என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார்.
    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் தங்களின் ஆசி தனக்கு அரசியலிலும் தேவை என தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி, அவருக்கு வாழ்த்து கூறினார்.

    பின்னர் முன்னாள் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே வருகிற 2026-ம் ஆண்டில் பயணிக்கும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற சில வழிமுறைகள் உள்ளது. நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும்.

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என கூறும் திருமாவளவன் போன்றோர், ஆணவ கொலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான கண்டனத்தை கூறுகிறார்களே தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனம் வைக்க தயங்குகின்றனர்.

    ஆணவ கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலிமையாக இவர்கள் சொல்வதில்லை. ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஒரு தற்கொலை நடந்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் விளம்பர அரசியல் தான் நடக்கிறது.

    வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசு திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். கடந்த 4 ½ ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் குறையை தீர்க்காமல், கேட்காமல் என்ன செய்தார்கள்.? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • போராட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இந்தநிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

    கடந்த 28-ந் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் 'எஸ்மா' (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே விரைவில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
    • சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வண்ணம் தீட்டாத, களிமண் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைத்தனர். இதனால், நீர் நிலை மாசுபடவில்லை. தற்போது, வண்ணம் தீட்டிய சிலைகளை வைத்து வழிப்பட்டு, கரைப்பதால் நீர்நிலைகள் மாசடைகிறது.

    இதனை தவிர்க்க விரிவான நெறிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது. சுற்று சூழலுக்கு நலம் பயக்க, விநாயகர் சிலை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும். சிலைகளை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகள் தயாரிக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள், உள்ளாட்சி துறைகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன்பதிவு செய்ய வேண்டும். பிரசாதங்கள் வழங்க வாழை இல்லை, ஆலம் மற்றும் சால் இலைகள், மக்கும் காகித கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

    பூக்கள், இலைகள், உடைகள் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை, சிலைகளை நீர்நிலைகளில் விடுவதற்கு முன்பாக அகற்றப்பட்டு, சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து, வண்ண குறியிடப்பட்ட தொட்டிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து போட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே புதுச்சேரி-விழுப்புரம் இடையே தினசரி காலை இயக்கப்படும் மெமு ரெயி்ல்கள் ஏற்கனவே வருகிற 5-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விழுப்புரம்-புதுச்சேரிக்கு தினமும் காலை 5.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66063) வருகிற 6-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66064) வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் காலை 6.35 இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:66051) வருகிற 10, 12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் 15 நிமிடங்கள் காலதாமதமாக புதுச்சேரி வந்தடையும்.

    திருச்சி-காரைக்காலுக்கு காலை 8.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76820) வருகிற 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் காரைக்கால்-திருச்சிக்கு மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76819) காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தஞ்சாவூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் சேவை காரைக்கால்-தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார், He expressed his support by carrying TVK party flag into sea.
    • அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் த.வெ.க. கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார்.

    இவர் த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

    அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார். பின்னர் ஆழ்கடலுக்குள் த.வெ.க. கொடியை அசைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

    • பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
    • பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரிய காலாப்பட்டு தனியார் நர்சிங் கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி போல் பேசினார்.

    அதில், பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார்.

    இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியையிடம் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    அதில், பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பேராசிரியை ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 362-ஐ மர்மநபருக்கு அனுப்பினார்.

    அதன் பிறகு சிலரிடம் பேராசிரியை விசாரித்தபோது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து பேராசிரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த 3 பேர் ராஜினாமா செய்தனர்.
    • இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிதாக 3 பேரை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

    புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட்ட நிலையில், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் புதிய நியமன எம்.பி.க்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
    • புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.

    இதேபோல் சுகாதார துறையின் மருந்தாளுநர் பதவிக்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும்.

    ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.

    அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை 2 வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வருகிற 28-ந் தேதி ஒத்தி வைத்தனர்.

    புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் 2 வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது.
    • பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கைலாஷ் நாதனுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது. தனது அதிகாரத்துக்கு உட்பட்ட துறையில் இயக்குனரை கூட நியமிக்க முடியாமல் முதலமைச்சராக பதவியில் தொடர்வது தேவையா? என ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை வழக்கம் போல கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் டென்னிஸ் விளையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில்லில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

    அங்கு அவரை துணை சபாநாயகர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நமது விருப்பப்பட்டதை செய்ய முடியாத நிலை உள்ளது. சிறிய பிரச்சனைகளில் கூட கவர்னர் மாளிகையின் தலையீடு உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    அப்போது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம், உறுதுணையாக இருப்போம் என்று எம்.எல்.ஏ.க்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டு, அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரின் வீட்டில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசினர்.

    அமைச்சர் திருமுருகன், காரைக்கால் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா ஆகியோரும் புதுவைக்கு விரைந்துள்ளனர். அமைச்சர் தேனீஜெயக்குமார் உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். கட்சியில் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளார்.

    புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வரவில்லை.

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
    • பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்தநிலையில், புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது. பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

    • அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    முழுஅடைப்பின்போது புதிய பஸ் நிலையம், அரியாங்குப்பம், கன்னியக்கோவில், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பந்த் போராட்டத்தின்போது பஸ், ஆட்டோ, டெம்போ போன்றவற்றை இயக்கமாட்டோம் என்று ஏ.ஐ.சி.டி.யு., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. அதேநேரத்தில் அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

    போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உரிய அனுமதியின்றி அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது நியமன விதிகளுக்கு எதிரானது ஆகும்.

    எனவே அரசுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், கழகங்கள், சங்கங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு அவசர தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது. உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது. அத்தகையவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணியில் சட்டம் - ஒழுங்கு, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் என 1,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
    • கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கூட்டணி அமைச்சரவையில் பா.ஜனதா சார்பில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்தார். இதனை கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பா ஜனதா மாநில தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி. ராமலிங்கம் பா.ஜனதா மாநில தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை முறையாக அறிவிக்கப்படுகிறது.

    இவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) மாலை பதவி ஏற்க உள்ளனர். மாலை 4 மணிக்கு ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்கும் விழா கவர்னர் மாளிகையில் நடக்கிறது. அங்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அறையில் 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    தொடர்ந்து, முதலியார் பேட்டை சுகன்யா கன்வென்சன் சென்டரில் பா.ஜனதா புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு மற்றும் புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.

    விழாவில் பா.ஜனதா அகில இந்திய பொது செயலாளர் தருண் சுக், மேலிட பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

    ×