என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஐந்து முறை முக்தார் அன்சாரி எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார்.
    • 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. இவர் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 63 வயதான முக்தார் அன்சாரி மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மாரடைப்பால் முக்தார் அன்சாரி உயிர் பிரிந்ததாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சகோதரும் காசிப்பூர் தொகுதி எம்.பி.யுமான அப்சல் அன்சாரி, முக்தார் அன்சாரி ஜெயிலில் மெதுவாக கொல்லும் விசம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.

    ஐந்து முறை முக்தாரி அன்சார் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். ஐந்து முறையும் மவு சதார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவரது மறைவையொட்டி பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    2022-ல் இருந்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு நீதிமன்றங்களால் 8 வழங்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட 66 பேர் கொண்ட கேங்ஸ்டர் பட்டியலில் இவரது பெயரும் அடங்கும்.

    ஜெயிலில் அவர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிய நிலைக்கு சென்றார். 9 டாக்டர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மவு-வை சொந்த இடமாக கொண்ட முக்தார் அன்சாரிக்கு காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    • முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா.ஜ.க.வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய் மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

    வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.

    இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை. இனி நான் உங்களோடு எம்.பி.யாக இருக்க மாட்டேன். நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது. அதில், மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஆபத்தான முறையில் வீலிங் செய்யும் காட்சிகள் உள்ளது. வீடியோவின் பின்னணியில் ஒரு பஞ்சாபி பாடலும் இசைக்கப்படுகிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து கான்பூர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை மடக்கி பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


    • செலான்களையும் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டதோடு, சமூக ஆர்வலர்களும் போலீசாருக்கு வலியுறுத்தினர்.

    நொய்டா:

    கடந்த 25-ந்தேதி ஹோலி கொண்டாட்டத்தின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை வீசினர்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 இளம்பெண்கள் மோட்டார் சைக்கிளில் ரொமான்ஸ் செய்தபடி ஹோலி கொண்டாடியது தொடர்பான 3 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    அதில் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். அதன் பின்புறத்தில் 2 இளம்பெண்கள் எதிர்எதிரே அமர்ந்து கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை அரங்கேற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

    மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபரும், பின்னால் இருந்த 2 இளம்பெண்களும் ஹெல்மெட் அணியாத நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஸ்கூட்டர் ஓட்டிய வாலிபர் மற்றும் இளம்பெண்களுக்கு ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்த செலான்களையும் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிலையில் அவர்கள் மீது வெறும் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டதோடு, சமூக ஆர்வலர்களும் போலீசாருக்கு வலியுறுத்தினர்.

    இந்நிலையில் நொய்டாவின் செக்டார் 113 போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் மற்றும் இளம்பெண்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 279 (அலட்சியமாக வாகனம் ஓட்டி மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), 290 (பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுத்துதல்), 294 (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 336 மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மேலும் ரூ.47 ஆயிரத்து 500 என மொத்தமாக ரூ.80 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) அனில்குமார் யாதவ் தெரிவித்தார்.

    • மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன்.
    • நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன.

    மதுரா:

    பாலிவுட்டில் 'கனவுக்கன்னி' என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார்.

    75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

    இந்நிலையில், நடிகை ஹேமமாலினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் முதன்முதலில் மதுரா தொகுதியில் எம்.பி. ஆனபோது, சினிமா நடிகை என்ற முறையில் என் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்தது. முதலில், வெளியூர்காரர் என்ற பிரச்சனை காணப்பட்டது. தொகுதிக்கு அடிக்கடி வரமாட்டார் என்று பேசினார்கள்.

    அதை பொய்யாக்கும் வகையில், மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன். இப்போது வெளியூர்காரர் என்ற பிரச்சனை இல்லை.

    எனது முதல் பதவிக்காலத்தில் எனக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. பிறகுதான் படிப்படியாக தெரிந்து கொண்டேன்.

    நான் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அல்ல. ஆனால், எம்.பி.யாக இருந்தால், நான் விரும்பிய பணிகளை செய்ய முடியும்.

