search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டு போட 25 கி.மீ. மலை பயணம் செய்யும் காரையாறு காணி பழங்குடியின மக்கள்
    X

    இஞ்சிகுழியில் இருந்து காரையாறுக்கு செல்லும் பாதை மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி.

    ஓட்டு போட 25 கி.மீ. மலை பயணம் செய்யும் காரையாறு காணி பழங்குடியின மக்கள்

    • இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை.
    • தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது.

    இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் 'இஞ்சிக்குழி' என்ற கிராமம் காரையாறு அணைக்கு மேல் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்பொதிகை மலையில் நடுகாட்டில் அமைந்துள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது வெறும் 7 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். இந்த மக்கள் இங்கு வாழை, மிளகு, கிழங்கு போன்ற விவசாயம் செய்தும், தேன் எடுத்தும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    இஞ்சிக்குழி பகுதிக்கு செல்ல எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காரையாறு அணையை கடந்துதான் இஞ்சிக்குழிக்கு செல்ல வேண்டும்.

    அணையை கடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது படகில் ஆட்களை ஏற்ற மறுப்பதால் காணி பழங்குடி மக்கள் மூங்கில் மற்றும் மோட்டார் சைக்கிள் டயரால் 'சங்கடம்' கட்டி அணையை கடக்கின்றனர்.

    இஞ்சிக்குழி மக்கள் அரிசி, பருப்பு உள்பட தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வாரம் ஒருமுறை காரையாறு பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இஞ்சுக்குழி மக்களுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் சென்றடையவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை. அரசு சார்பிலும் ஓட்டுப்போட வரும்படி எந்த அழைப்பும் விடுப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

    இருப்பினும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களிப்பதற்காக இஞ்சிக்குழி மக்கள் கீழே இறங்கி வரத் தொடங்கி உள்ளனர். காரையாறு அணை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.

    இங்குதான் இஞ்சிக்குழி மக்கள் உள்பட அனைத்து காணி பழங்குடி மக்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக 2 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, சுமார் 25 கிலோ மீட்டர் சவாலான காட்டு பயணம் மேற்கொண்டு கீழே இறங்கி வருகின்றனர். அவர்கள் காரையாறு அருகே சின்ன மைலாரில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இது குறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த காணி பழங்குடி மக்கள் கூறுகையில், 'நாங்கள் நடுக்காட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வனத்துறையினர் படகு தர மறுப்பதால் மிக சிரமத்தோடு அணையை கடந்து எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். வேட்பாளர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. யாரும் பிரசாரத்துக்கும் வருவதில்லை.

    நாங்கள் இதுவரை ஓட்டு போட்டும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதில்லை.

    ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அரசு சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரப்போகும் நெல்லை தொகுதி புதிய எம்.பி. எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×