என் மலர்
ராஜஸ்தான்
- 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது தார் பாலைவனம்
- சஹாரா பாலைவனம் தனது பரப்பளவை வேகமாக அதிகரிக்கும் என ஆய்வில் தகவல்
புவி வெப்பமயமாதல். இதுதான் உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும் வார்த்தை என்றால் மிகையாகாது. பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிட்டு வருகிறது. குறித்த காலத்தில் மழை பெய்யாமை, திடீரென அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் போன்றவை உலகை அச்சுறுத்தி வருகின்றன.
இதனால் உலக நாடுகள் புவி வெப்பமயமாதல் தடுக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நூற்றாண்டிற்குள் உலகில் உள்ள பல பாலைவனங்கள் இன்னும் தங்களது பரப்பளவை அதிகரித்துக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமான தார் பாலைவனம், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பசுமையாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தார் பாலைவனம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணத்தில் பரந்து விரிந்து 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவை கொண்டதாகும். உலகின் 20-வது மிகப்பெரிய பாலைவனமான தார், வெப்பம் அதிகம் கொண்ட 9-வது மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.
பல்வேறு ஆராய்ச்சிகள் உலக வெப்பமயமாதல் காரணமாக உலக பாலைவனங்களின் பரப்பு அதிகமாகும் என யூகித்துள்ளனர். சகாரா பாலைவனம் ஆண்டுக்கு ஆயிரம் சதுர கி.மீட்டர் என்ற வகையில் 2050-க்குள் அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆராய்ச்சி தொடர்பான பத்திரிகை ஒன்றில் புதிதாக வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், எதிர்பாராத வகையில் தார் பாலைவனம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய-பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியங்களில் 50 சதவிகித அளவு வறண்டுள்ள பகுதிகளில், 1901 முதல் 2015 வரை, 10 முதல் 50 சதவீதம் வரை மழைபொழிவு அதிகரித்துள்ளதாக இந்த ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது.
உலகம் தற்போது பசுமை எரிவாயுவிற்கு மாறி வரும் நிலையில், இந்த மழைபொழிவின் அளவு 50 முதல் 200 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபகாலங்களாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பருவமழை பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்தும் தெரிவித்துள்ள இந்த ஆய்வு, இந்திய பருவமழை பொழிவு கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்துள்ளதனால் மேற்கு மற்றம் வடமேற்கு பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கிறது.
சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கு, இந்த பருவமழை பொழிவு மிகவும் உதவியாக இருந்து அப்பகுதிகளை செழுமையாக வைத்திருந்ததாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய இந்தியப் பருவமழை பொழிவில் ஏற்பட்டு வரும் மேற்கு நோக்கிய விரிவாக்கம், இந்தியாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு பயன்படும். இது இப்பகுதிகளை ஈரநிலை பகுதிகளாக மாற்றலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவைப்படும் உணவு பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சச்சின் பைலட்டின் தந்தை குறித்து பா.ஜனதாவின் மால்வியா விமர்சனம்
- ஒட்டு மொத்த நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தல்
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். இளம் வயதுடைய சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் அசோக் கெலாட்டை முதல்வராக தேர்வு செய்தது.
இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதல் போக்கு சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாக வெடிக்க, சச்சின் பைலட் காங்கிரசில் தனதுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.-க்களை திரட்டி கெலாட்டிற்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், கெலாட் திறம்பட செயல்பட்டு தனது ஆதரவை நிலைநிறுத்திக்கொண்டார்.
