என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை - அமைச்சர் நமச்சிவாயம்
- தவறான கருத்துகளை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.
- ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விஜய் பேசினார்.
இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜயை பொறுத்தவரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
தவறான கருத்துகளை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை. பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரியில் எதையாவது பேச வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அவர் பேசியது கூட 12 நிமிடங்கள் தான். ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்கு பதிலாக பணமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம். அரிசியாக போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நேரடி பணப் பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய அரசின் ஒப்புதலோடு இலவச அரிசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார்.
தேர்தல் என்று வரும்போது நிறைய கூட்டணிகள் பேசுவார்கள். எந்த நேரத்தில் யாருடன் எந்த கட்சி செல்லும் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும். இன்று எதைவேண்டுமானாலும் அனுமானமாக பேசலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவாகும்.
புதுச்சேரி மக்கள் அரசியலை நன்கு அறிந்தவர்கள். இந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் திட்டங்கள் குறைவின்றி நடைபெறும் என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும்.
அதனால் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வழக்கம். அந்த அடிப்படையில் விஜயும் சொல்லி சென்றுள்ளார். 2026-ல் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு அவரால் எங்கும் கூட்டம் நடத்த முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட உள்ளரங்கத்தில் 2 ஆயிரம் பேரைக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தினார்.
புதுச்சேரியில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததால் விஜய் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






