என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது.
    • நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த 9.01.2014-ல் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் தனது போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற சிலர் முயற்சிப்பதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் சோலைநகரை சேர்ந்த சாரங்கபாணி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கிய நாதன், சாரங்கபாணி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரியில் போலியான ஆவணங்கள் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தவர்களுக்கு முதல்முறையாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ந் தேதி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்து வருகிறார்கள். எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காரை க்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேற்று இரவு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், போலீஸ் தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.விழாவில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு, சுமார் 1400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 150-க்கும் மேற்பட்டசி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் பக்தர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 7 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு காவல்துறை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்.

    புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து இந்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து இலவச பஸ்களை அரசு இயக்க உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத வகையில் ட்ரோன் காமிராக்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. காவல்துறை மூலம் "மே ஐ ஹெல்ப் யூ" பூத்கள் பல இடங்களில் நிறுவப்படும். இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.சனிப்பெயர்ச்சியை முன் ஏற்பாடுகள் தவிர, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு பல்வேறு வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் காலி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மேலும், கல்வித்துறையில் தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வது தற்காலிக நடவடிக்கைதான். புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்து, அரசாணை வெளிவந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் இணைய கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும். இந்த 3 மாதங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல், வலுப்பெறுவதற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது. மிக விரைவில் கல்வித்துறையில் அத்தனை காலியிடங்களை நிறைவாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.
    • தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், அங்கு வேலை பார்த்த 14 தொழிலாளர்கள் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களுக்கு, உடனடியாக பிம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில், 11 பேர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். 3 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதில் புதுச்சேரி பிருந்தாவனம் 3-வது குறுக்கு தெரு வெங்கடாசலம், காலாப்பட்டை சேர்ந்த ரகுபதி, யுவராஜ், கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் தமிழக பகுதியான கிளியனூரை அடுத்த தென் சிறுவலூரை சேர்ந்த நெடுஞ்செழியன், (34) சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி இரவு இறந்தார்.

    இந்த நிலையில் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜ் (வயது 18) சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில், மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.

    மேலும் நெடுஞ்செழியன் மனைவிக்கு தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்கவும், அவரின் 2 மகன்களின் கல்லூரி படிப்பு செலவையும் ஏற்கவும் ஒப்புக்கொண்டது.

    அதன்படி தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன்.
    • இணையதள பயன்பாட்டாளர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது குறித்து 2 துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்துதான் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது போல் செய்திகள் வருகிறது. அது தவறானது.

    நான் ஆந்திராவில் 6 பழங்குடியின கிராமங்களை தத்து எடுத்துள்ளேன். அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன். இப்படி இருக்கையில் நான் எப்படி பழங்குடியினரை அரசு விழாவில் தரையில் அமர வைத்ததற்கு காரணமாக இருக்க முடியும்?

    எனது ஆளுமைக்குட்பட்ட புதுவையில் இத்தகைய நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.

    நாங்கள் மேடையின் கீழ் அமர்ந்திருந்ததால் எங்களுக்கு பின்னால் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்க்க முடியவில்லை. மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது.

    புதுவையில் நான் சூப்பர் முதல்வர் என செய்திகள் வருகிறது. நான் சூப்பர் முதல்வர் இல்லை. ரங்கசாமி தான் சூப்பர் முதல்வர். நான் தினமும் என்னை பற்றி என்ன செய்தி வந்திருக்கிறது என பார்ப்பதில்லை. குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் துறை அதிகாரிகளிடம் பேசி, புதுவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைதான் பார்ப்பேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 5500 ஹெக்டர் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக முளைத்து வரும் நிலையில், மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் முறைப்படி வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால், சுமார் 4300 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது.வடிகால் வாய்க்கால்க ளை போர்க்கால அடிப்படை யில் தூர்வாரவே ண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை யிடம் முறையிட்டும், வேணாள்துறையை நடவடிக்கை எடுக்க வலியுறு த்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பாதிப்பிற்குள்ளாகிய செல்லூர் பகுதி விவசாயி கள், வடிகால் வாய்க்காலை தூர்வாராத பொதுப் பணித்துறையையும், கண்டுகொள்ளாத வேளாண்துறை யையும் கண்டித்து, வடிகால் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, போர்க்கா ல அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வாரி, வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படி யான மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாவட்ட வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவிப்பு.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.

