மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்த பா.ஜ.க: தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்

முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா.ஜ.க.வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்த பா.ஜ.க: தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்
Published on

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய் மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.

இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை. இனி நான் உங்களோடு எம்.பி.யாக இருக்க மாட்டேன். நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com