பின்னர், மேலிடம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. அதன்பின் அடிக்கடி மோதல் ஏற்பட்ட போதிலும், இந்த வருட இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டபை தேர்தலும், அடுத்த ஆண்டு மத்தியில மக்களவை தேர்தல் வருவதாலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
சமீப காலமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறை குறித்து அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதவினர் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியையும், சச்சின் பைலட் தந்தையையும் பற்றி பா.ஜனதா சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மால்வியா ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில் மால்வியா, ''ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட் தந்தை), சுரேஷ் கல்மாடி ஆகியோர் இந்திய போர் விமானம் மூலம் கடந்த 1966-ல் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர், இருவரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகி, மந்திரி சபையில் இடம் பிடித்தனர். வடகிழக்கு மாநிலத்தின் சொந்த மக்கள் மீது குண்டுகள் வீசியதற்கு பரிசாக இந்திரா காந்தி அரசியலில் இடம் வழங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சச்சின் பைலட் ''நீங்கள் தவறான தேதி மற்றும் தவறான சம்பவத்தை சொல்கிறீர்கள். ஆமாம். இந்திய விமானப்படை விமானியான எனது தந்தை குண்டுகளை வீசினார். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் வீசினார். நீங்கள் சொல்வதுபோல் 1966-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி மிசோரமில் அல்ல. எனது தந்தை 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதிதான் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஜெய் ஹிந்த்'' என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் அசோக் கெலாட், ''இந்திய விமானப்படையில் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட் தைரியமான விமானியாக திகழ்ந்தார். அவர்களை இழிவுப்படுத்துவது, பா.ஜனதா இந்திய விமானப்படையில் தியாகம் செய்தவர்களை இழிவுப்படுத்துவதாகும். ஒட்டுமொத்த நாடும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மோகன் தாஸ் அக்கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்
- கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணையை துவங்கியது
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய-மேற்கு பகுதியை சேர்ந்தது குச்சமான் நகரம்.
இங்குள்ள ரஸல் கிராமத்தில் 15 வருடங்களாக வசித்து வந்தவர் 72 வயதான மோகன் தாஸ் எனும் ஆன்மிக குரு. இவர் அக்கிராமத்தில் உறவினர்கள் இருந்தாலும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று மாலை கிராமவாசிகளிடம் பேசி கொண்டிருந்தார். அதற்கு பிறகு உறங்க சென்றார்.
இன்று காலை அவரை காண கிராமவாசிகள் சென்ற போது அவர் தரையில் கிடந்தார். அவர் கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.
அவர் உயிரிழந்து கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் ஆசிரமத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த ஆன்மிக குருவின் சடலத்தை மீட்டனர்.
"இச்சம்பவம் கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறோம். உடற்கூராய்வு நடந்து முடிந்ததும் அவர் உடல், ரஸல் கிராமத்திலேயே வசிக்கும் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என குச்சமான் நகர காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார்.
- வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
- வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு சொந்தமான 3 எருமை மாடுகள் திருட்டு போயின. இதுகுறித்து சரண்சிங் செராவத் ஹர்மதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பரத்பூர் பகுதியில் இருந்து 2 எருமை மாடுகளை மீட்டு ஒப்படைத்தனர். அதில் ஒரு எருமை மாடு சில நாட்களில் இறந்து விட்டது. மேலும் இந்த எருமை மாடுகள் திருட்டு தொடர்பாக அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கு சவுமு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் எருமை மாட்டின் உரிமையாளரான சரண்சிங் செராவத் உள்பட மொத்தம் 21 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சரண்சிங் செராவத் எருமை மாட்டை ஒரு வாகனத்தில் ஏற்றி கோர்ட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.
இந்த சம்பவம் கோர்ட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியால் எருமை மாடு அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யபட உள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார்.
- லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த வாரம் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கு மயானத்தில் நடந்தது. அந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.
அந்த சமயம் மகளின் சிதை அருகே கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனே வெளியே இழுத்து காப்பாற்றினார்கள்.
இதில் லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் இறந்ததில் இருந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதனால் அவர் துக்கம் தாங்காமல் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
- சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
- உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில்.
பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர்.
சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார். அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர்.
அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
- ரெட் டைரி விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது
- பா.ஜனதா தலைவர்களில் யாருக்காவது முதலமைச்சராகும் தகுதி உள்ளதா? என கேள்வி
ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் அசோக் கெலாட். இந்த வருட இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக மந்திரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ரெட் டைரி குறித்து பேசினார்.
