என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் 80 சதவீதத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பும் பணிகளும் இன்று முழு வீச்சில் நடைபெற்றன.

    இன்று மாலைக்குள் அனைத்து மையங்களுக்கும் மின்னணு எந்திரங்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்படுகிறது.

    தேர்தல் பணியில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வரும் வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி 3 கட்டங்களாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் நாளை அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3726 மையங்களில் 708 மையங்கள் பதற்றமானவையாகும்.

    இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அதிகாரிகள் கண்காணிக்க முடியும். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


    தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார், 190 கம்பெனி துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், காவலர்கள் என 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களில் யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலையில் இருந்தே வாக்குப்பதிவு மையங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஓட்டு போட்டுவிட வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். இதனால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஓட்டு போட வருகை தந்து விடுவார்கள்.

    இதுபோன்று முன் கூட்டியே வரும் வாக்காளர்களை வரிசையில் நிற்க வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்காணித்து வாக்காளர்களை வரிசையாக அனுப்பி வைக்க உள்ளனர்.

    சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையம் வரை சென்று ஓட்டு போடுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பல மையங்களில் ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல மையங்களில் நுழைவுவாயல்களில் உள்ள படிகளே மாற்றுத்திறனாளிகளுக்கு தடைகளாக உள்ளன.

    சேத்துப்பட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாய்வு தளம் கைப்பிடிகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. ஊன்றுகோலை பயன்படுத்தி வரும் வயதான முதியவர்கள் இந்த சாய்வு பாதையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற குறைகளை வாக்குப்பதிவு மையங்களில் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    நாளை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தேர்தல் நாளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன. இதன் பின்னர் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை.
    • தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது.

    இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் 'இஞ்சிக்குழி' என்ற கிராமம் காரையாறு அணைக்கு மேல் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்பொதிகை மலையில் நடுகாட்டில் அமைந்துள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது வெறும் 7 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். இந்த மக்கள் இங்கு வாழை, மிளகு, கிழங்கு போன்ற விவசாயம் செய்தும், தேன் எடுத்தும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    இஞ்சிக்குழி பகுதிக்கு செல்ல எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காரையாறு அணையை கடந்துதான் இஞ்சிக்குழிக்கு செல்ல வேண்டும்.

    அணையை கடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது படகில் ஆட்களை ஏற்ற மறுப்பதால் காணி பழங்குடி மக்கள் மூங்கில் மற்றும் மோட்டார் சைக்கிள் டயரால் 'சங்கடம்' கட்டி அணையை கடக்கின்றனர்.

    இஞ்சிக்குழி மக்கள் அரிசி, பருப்பு உள்பட தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வாரம் ஒருமுறை காரையாறு பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இஞ்சுக்குழி மக்களுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் சென்றடையவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை. அரசு சார்பிலும் ஓட்டுப்போட வரும்படி எந்த அழைப்பும் விடுப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

    இருப்பினும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களிப்பதற்காக இஞ்சிக்குழி மக்கள் கீழே இறங்கி வரத் தொடங்கி உள்ளனர். காரையாறு அணை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.

    இங்குதான் இஞ்சிக்குழி மக்கள் உள்பட அனைத்து காணி பழங்குடி மக்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக 2 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, சுமார் 25 கிலோ மீட்டர் சவாலான காட்டு பயணம் மேற்கொண்டு கீழே இறங்கி வருகின்றனர். அவர்கள் காரையாறு அருகே சின்ன மைலாரில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இது குறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த காணி பழங்குடி மக்கள் கூறுகையில், 'நாங்கள் நடுக்காட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வனத்துறையினர் படகு தர மறுப்பதால் மிக சிரமத்தோடு அணையை கடந்து எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். வேட்பாளர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. யாரும் பிரசாரத்துக்கும் வருவதில்லை.

    நாங்கள் இதுவரை ஓட்டு போட்டும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதில்லை.

    ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அரசு சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரப்போகும் நெல்லை தொகுதி புதிய எம்.பி. எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் முபாரக் உசேன் என்பவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதே போன்று நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குமரன்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என குற்றச்சாட்டு.
    • 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் விடுத்தேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால் ஈபிஎஸ் மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதன்பிறகு, செய்தியாளர்களை சந்திதத் தயாநிதி மாறன் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாக எனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறி அவதூறு பரப்பியுள்ளார்.

    24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தேன். ஆனால், அதற்கு பதில் வரவில்லை. அதனால், ஈபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு அடுத்த மாதம் 14-ந்தேதி தேதி விசாரணைக்கு வருகிறது.

    தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னை தொகுதி மக்களுக்காக செலவழித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் அடையப்போகும் தோல்வியின் விரக்தியில் எனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அவர் பேசுவது அவருக்கு புரிகிறதா? என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் தி.மு.க.வினரை தாக்கினோம் என்று அவர் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
    • இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமனம்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 19) என்பவர் தெரிவிக்கையில்,

    நான் அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    இதுவரை எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் வாக்களிக்க செல்வதாக கூறி விட்டு செல்லும்போது நாமும் எப்போது வாக்களிக்க செல்வோம் என மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்தேன்.

    தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

    வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. அதனை முறையாக நிறைவேற்ற வேண்டும். அந்த வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைப்பது அரிது.

    இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே நமக்கு கிடைத்த ஜனநாயக கடமையை தேர்தலை புறக்கணிக்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    * தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்-3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467.

    * தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

    * மிக மிக பதட்டம் நிறைந்ததாக 181 வாக்குச்சாவடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 181 வாக்குச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    * தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    * தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-873 பேர், பெண்கள்-77 பேர்.

    * 950 வேட்பாளர்களில் 606 பேர் சுயேட்சைகள். மற்றவர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.

    * தமிழக வாக்காளர்களில் முதல் முறையாக நாளை வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420.

    * 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.

    * 30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 263.

    * 40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.

    * 50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.

    * 60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.

    * 70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.

    * 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.

    * தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    * தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது.

    * தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

    * சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரபிடோ பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு "கடமைக்கான சவாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.


    * நாளை ஓட்டுப்பதிவு எப்படி நடைபெறுகிறது என்பதை முழுமையாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அந்த வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் 100 சதவீதம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.

    * அரசு ஊழியர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை பெருமளவில் தடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. என்றாலும் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.

    * தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,297 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. உரிய ஆவணத்தை காட்டி இவற்றை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார்.
    • பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 31). இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனி மலேசியாவிற்கு வேலைக்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த அவர், அவ்வப்போது தனது மகளின் கையை பிளேடால் வெட்டியும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்து அவரிடம் பணம் கேட்டுள்ளார்.

    வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். மேலும், அவர் இதுகுறித்து மலேசியாவில் இருந்து அதிராம்பட்டினத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறினார். பின்னர், போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்து குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர், பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மனைவியை சொந்த ஊருக்கு வரவழைக்க தான் பெற்ற குழந்தையை துன்புறுத்தி வீடியோவாக எடுத்த இந்த கொடூர தந்தையின் செயல் அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு உட்பட்டு திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டி பாளையம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டி பாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1744 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 605 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேரும் என 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 பேரும், திருப்பூர் தெற்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 பேரும் உள்ளனர்.

    பெருந்துறையில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பேரும், மூன்றாம் பாலின த்தவர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர். பவானியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 பேர் உள்ளனர். இதுபோல் அந்தியூர் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 பேர் உள்ளனர்.

    மேலும், கோபிசெட்டி பாளையத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 1744 வாக்கு ச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர்.

    நாளை (வெள்ளி க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம் இரட்டை இலை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தானியக்கதிர் அரிவாள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பழனி யானை சின்னம், பா.ஜனதாவை சேர்ந்த ஏ.பி. முருகானந்தம் தாமரை சின்னம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதா லட்சுமி ஒலிவாங்கி சின்னம், ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி தொலைக்காட்சி பெட்டி சின்னம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்த ஜனார்த்தனம் வைரம் சின்னம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன் தென்னந்தோப்பு சின்னம், கார்த்திகேயன் ட்ரக் சின்னம், சதீஷ்குமார் தலைக்கவசம் சின்னம், சுப்பிரமணி வாயு சிலிண்டர் சின்னம், செங்குட்டுவன் ஆட்டோ ரிக்ஷா சின்னம், வேலுச்சாமி கரும்பு விவ சாயி சின்னம் ஆகிய சின்னங்களில் போட்டியிடு கிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன. வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.
    • தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்படுவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு காரணங்களுக்காக மீனாட்சி பஜார் அருகே உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.

