என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
    • ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!

    ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    "அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..

    • தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம்.
    • தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மரியாதைக்குரிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களால், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைச் சிறப்புடன் கையாண்டு, கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
    • பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    • அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியை கவினின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.
    • வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு வருகின்ற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது.

    இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.

    இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

    கடந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆன நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான்.
    • 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த விபரங்களை புத்தகங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உரிய விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

    தமிழகத்தில் இதுவரை நடந்த 39 அகழாய்வு பணிகளில் 33 அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடத்தப்பட் டது. கீழடி அகழாய்வு என்பது மிக முக்கியமானதாகும். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் புளோரிடா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது கீழடி விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர். அது யார் என எல்லோருக்கும் தெரியும்.

    கீழடி குறித்த தொன்மையை ஆய்வகத்தில் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும், முயற்சி செய்திருக்க வேண்டும். கீழடி தொடர்பாக மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது, அதற்கு தி.மு.க. அரசு என்ன விளக்கம் அளித்தது என தெரியவில்லை. இதைப் பற்றி தெரியாமல் பதிலளிக்க முடியாது.

    தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான். ஆனாலும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்.

    இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 196 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. முதல்வர்கள் இருந்தால் தான் கல்லூரி பேராசிரியர்கள் கட்டுப்பாடோடு இயங்குவார்கள். ஆனால் நிறைய கல்லூரிகளில் பேராசிரியர்களும் இல்லை. எப்படி தரமான கல்வி கிடைக்கும்.

    ஒவ்வொரு கல்லூரிக்கும் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்கள் 5.50 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 50 ஆயிரம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

    ஆனால் இந்த அரசு அறிவித்த எதையும் செய்யவில்லை. காலி பணியிடங்கள் இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். மருத்துவத் துறை, கல்லூரிகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இப்படி தமிழகத்தில் எல்லா துறையும் பின்னடைவாக உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. அரசு முறையாக செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கீழடி அருங்காட்சியகத்தை எடப்பாடி பழனிச்சாமி சுற்றி பார்த்தபோது அங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் லேப்டாப் கொடுப்பதை இந்த அரசு நிறுத்திவிட்டது. எங்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டும். உங்கள் ஆட்சியில் லேப்டாப் கொடுக்கப்படும் என உறுதி அளித்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என கூறினார்.

    அதற்கு எடப்பாடி பழனிச்சாமி லேப்டாப் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என கூறாதீர்கள். வாக்களிப்பது அனைவரின் கடமை. லேப்டாப் திட்டம் அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார். 

    • நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
    • தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்திற்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த பின்பு அ.ம.மு.க. இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தி.மு.க.விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

    அமித்ஷாவின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.

    அமித் ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித் ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும்.

    தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

    டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது.
    • கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ,

    1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம் என்று கூறினார்.

    பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கும் விதமாக ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை என்று கடம்பூர் ராஜூ விமர்சித்து பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன்.

    தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    வரும் 1-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 5-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.
    • வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறப்பு தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களை காவலில் எடுக்க முடிவு செய்து, இது தொடர்பான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வந்த பின் சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.

    இந்த நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 5 போலீஸ்காரரின் காவலை ஆகஸ்டு 13-ந்தேதி நீட்டித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
    • தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

    1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.

    அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

    தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

    தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார்.

    ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர்.
    • ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த முழு அமர்வு, இந்த வழக்கில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் கட்சிகள் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதிக்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக தமிழக அரசு ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு மாதம் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்த உத்தரவின்பேரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழக வெற்றிக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். மதச்சார்பற்ற சமூக நீதி என்பதுதான் எங்கள் கட்சியின் சித்தாந்தம். அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால் ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    குறிப்பாக எங்கள் கட்சி கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. எனவே கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்து, இதுதொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்டப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

    ×