என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • திட்டத்தின் வழி பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி "கலைஞர் கைவினைத்திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான அரசு ஆணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு. பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல். பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள்.

    துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இத்திட்டத்தின் வழி பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. www.msmeonline.in.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது.
    • சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சுமார் ரூ.7,492 கோடி மதிப்பில் 5 கட்டமாக பல்வேறு போக்குவரத்து கழக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ரூ.22½ கோடியில் வாங்கப்பட்டுள்ள 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில் 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது.

    குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று 2 வகையான 500 பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640 விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்தும் நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640 விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,280-க்கும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,285-க்கும் விற்பனையாகிறது.

    இதனால் இந்த 3நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    நேற்று கிராமுக்கு ரூ.4 உயர்ந்து விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ. 3000 குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,640

    09-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    08-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    07-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    06-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-12-2024- ஒரு கிராம் ரூ. 104

    09-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    08-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    07-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    06-12-2024- ஒரு கிராம் ரூ. 101

    • வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொருட்கள், விளை நிலங்களை சேதப்படுத்துகிறது.

    இதனால் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானைகளை பார்த்தால் அருகில் செல்ல வேண்டாம். அதனை விரட்டவோ, செல்போனில் வீடியோ எடுக்கவோ கூடாது என்று அறுவுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும் வாலிபர்கள் சிலர் காட்டு யனையுடன் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை காட்டுயானை ஒன்று உலா வந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் யானையை பார்த்ததும் செல்போனில் வீடியோ எடுத்தார்.இதனை பார்த்த காட்டு யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது. தொடர்ந்து அந்த வாலிபர் அருகே இருந்த வீட்டுக்குள் சென்று மயிரிழையில் உயிர்தப்பினர்.

    இருப்பினும் வாலிபர் பதுங்கிய வீட்டை சுற்றி சுற்றி வந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் அந்த வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆட்டாவை முட்டி தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

    இதற்கிடையே செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை காட்டு யானை விரட்டும் காட்சிகள் இணையத்தளத்தில் வரைலாக பரவி வருகிறது.

    • வழக்கு வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
    • வழக்கை பரிசீலிக்க அரசுக்கு போதிய அவகாசம் அளித்து முன்கூட்டியே மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

    வருகிற பொங்கல் பண்டிகைக்கும் கடந்த ஆண்டை போல ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் விவசாயிகள் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசு வெல்லத்தைச் சேர்க்க உத்தரவிடக்கோரி விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் கூறுகையில்,

    சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டை அணுகியிருக்கிறோம். கடந்த ஆண்டு இந்த கோரிக்கைக்காக நீதிமன்றத்தை நாடினோம். அப்போது வழக்கை பரிசீலிக்க அரசுக்கு போதிய அவகாசம் அளித்து முன்கூட்டியே மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    அதன்படி நாங்கள் தற்போது ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து வெல்லம் கொள்முதல் செய்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி, நடப்பாண்டில் விவசாயிகளின் பொங்கல் பண்டிகையை இனிமையாக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

    மேலும் இடைத்தரகர்கள் பிரச்சனையை தவிர்க்க கொள்முதல் செய்யப்படும் வெல்லத்துக்கு உண்டான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

    • தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • புதுச்சேரி முதலியார்பேட்டை, மரப்பாலம், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    காட்டுப்பாக்கம், பூவிருந்தவல்லி, ஐயப்பன்தாங்கல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

    புதுச்சேரி முதலியார்பேட்டை, மரப்பாலம், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    கூடுவாஞ்சேரி:

    மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களும் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுவதாக புகார்கள் கூறப்பட்டது.

    மேலும், பலர் ஏழ்மை நிலையில் இருந்தும் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி வந்தனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது முதலே, குடும்ப தலைவிகளில் யார் யாருக்கு, எதன் அடிப்படையில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதில் தொடங்கி அதற்கு என்னென்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்பது வரை பல்வேறு குழப்ப நிலை நீடித்து வந்தது.