    திருக்கல்யாணத்தன்று காலை 7 மணி முதல் இடைவெளி இல்லாமல் பக்தர்கள் அனைவருக்கும் கற்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வடை, பச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதற்கு தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.

    அரிசி, பருப்பு, எண்ணெய், நெய் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களும், பக்தர்களும் வழங்கி வருகின்றனர். எனவே விருந்துக்கு தேவையான பொருட்களை கொடுக்க விரும்புபவர்கள் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வழங்கலாம்.

    மேற்கண்ட தகவலை பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தெரிவித்துள்ளது.

    • 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டி உள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.

    விழாவின் 6-வது நாளான நேற்று இரவு தங்க-வெள்ளி ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    7-ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தங்க சப்பரத்தில் எழுந்தரு ளிய சுவாமி-அம்மன் 4 மாசி வீதிகளில் உலா வந்து கோவிலில் உள்ள சிவ கங்கை ராஜா மண்டகப்படி யில் எழுந்தருளினார். இன்று இரவு நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், யாளி வாகனத்தில் அம்ம னும் எழுந்தருளுகின்றனர்.

    ஒவ்வொரு நாள் விழாவும் வாழ்க்கையின் தத்துவத்தையும், பலனையும் எடுத்துகூறும் வகையில் நடந்து வருகிறது.

    8-ம் நாளான நாளை (19-ந்தேதி) காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்மன் தெற்காவணி மூலவீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டுச்சட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

    சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நாளை இரவு நடக்கிறது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது.

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனிடம் இருந்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் செங்கோல் பெறுகிறார். இதற்காக அம்மன் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தின செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.

    மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 24-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. 21-ந்தேதி சித்திரை மாத பிரதோஷத்தை முன் னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்து வார்கள். 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும். அன்றைய தினம் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    24-ந்தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது. விடுமுறை நாட்களில் பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பவுர்ணமி வருவதால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களான பீடி, சிகரெட், பாலிதீன் பை, மது, போதை வஸ்து பொருட்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவசியம் மருத்துவக் குழுவினர் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் பிரச்சனை ஏற்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.

    சென்னை:

    நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகத்தில் மத்திய அரசின் ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மற்ற 2 நிறுவனங்களை விட ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பிரச்சனை நிகழ்ந்து வந்தது.

    லாரிகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு லாரி உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கியாஸ் லாரி உரிமையாளர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் வாடகை, கூலி போன்றவற்றை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை உயர்த்தி தரமால் இழுத்தடித்து வந்ததால் உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.

    இதனால் இந்த 5 இடங்களில் இருந்து பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகள் வினியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்லவில்லை. தொழிற்சாலையில் சிலிண்டர்கள் தேங்கி கிடக்கிறது.

    சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கியாஸ் ஏஜென்சிகள் மட்டுமே சிலிண்டர்களை தொழிற்சாலையில் இருந்து ஏற்றி்ச் செல்கிறது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்த லாரிகள் மூலமே சிலிண்டர்களை பெறுவதால் வினியோகஸ்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. வேலை நிரந்தரம் முடிவுக்கு வராவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சமையல் கியாஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் கியாஸ் தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் விஜயன் கூறியதாவது:-

    சிலிண்டர்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை மற்றும் கூலி போன்றவை நிர்ணயித்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை உயர்த்தி தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது. பி.பி.சி. நிறுவனம் வாடகையை உயர்த்தி தர மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிளாண்ட்டிலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் சிலிண்டர்களை ஏற்றாமல் நிற்கின்றன.இதன் காரணமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×