என் மலர்
ராஜஸ்தான்
- மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
- உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் தீப்பிடித்தது தெரிந்தவுடன் ஓட்டுநர் ஜிதேந்திர ஜாங்கிட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார்.
மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இல்லாத கார் முன்னாள் இருந்து பொதுமக்களை நோக்கி சாலையில் தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது.
உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ராஜஸ்தானில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஏழை மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.
ராஜஸ்தான் அரசின் முதன்மைத் திட்டமாக இது கருதப்படுகிறது. சுமார் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மூலம் 12 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்பங்களில் இருந்து 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தத் திட்டத்தில் தேர்வு பெற, மாணவிகள் மாநில வாரியத் தேர்வுகளில் 65 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும், 10 அல்லது 12 ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ தேர்வுகளில் 75 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாங்கப்பட்டு வந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தெற்கு ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் உள்ள வித்யாமந்திர் கல்லூரி மற்றும் ஹர்தேவ் ஜோஷி அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல், வெயிலில் காய்ந்தும், புற்கள் மண்டியும் உள்ளதால் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்கூட்டர்களை விரைவில் தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் ஆகியவற்றால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
- சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்
பெற்ற பிள்ளைகள் சோறு போடாமல் அடித்து துன்புறுத்தியதால் வயதான தாய்-தந்தை ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஹாசாரிராம் பிஸ்னாய் [70 வயது] மற்றும் அவரது, மனைவி சாவ்லி தேவி [68 வயது]. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.
அதில், 'மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- உதய்பூர் அரண்மனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை புரிந்தார்.
- ஜனாதிபதியின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளனர்.
அக்டோபர் 3 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் உதய்பூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.
அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் லக்ஷ்யராஜ் சிங் மேவார் மற்றும் அவரது மனைவி நிவ்ரிதி குமாரி, ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று அரண்மனையின் வரலாறு மற்றும் மரபுகளை விளக்கினர். ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே, துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் இருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்சமந்த் தொகுதி எம்பி மஹிமா குமாரி மேவார் மற்றும் அவரது கணவரும் நாத்வாரா எம்எல்ஏ விஸ்வராஜ் சிங் மேவார் ஆகிய 2 பாஜக பிரதிநிதிகளும் திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை விமர்சித்துள்ளனர்.
அரண்மனையின் சொத்து தகராறு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அரண்மனைக்கு ஜனாதிபதி வந்தது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய மஹிமா குமாரி மேவார், "அரண்மனையின் சொத்து தகராறு தொடர்பாக ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து அவரது வருகையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். ஆனாலும் அவர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க உதய்பூர் மாவட்ட ஆட்சியரைதொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை" என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வருகை தனிப்பட்ட முறையிலானது என்றும் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடவில்லை என்றும் உதய்பூர் ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் விளக்கம் அளித்தார்.
- பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.
- கிருஷ்ணர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.
இந்தியா என்பது அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரான் [Baran] நகரில் நடத்த சுயம்சேவக் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா அல்லது பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.

இந்து என்ற பதம் பலகாலம் கழித்தே வழக்கத்தில் வந்தது.இந்துக்கள் அனைவரையும் அரவணைப்பவர்கள், அவர்கள் ஒற்றுமையோடு வாழ்பவர்கள். சாதி, மதம், மொழி என்ற பாகுபாடுகளைச் சண்டைகளை மறந்து இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்.
ஆனால் அனைத்துக்கும் கடவுளை எதிர்பார்க்கும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. ஆனால் தனது பிரச்சனைகளைத் தானே கவனித்துக் கொள்பவர்களுக்குத்தான் கடவுள் உதவி செய்வார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தயாராக இருந்ததை அறிந்தபின்னரே பகவான் கிருஷ்ணர் அவர்களுக்குத் தேர் ஓட்டினார்.
அவர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் தங்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பாரத மாதாவைக் காப்பாற்ற நாம் முயற்சி எடுத்தாக வேண்டும். அந்த முயற்சியில் நம்மோடு அனைவரையும் அரவணைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நமது கலாச்சாரம், பாரம்பரியம் என்று தெரிவித்தார்.
- ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது.
போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்ட படி பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா, "என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார், அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. மகான்களின் பாதுகாப்புக்காகவே போலீஸ் வாகனம் பின்னல் சென்றது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி பயண செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விதிகளை மீறி ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக 5000 ரூபாய் அபராதமும் சீட் பெல்ட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதமும் செல்போனில் பேசியபடியே பயணம் செய்தற்காக 1000 ரூபாய் அபராதம் என மொத்தமாக 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியம் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார்.
- காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார்.
ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவி விலகிய நிலையில் அந்த பதவிக்கு பாஜகவை சேர்ந்த குசும் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மேயராக பதவியேற்றுக்கொள்ளும் விழா சமீபத்தில் நடந்துள்ளது.
இந்த அரசு விழாவுக்கு தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியத்தையும் கங்கை நீரையும் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார். அந்த சடங்கில், சமீபத்தில் பாஜக பக்கம் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அதை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார். இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில் அங்கு நடந்த ஊழலை சுத்தப்படுத்தவே இந்த சடங்கை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார்.
- முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று ரியா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸும், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார்.
இப்போட்டியில் 19 வயதே ஆன ரியா சிங்கா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு ஊர்வசி கிரீடத்தை சூட்டினார். இதனையடுத்து ரியா சிங்காவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
இந்த பெரிய வெற்றிக்கு பிறகு, ரியாவால் தன் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. பிரகாசமான புன்னகையுடன் பேசிய ரியா, இன்று நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றேன். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்த கிரீடத்திற்கு நான் தகுதியானவள் என்று கருதும் அளவுக்கு இந்த நிலைக்கு வருவதற்கு நான் நிறைய வேலை செய்துள்ளேன். முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நடிகையும், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஊர்வசி ரவுத்தாலா கூறுகையில், இந்த ஆண்டு மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- ராஜஸ்தானில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
- எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று ஊழியர் ஒருவர் தெரிவித்தார்
டெல்லி-மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை போடப்பட்டால் டெல்லி-மும்பைக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12-13 மணிநேரமாக குறையும் என்று சொல்லப்படுகிறது.
ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இந்த விரைவுச் சாலை பயணிக்கிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 80% பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் 1 வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
இந்த பள்ளங்கள் குறித்து பேசிய ஊழியர் ஒருவர், எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று தெரிவித்தார். ஊழியரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தண்ணீர் கசிவு காரணமாக தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என்றும் பள்ளம் விரைவில் சரிசெய்யபட்டது என்று தௌசாவில் உள்ள விரைவுச் சாலையின் திட்ட இயக்குநர் பல்வீர் யாதவ் தெரிவித்தார்.
- குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
- குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அருகில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 18 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று காலை குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், கிராமத்தினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
- இதையடுத்து, அந்தக் குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஜெயப்பூர்:
ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.பி.சி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.
- வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது.
- வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள்.
நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து டிராக்டரை காப்பாற்ற போலியாக சாமியாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர், கடனாக டிராக்டர் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொகையை சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டிராக்டரை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். இதை அறிந்த விவசாயி குடும்பத்து இளம்பெண் திடீரென சாமி வந்ததுபோல ஆடத் தொடங்கினார். அவர் கைகளில் குங்குமத்தை பூசிக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களை நோக்கி, வண்டியை எடுக்காதே, எடுத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று சாபமிட்டாள்.
வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது. வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள். இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ரசித்துள்ளனர்.