    பிறகு, உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும், பலர் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் இந்த தகவல் வெளியானது. தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இவ்வாறு உயிரிழந்த பெண்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், இன்னும் மகளிர் உரிமை தொகை வராத ஒரு சில பேருக்கு மட்டும் 2 மாதங்களில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின் பேசிய அவர்,

    "என்ன பண்ணலை நாங்க. தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை 90 சதவீதம் நிறைவேற்றி மக்களின் பேரன்பை பெற்றிருக்குற ஒரே தலைவர் தளபதி தான். தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி."

    "இன்னும் ஒரு சில பேருக்கு மகளிர் உரிமை தொகை வந்திருக்காது. இப்போ சொல்றேன்... இன்னும் 2 மாதங்கள் பொறுங்கள்.. இப்போ நிதிநிலை சரியில்ல. அதை சரி பண்ணிட்டு யார் யாருக்கெல்லாம் உண்மையிலேயே கஷ்டப்படுற பெண்களுக்கு வரலையோ அந்த ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி," என்றார்.

    அமைச்சர் தற்போது வாக்குறுதி அளித்துள்ள நிலையில் விடுப்பட்ட மற்றும் உண்மையில் கஷ்டப்படுகிற பெண்களுக்கு மாதந்தோரும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    தமிழகத்தில் 11, 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுவைக்கு மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • சினிமாவ சும்மா பார்க்கல. நாம காசு கொடுத்து பார்க்குறோம்.
    • கட்சித்தான் ஞாபத்தில் இருக்கணுமே தவிர நடிகர்கள் ஞாபகத்துக்கு இருக்கக்கூடாது.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர்:-

    நடிகர் எல்லாம் அரசியலுக்கு வரஆரம்பித்து விட்டார்கள். சினிமா பார்த்தோமா, வந்தோமா, அத அங்கேயே மறந்துவிட வேண்டும். சினிமாவ சும்மா பார்க்கல. நாம காசு கொடுத்து பார்க்குறோம். ரசித்தோமா அதோடு பார்த்துவிட்டு வெளியே வந்திடணும். அதுக்கப்புறம் கட்சித்தான் ஞாபத்தில் இருக்கணுமே தவிர நடிகர்கள் ஞாபகத்துக்கு இருக்கக்கூடாது.

    எடப்பாடி பழனிசாமின்னு ஒருவர் இருக்கிறார். அவர் இது விடியாத ஆட்சி... விடியாத ஆட்சி...ன்னு சொல்றாரு. என்ன விடியல. விடியா மூஞ்சிக்கு விடியாத ஆட்சி மாதிரி தான் தெரியும் என்றார்.

    • விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்கவேண்டும்.
    • 2 திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு, கலைஞர் கைவினைத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. அந்த திட்டத்தின் சிறப்பம்சங்களையும், அதன் மூலம் பயன் பெறுவதற்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றுதான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் "குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்கவேண்டும். அதேவேளையில், விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்கவேண்டும்" என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.

    இது, தங்கள் குடும்ப தொழிலில் 18 வயதுக்கு முன்பே ஈடுபட தூண்டும் வகையில் உள்ளது. மேலும் மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தை குறைத்து குலத்தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை.

    குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல் மாணவர்கள் உயர்கல்வி கனவை சிதைக்காமல் அதேநேரத்தில் இவ்வகை தொழிலில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என 'கலைஞர் கைவினைத் திட்டம்' முழுக்க, முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப, வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வகுப்பு அடிப்படையில் என சுருங்காமல், தொழிலில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தமிழ்நாடு அரசு சார்பாக வந்த அறிவிப்பில் விண்ணப்பிக்க தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும், எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
    • குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுவையில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழையும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 



    • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதிய வண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினேஷன் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பமேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு , ஏஈ கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு , காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராம தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்பிடி குவாட்டர்ஸ்.

    வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர் கிராஸ் காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, மத்திய குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1வது மெயின் ரோடு 8வது, எம்கேபி நகர் 1வது கிராஸ் தெரு முதல் 6வது குறுக்குத் தெரு, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, ஏ.பி.சி. கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, 42வது தெரு, சாமியார்தோட்டம் தெரு 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர் அனைத்து பிளாக், எஸ்ஏ காலனி, சர்மா நகர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×