    நான் அரசியலில் குதிக்க விரும்பியது இல்லை. தெய்வ அனுக்கிரகத்தால் அது நடந்தது. நான் கிருஷ்ணர் பக்தை. நான் சில சேவைகள் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புவதால் இங்கு நிற்கிறேன். மதுரா இல்லாவிட்டால், நான் நின்றிருக்க மாட்டேன்.

    மதுரா தொகுதிக்கான எனது கனவு இன்னும் பாக்கி இருக்கிறது. அந்த முடிவடையாத பணிகளை முடிக்க மீண்டும் போட்டியிட விரும்பினேன். கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது. அதற்காக பா.ஜனதாவுக்கு நன்றி.

    பிரதமர் மோடி-ஹேமமாலினி கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் செய்த பணிகள் ஓட்டு பெற்றுத்தரும். நான் செய்த பணிகள் தெரிய வேண்டுமானால், தொகுதியை சுற்றி பாருங்கள்.

    நான் பிராமண பெண். ஜாட் இன மருமகள். அதனால், ஜாட் சமூகத்தினர் நிறைந்த இத்தொகுதியில் ஆதரவு இருக்கிறது.

    நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன. இப்போதும், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். மக்களுக்கும் பிடித்து இருக்கிறது. சினிமாவில் நல்ல வேடங்கள் வரும்போது நடிப்பேன். 3 முகங்களும் எனது மனதுக்கு நெருக்கமானவை.

    இத்தேர்தலில் ராமர் கோவில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சனை, கோர்ட்டில் இருப்பதால் அதுபற்றி பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் 2014-ல் 71 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியிருந்தது.
    • 2019-ல் 7 இடங்களை குறைந்து 64 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது.

    பிரதமர் மோடி மக்களவை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை ஐந்து கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வருகிற 30-ந்தேதி வேட்மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 31-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பாராளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மீரட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மீரட் தொகுதியில் ராமாயணம் டிவி தொடரில் நடித்த அருண் கோவில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா 370 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு தேர்தலை சந்திக்கிறது. உத்தர பிரதேசத்தின் மேற்கு பிராந்தியங்களில் பா.ஜனதா 2014-ல் 27 இடங்களில் 24-ல் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த 2019-ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து 8 இடங்களை கைப்பற்றியது.

    பா.ஜனதாவுக்கு 19 இடங்களே கிடைத்தது. இதனால் இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

    2019-ல் ராஜேந்திர அகர்வால் நிறுத்தப்பட்டிருந்தார். இவர் சமாஜ்வாடி ஆதரவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஹஜி யாகூப் குரேசியை சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வீழ்த்தியிருந்தார். இதனால் தற்போது பா.ஜனதா வேட்பாளரை மாற்றியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 2014-ல் 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2019-ல் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியால் 64 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சமாஜ்வாடி கட்சி ஐந்து இடங்களை தாண்ட முடியவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.

    சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் களம் இறங்குகிறது. பகுஜன் சமாஜ் கட்சி தனியாக நிற்கிறது. பா.ஜனதா ஆர்.எல்.டி., எஸ்.பி.எஸ்.பி., அப்னா தளம் (எஸ்), நிஷாத் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

    உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி முதற்கட்டமாகவும், மேலும் 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்டமாகவும், 10 தொகுதிகளுக்கு மே 7-ந்தேதி 3-வது கட்டமாகவும், 13 தொகுதிளுக்கு மே 13-ந்தேதி 4-வது கட்டமாகவும், 14 தொகுதிகளுக்கு மே 20-ந்தேதி 5-வது கட்டமாகவும், மேலும் 14 தொகுதிகளுக்கு மே 25-ந்தேதி 6-வது கட்டமாகவும், 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

    • ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
    • உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை

    பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.

    உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.

    பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

    • தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.