தற்போது ரெட் டைரி விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளனர். இந்த முறை வெற்றி பெற அசோக் கெலாட் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலை உள்ளது.
இந்திய உறுப்பு தான தினத்தின்போது, அசோக் கெலாட், சில உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களுடன் அசோக் கெலாட் காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அழ்வாரை சேர்ந்த பெண்மணி ஒருவர், சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தாங்களை முதலமைச்சராக பார்க்க விரும்புவதாக கூறினார்.
அதற்கு அசோக் கெலாட் பதில் அளிக்கையில் ''சில நேரங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும் என நினைப்பேன். ஆனால் முதல்வர் பதவி என்னை விட்டு விலகுவதில்லை'' என்றார்.
பின்னர் ராஜஸ்தான் பா.ஜனதா தலைவர்கள் குறித்து பேசுகையில் ''உங்களுடைய லெவல் என்ன?. முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்களா? உங்களை ராஜஸ்தான் மக்கள் முதலமைச்சர்களாக ஏற்றுக்கொள்வார்களா? அவர்களுடைய சொந்த முகத்துடன் தேர்தலை எதிர்கொள்ள நம்பிக்கை இல்லை. மோடி முகத்துடன் தேர்தலை சந்திப்பதாக ராஜஸ்தான் பா.ஜனதா தலைவர்கள் சொல்வது ஏன்?'' என பல கேள்விகளை எழுப்பினார்.
- அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரை விட்டு பிரிய விரும்பினார் கேஷவ்
- சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் கேஷவ் நாடியிருக்கிறார்
ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ளது ராம்கஞ்ச் மண்டி. இப்பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா என்கிற கேஷவ் (25).
கேஷவும் ஒரு பெண்ணும் 5 வருடங்களாக காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, கேஷவ் மீது அப்பெண் நண்பர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். கேஷவ் பிற நண்பர்களுடன் பழகுவதையும் தடை செய்தார். இதனால் இருவருக்குமிடையே பல முறை சண்டை நடந்திருக்கிறது.
கேஷவ், அந்த பெண் நண்பரின் பெயரை "லடாக்கு விமானம்" (போர் விமானம்) என்ற பெயரில் தனது அலைபேசியில் வைத்திருந்திருக்கிறார்.
அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரைவிட்டு பிரிய விரும்பிய கேஷவ், பிரேக்அப் செய்வதற்கான வழிகளை ஆராய்ந்திருக்கிறார்.
கூகுள், யூடியூப் போன்றவற்றில் தேடியதோடு இல்லாமல், சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் அவர் நாடியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதில் சாதகமான வழி பிறக்கவில்லை.
இந்நிலையில் கேஷவை வீட்டில் விட்டு விட்டு மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்கள்.
திரும்பி வந்தபோது எத்தனை முறை அழைத்தாலும், கேஷவ் வந்து கதவை திறக்கவில்லை.
அலைபேசியை தொடர்பு கொண்டபோதும் கேஷவிடமிருந்து பதிலில்லை.
சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, தூக்கில் சடலமாக தொங்கினார்.
கேஷவை தற்கொலைக்கு தூண்டியதாக கேஷவின் காதலி மீது குற்றம் சாட்டி கேஷவின் தந்தை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.
ஆனால், இதனை அந்த பெண் மறுத்துள்ளார். கேஷவ் இறப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கேஷவிற்கு பொருளாதார சிக்கல்கள் இருந்ததாகவும், அவருக்கு யாரும் உதவ முன் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
- தாசில்தார் மற்றும் காவல் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
- பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் காவல்நிலையத்தில் முறைப்படி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது.
மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வாட்டர் பாட்டிலில் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர். அத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பையில் போட்டுள்ளனர். வகுப்பறைக்கு திரும்பிய மாணவி, வாட்டர் பட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்தார். அத்துடன் மாணவர்கள் சிலர் சிறுநீரை நிரப்பியதும் தெரியவந்தது.
இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இன்று பள்ளி மீண்டும் திறந்ததும் தாசில்தார் மற்றும் அப்பகுதியில் உள்ள லுகாரியா காவல் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர். குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தடுக்க சென்ற போலீசார் மீதும் கற்களை வீசி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இந்த வன்முறை போராட்டம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் காவல்நிலையத்தில் முறைப்படி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
- மற்ற குட்டிகளுக்கு 'சிரஞ்சீவி' மற்றும் 'சிராயு' என்று பெயர் சூட்டப்பட்டது.
புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த ஒரு புலிக்குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
மற்ற குட்டிகளுக்கு 'சிரஞ்சீவி' மற்றும் 'சிராயு' என்று பெயர் சூட்டப்பட்டது.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச புலிகள் தினத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில், ரந்தம்போரின் டி-111 என்ற புலியின் மூன்று குட்டிகளுக்கு (இரண்டு புலிகள் மற்றும் ஒரு புலி) 'சிரஞ்சீவி', 'சிராயு' மற்றும் 'அவனி' என பெயரிடப்பட்டுள்ளது.
2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா பூனியாவின் நினைவாக டைக்ரஸ் டி-17 க்கு கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டது. அதேபோல், இப்போது குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாரா பெயரில் அவனி என்று பெயரிடப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லெகாரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் வெண்கலப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளன.
- சி20 தலைவர் மாதா அமிர்தானந்தமயி, ராஜஸ்தானின் தொழில்துறை அமைச்சர் சகுந்த்லா ராவத் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
ஜெய்ப்பூர்:
ஜி20 தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா ஏற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜி-20 சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிவில் சமூகங்களுக்கான கூட்டம் (சி20 கூட்டம்) இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தில் சி20 தலைவர் மாதா அமிர்தானந்தமயி, ராஜஸ்தானின் தொழில்துறை அமைச்சர் சகுந்த்லா ராவத், ஜெய்ப்பூர் எம்பி ராம்சரண் போஹ்ரா,
உலகெங்கிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் G20 அதிகாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 31ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இன்றைய கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ஜனநாயகம் செயல்படுவதற்கு வலுவான, அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை என்றார்.
தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் கலந்துரையாடல்களிலும், கூட்டு முயற்சிகளிலும் ஈடுபட உதவுவதாலும், தேசிய இலக்குகளை அடைவதற்கு உதவுவதாலும் இது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம். சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையில் மேம்பட்ட ஒத்துழைப்பு இருக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்,
சி20 கூட்டத்தின் நிறைவு நாளில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜி20 இந்தியா ஷெர்பா அமிதாப் காந்த் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
- ரத்தன்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தார்.
- பெண்ணிடம் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் பயணம் செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண் தனது பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை தேடி பாகிஸ்தான் சென்றார். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற அஞ்சு மதம் மாறி நஸ்ருல் லாவை திருமணம் செய்து கொண்டதாக பரப்பரப்பான தகவல் வெளியானது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் அதே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண் காதலனை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் ரத்தன்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் டிக்கெட் கவுண்டருக்கு சென்று பாகிஸ்தான் செல்ல டிக்கெட் வேண்டும் என கேட்டார். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர் இது பற்றி அங்கிருந்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அந்த பெண்ணிடம் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் பயணம் செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் துருவி.துருவி விசாரணை நடத்தியதில் தனக்கு சொந்த ஊர் பாகிஸ்தான் என்றும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து தனது அத்தை வீட்டில் தங்கி இருந்ததாகவும், தற்போது மீண்டும் பாகிஸ்தான் திரும்பி செல்வதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து விசாரித்த போது அவள் கூறியது அனைத்தும் பொய் என தெரிந்தது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது காதலனை சந்திக்க அவர் அந்த நாட்டுக்கு செல்ல முயன்றது அம்பலமானது. உடனே விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