    • நேற்று காலை முதலே புதுவையில் வானம் மற்றும் மந்தாரமுமாக இருண்டு இருந்தது.
    • தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது.

    இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் புதுவை- காரைக்கால் பகுதியில் வருகிற 19-ந் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்கள் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே புதுவையில் வானம் மப்பும் மந்தாரமாக இருண்டு இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. சுமார் 6 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது.

    இரவு 8 மணிக்கு கன மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் மழை கொட்டியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி உள்ளிட்ட பல தெருக்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையால் வழக்கமாக பாதிக்கப்படும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவாணன் நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. ஒரு சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இன்றும் (செவ்வாய்கிழமை) காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • புதுவையில் நடந்த சோதனையில் எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த வடமாநில வாலிபர் பாபுவை கைது செய்தனர்.
    • 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    சட்ட விரோதமாக வெளிநாட்டினரை இந்தியாவில் பணியமர்த்தியதாக வந்த புகாரை தொடர்ந்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 44 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவையில் நடந்த சோதனையில் எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த வடமாநில வாலிபர் பாபுவை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து போலி ஆதார் கார்டு, உயர்ரக செல்போனை பறிமுதல் செய்தனர்.

    அவரை சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். கூட்டாளிகள் சிக்கினர்

    அவர் கொடுத்த தகவல்படி பாபுவுடன் ஒரே அறையில் தங்கி இருந்த மேலும் 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொல்கத்தாவை சேர்ந்த ஆரிப்ஷோக் (வயது 20), லால்கோலா பகுதியை சேர்ந்த சதீம் ஷீக் (30) என்பதும், கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது 160 கிராம் அளவில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தார்.

    அவர்கள் வேறு ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சர்க்கரை மற்றும் பிரஷர் நோய்க்கும் அவர் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
    • வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை யென கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் கண் ஆபரேஷன் செய்துள்ளார். மேலும், சர்க்கரை மற்றும் பிரஷர் நோய்க்கும் அவர் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அடிக்கடி உடல் வலி இருப்பதாக, தனது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த அவர் அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு செல்வதாக கூறி சென்றார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை யென கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அதே ஊரைச்சேர்ந்த மதிவாணன் என்பவர், ராணி முந்திரி தோப்பில் தூக்கில் தொங்குவதாக கூறியதை அடுத்து, ராணியின் மகன், மாதவன் என்பவர், சம்பவ இடத்திற்கு சென்று, ராணி தூக்கில் தொங்குவதை உறுதி செய்து, கோட்டுச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம்.
    • இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நாகை மாவட்டம் திட்டச்சேரி வாணியத்தெருவை ச்சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சத்தியவாணி (வயது24) என்பவர், காரைக்கால் நேரு வீதியில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

    இவர் வழக்கமாக தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 4-ந் தேதி வழக்கம் போல், இருவரும் வேலைக்கு சென்றனர். அப்போது, அதே கடையில் வேலை செய்யும் ஓடுதுறையைச்சேர்ந்த சினேகா என்பவரையும் ஸ்கூட்டியில் ஏற்றிகொண்டு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மாலை 5 மணிக்கு, தந்தை சங்கர் சத்தியவாணிக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தொடர்ந்து, சங்கர் பல இடங்களில் தேடியும் சத்தியவாணி குறித்து தகவல் தெரியாததால், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

    • பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
    • கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது.

    இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோன் உள்ளது.

    இதன் மாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.

    அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. பாபு (வயது 26) என்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அவரை கொண்டுசென்று விசாரணை நடத்தினர். அவர் வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுவை உட்பட வெளி மாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்துள்ளாரா?

    எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றுள்ளார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா? ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா? பயங்கரவாத செயல்களுக்கு துணை போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுவையில் அவர் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் போலீசார் சோதனையிட்டதில் எந்த தகவலும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் அனைத்தும் போலியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

    புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×