பா.ஜனதா வெற்றி.

    இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து 56 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போட்டி நிலவியதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு இடத்திற்கு பாரதிய ஜனதாவும் காங்கிரசும் பலப்பரீட்சை நடத்தின. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மொத்தமாக வாக்கு அளித்தால், அந்த கட்சியின் எம்.பி. வேட்பாளர் எளிதாக வெற்றி பெறுவார். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்ததால் பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஏழு இடங்களிலும், சமாஜ்வாடி கட்சிக்கு மூன்று இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பாரதிய ஜனதா எட்டு வேட்பாளர்களை நிறுத்தியதால் தேர்தல் நடைபெற்றது.

    அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பாரதிய ஜனதாவின் ஏழு வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். சமாஜ்வாடியின் 3 வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெறுவார்கள்.

    ஆனால் சமாஜ்வாடி கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்ததால் பாரதிய ஜனதாவின் எட்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மூன்று இடங்களில் வெற்றிபெற வேண்டிய சமாஜ்வாடி கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு இடத்தை இழந்தது.

    நான்கு இடங்களை கொண்ட கர்நாடகாவில் பாரதிய ஜனதா கூட்டணி மேலும் ஒரு வேட்பாளரை நிறுத்தியதால் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களுக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும் தேவைப்பட்ட நிலையில் மூன்று பேரும் எளிதாக வெற்றி பெற்றனர். ஒரு பாரதிய எம்.எல்.ஏ. காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

    பாரதிய ஜனதாவின் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், பாரதிய ஜனதா ஆதரவுடன்  மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் நிறுத்திய வேட்பாளர் தோல்வியடைந்தார். காங்கிரசுக்கு மூன்று இடங்களும் பாரதிய ஜனதாவிற்கு ஒரு இடங்களும் கிடைத்தன.

    ஒட்டு மொத்தமாக 15 இடங்களில் நடந்த தேர்தலில் பத்து இடங்களில் (உத்தர பிரதேசம்-8, இமாச்சல பிரசேதம்-1, கர்நாடகா-1) பாரதிய ஜனதாவும் மூன்று இடங்களில் (கர்நாடகா) காங்கிரசும், இரண்டு இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசத்தில் இருந்து பா.ஜனதா தலா ஒரு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

    விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தது, அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சோனியா காந்தி, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • தேர்தல் விதியை மீறியதாக காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு.
    • வழக்கு தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் நடிகை ஜெயப்பிரதா ஆஜர் ஆகவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். அப்போது தேர்தல் விதியை மீறியதாக அவர் மீது கெமாரி, சுவார் போலீஸ் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் நடிகை ஜெயப்பிரதா ஆஜர் ஆகவில்லை. இதனால் அவரை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் ஜெயப்பிதாவை கைது செய்து வருகிற 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    நடிகை ஜெயப்பிரதா கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும்.
    • விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 10 இடங்களுக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. ஏழு இடங்களில் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும். 3 இடங்களில் சமஜ்வாடி கட்சி வெற்றி பெறும். ஆனால் பா.ஜனதா சில எம்.எல்.ஏ.க்களை இழுத்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த விருந்தை எட்டு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதனால் சமாஜ்வாடி கட்சியின் 3-வது வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகமானது.

    இந்த நிலையில்தான் இன்று காலை உத்தர பிரதேச மாநில சட்டமன்ற கொறடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் 3-வது வேட்பாளர்ரை நிறுத்தியது கட்சியில் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "எங்களுடைய 3-வது இடம் பொதுவாக கட்சியில் உள்ள உண்மையானவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும். இது எங்களுடைய 3-வது சீட்டின் வெற்றி. கட்சியின் வெற்றி உண்மையில் உள்ளது.

    விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு பல்வேறு பேக்கேஜ் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருப்பார்கள். கலகம் விளைவித்த அவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு 252 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சமாஜ்வாடிக்கு 108 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். பா.ஜனதா ஏழு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். சமாஜ்வாடி 3 பேரை தேர்வு செய்ய முடியும். ஆனால் பா.ஜனதா 8-வது ஒருவரை நிறுத்தியுள்ளதால் போட்டி நிலவுகிறது.

    • தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.
    • பா.ஜ.க.வின் அழுத்தத்தால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.

    தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவர். தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும். தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தலைவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.

    • கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது.
    • வாரணாசி கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சில மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவிட்டது.

    கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்தது.

    ஞானவாபி மசூதி வளாகத்தில் தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.

    வாரணாசி கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெ ஹமியா மசூதி குழு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் இந்த அப்பீல் மனுவை விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு கடந்த 15-ந்தேதி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. மசூதி கமிஷன் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    • ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார்.

    இந்த யாத்திரை நிகழ்ச்சி அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது.

    இதில், ராகுல்காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றனர்.

    காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி அடைந்து உள்ளதை தொடர்ந்து யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை உ.பி. ஆக்ரா நோக்கி மாலை 3.30 மணிக்கு வந்தது. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், கலந்து கொண்டார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாக கரகோஷமிட்டனர்.

    உத்தரபிரதேசம் ஆக்ராவில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், " பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் நாட்களில், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதே மிகப்பெரிய சவாலாகும். பாஜகவால் சிதைக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இந்தியா கூட்டணி பாடுபடும்" என்றார்.

    • தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
    • 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்பு.

    உத்தரபிரதேச மாநிலம் கோக்ராஜ் அருகே கான்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இதில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.

    இதில் 5 பேர் தீயில் கருகி பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

    தீயணைப்பு படையினர் பல வண்டிகளில் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×