    லக்னோவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பிளிங்கிட் நிறுவனத்தின் சேவையை பாராட்டி ஒரு பதிவு செய்திருந்தார். ஆன்-லைன் மூலம் பொருட்களை வினியோகிக்கும் பிளிங்கிட்டில் ஸ்ரீவஸ்தவா தனது தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்காக அந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி இருந்தார். அதில் எனது அம்மா, குஜியா (வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு) செய்ய பயன்படுத்தும் அச்சு உடைந்திருந்தது. அதை மாற்றுவதற்காக பிளிங்கிட்டில் ஆர்டர் செய்திருந்தேன். 3 நிமிடங்களில் அதனை வினியோகம் செய்ததற்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது பதிவுக்கு பிளிங்கிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா பதில் அளித்து, 'உங்கள் பார்வையை மாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஹோலி' என்று பதிவிட்டார். ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.

    • செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
    • பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.

    அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது
    • அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்

    உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனிருத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
    • நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.

    அதன்படி, சஹாரன்பூரில் மஜித் அலி, கைரானாவில் ஸ்ரீபால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி, பிஜ்னூரில் விஜயேந்திர சிங், நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    ராம்பூரில் இருந்து ஜிஷான் கான், சம்பாலில் இருந்து ஷவுலத் அலி, அம்ரோஹாவில் இருந்து மொஸாஹித் ஹுசைன், மீரட்டில் இருந்து தேவ்ரத் தியாகி மற்றும் பாக்பத்தில் இருந்து பிரவீன் பன்சால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    கட்சி வேட்பாளராக கவுதம் புத்த நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கியும், புலந்த்ஷாஹர் (எஸ்சி) தொகுதியில் கிரீஷ் சந்திர ஜாதவ், அயோன்லா தொகுதியில் அபித் அலி, பிலிபிட்டில் அனிஸ் அகமது கான் என்ற பூல் பாபு, ஷாஜஹான்பூரில் தோதாரம் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டார்.
    • மோடிக்கு எதிராக 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கும் அஜய்ராய் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்தவர்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 3-வது முறையாக அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ள அவர் இந்த தடவை சரித்திர சாதனையுடன் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

    2014-ம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முதலாக அந்த தொகுதியில் போட்டியிட்டபோது மொத்தம் பதிவான வாக்குகளில் 56 சதவீத வாக்குகளை பெற்றார். 2019-ம் ஆண்டு 2-வது முறையாக போட்டியிட்டபோது 63 சதவீத வாக்குகளை பெற்றார்.

    இந்த தடவை 75 முதல் 80 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக அவர் தனி குழு ஒன்றை வாரணாசி தொகுதியில் களம் இறக்கி ஆதரவு திரட்டி வருகிறார்.

    பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்று 17 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் மேலிடம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது.

    இவர் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவார். கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் இவர்தான் மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டார். தற்போது 3-வது முறையாக மீண்டும் அஜராய் மோடிக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்.

    வாரணாசி தொகுதி 1991-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பிரதமர் மோடி அந்த தொகுதிக்கு சென்றபிறகு பா.ஜ.க.வுக்கு ஆதரவு பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி உறுதி என்பது அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு 2-வது இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலின்போது மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் சுமார் 3.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பெற்றார்.

    காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் சுமார் 75 ஆயிரம் வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஸ்டாலின்யாதவ் 18 சதவீத வாக்குகளுடன் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக வந்து 2-வது இடத்தை பிடித்தார். அப்போதும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 14 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி சார்பில் அஜய்ராய் களம் இறங்கி இருப்பதால் அவருக்கு 2-வது இடம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் அஜய்ராயால் எவ்வளவு வாக்குகள் வாங்க முடியும் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கும் அஜய்ராய் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்தவர். பிறகு பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்து அரசியலில் ஈடுபட்டார். 1996-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 3 தடவை அவர் உத்தரபிரதேச சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார்.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜ.க. மேலிடம் கொடுக்கவில்லை. இதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து மூத்த தலைவர்களில் ஒருவராக மாறினார்.

    நாளடைவில் அந்த கட்சியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக தேர்வானார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அவர் 3-வது முறையாக மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    ×