என் மலர்
புதுச்சேரி
- காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
- காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.
புதுச்சேரி:
பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது.
ஆனால் காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.
மோட்டார் பொருத்தப்பட்ட இந்த படகுகள் தலா ரூ. 1 கோடிக்கு மதிப்புள்ளவை. இதனால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.
- பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
- ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை சிவசங்கர், ஏனாம் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோசியேட் எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் பங்கேற்று வருகின்றனர்.
அரசு பதவிகளில் இல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைந்தது முதலே வாரிய பதவி கேட்டு வருகின்றனர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பா.ஜனதாவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்தில் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அலவன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஆனாலும் அங்காளனுக்கு அரசு இதுவரை புதிய கார் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனது பழைய காரின் சாவியை சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார்.
ஓடாமல் இருந்த காரை பட்டி பார்த்து தனக்கு வழங்கியுள்ளதால் செல்லுமிடமெல்லாம் அது மக்கர் செய்து நிற்பதாகவும் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காருக்கு ரூ.30 ஆயிரம் டீசல் அலவன்ஸ் வழங்கும் நிலையில் தனது காருக்கு வழங்கவில்லை என்பதால் காரை திரும்ப ஒப்படைத்துள்ளதாக அங்காளன் தெரிவித்தார்.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். இவர் ஏற்கனவே உழவர் கரை சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதாவில் வாய்ப்பு கேட்டு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதனால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பளிக்காத பட்சத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியவில்லை.
மற்றொரு பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.
இதோடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி புதுவை பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கும் பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
- ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது.
- அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று புதுவை வந்தார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார்.
4 வருடத்திற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதியான இன்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
பொன்னொளி பூமிக்கு வந்த நாள் கடைபிடிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் தங்க வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.
இதற்காக ஏராளமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். இந்த நிலையில் அரவிந்தர் நினைவிடத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகையொட்டி ஆசிரமத்திற்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், வெளிநாட்டவர், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதிகளவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.
மேலும் தமிழக கவர்னர் வருகையையொட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தமிழக கவர்னர் ரவி திடீர் வருகையால் அரவிந்தர் ஆசிரம வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
சுமார் அரைமணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த கவர்னர் ரவி புறப்பட்டு சென்ற பிறகே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
- ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் கனவு.
புதுச்சேரி:
புதுவை அடுத்த விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. உலக மக்கள் அனைவரும் எல்லைகளை கடந்து, சாதி, மதம், இன என பாகு பாடுகளின்றி ஓரிடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் கனவு.
ஆரோவில் சர்வதேச நகரத்தின் மூலம் செயல் வடிவமாக்கியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என அழைக்கப்படும் மிர்ரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் ஆரோவில் சர்வதேச நகரம் கட்டுமான பணிகள் தொடங்கியது. அதனை யொட்டி, ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ந்தேதி ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரோவில் 57-ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டர் வளாகத்தில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீபிழம்பின் ஒளியில் மாத்ரி மந்திர் (அன்னையின் வீடு) தங்க நிறத்தில் ஜொலித்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
- சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பொதுக்கூட்டம் காலாப்பட்டு தொகுதி கருவடிகுப்பத்தில் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
அமைச்சர் உதயநிதி சனாதத்தை பேசியதில் தவறில்லை. சனாதானத்தை பற்றி நாங்கள் கூறியதை திரும்ப பெற மாட்டோம். அது பற்றி பேச வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். கூட்டணியில் தான் இருக்கிறோம்.
காங்கிரசை காப்பாற்றப்போவது நாம்தான். சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் சொத்து மதிப்பை பார்க்கிறார்கள். சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தால் வழக்கும் தொடர்வார்கள்.
ரவுடி, கொலை செய்தவர்களை எங்கும் தேட வேண்டாம், எல்லோரும் பா.ஜனதா அலுவலகத்தில் உள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.
ஆனால் சிலர் நம்மோடு அவரை வர விடவில்லை. ஓட்டு பிரிந்தது, அதன் விளைவு தி.மு.க. தோற்றது.
பிரதமர் மோடி அரசில் ரூ.7.5லட்சம் கோடி கையாடல் செய்ததாக மத்திய தணிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளது.
தி.மு.க. ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்ததாக கூறியதற்காக 1¾ வருடம் சிறையில் இருந்தோம். தோலை தின்றவனுக்கு 1¾ வருடம் சிறை என்றால், 2024-க்கு பிறகு ஆயுள் கைதியாகத்தான் பிரதமர் மோடி இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை.
- நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்பது தெரியவந்தது.
தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு நேற்று தடை விதித்தது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரையின் பேரில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
தடையை மீறி பஞ்சுமிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை என தெரிவித்தார்.
நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நிறம் கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கடற்கரை சாலையில் சாட்டை அடித்துக்கொண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுத்த கும்பலை குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையிலான குழுவினர் பிடித்தனர்.
- குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி சிக்னல்களில் நிற்கும் வாகனங்களில் இருப்பவர்களிடமும், டிரைவர்களிடமும் குழந்தையுடன் வந்து பிச்சை எடுப்பதும், வாகனங்களை தட்டி பொருட்களை விற்க முயல்வதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு, சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி இணைந்து குழந்தைகளுடன் யாசகம் எடுப்போரை 3 வாகனங்களில் சென்று மீட்கும் பணியை கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர் வினயராஜ், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை, புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஜிப்மர் உள்பட 10 இடங்களில் குழந்தை நலக்குழு தன்னார்வலர்கள் பிரிந்து குழந்தைகளுடன் பிச்சை எடுத்தவர்களை மடக்கி விசாரித்தனர். இதில் 1½ மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள 15 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
கடற்கரை சாலையில் சாட்டை அடித்துக்கொண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுத்த கும்பலை குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையிலான குழுவினர் பிடித்தனர். இதில் நகர்ப்புற வீடு அற்றவர்களுக்கான காப்பகத்தில் 3 பேர் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வந்திருந்ததால் அவர்கள் பற்றிய விபரங்களை அந்தந்த மாநில குழந்தை நல குழுவிடம் தெரிவித்தனர்.
குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தை நலக்குழு தலைவர் சிவசாமி கூறும்போது, குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பது சட்டப்படி தவறு. எனவே பிச்சையெடுக்கப்படும் குழந்தைகளை மீட்டு, அவர்களின் மறு வாழ்விற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
- 2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
- எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள சட்டசபை கட்டிடம் 1820-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
சட்டசபை, தலைமை செயலகம் தனித்தனியே இருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 2008-ல் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அப்போது தனது தொகுதிக்கே அனைத்து திட்டங்களையும் கொண்டு செல்கிறார் என ரங்கசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார். அப்போதும் சட்டசபை கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால் நிதி பற்றாக்குறையால் கட்ட முடியவில்லை. தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு திட்டத்தை கைவிட்டது. மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டசபை கட்ட தீவிரம் காட்டியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ரூ.612 கோடியில் திட்டம் தயாரித்து கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றார். இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை.
இந்த நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், பிரதமர், மத்திய அரசு சட்டசபை கட்ட ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஆனால் 5 மாதமாக கவர்னரிடம் கோப்பு உள்ளது. சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதனால்தான் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் புதிய சட்டசபை கட்டப்படும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து கவர்னர் தமிழிசை கூறுகையில்:-
புதிய சட்டசபை கட்டும் கோப்பை நான் முடக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து மீண்டும் அனுப்பினோம். தற்போது மீண்டும் சில கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறையில்தான் கோப்பு செல்கிறது என தெரிவித்தார்.
புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் சபாநாயகர், கவர்னர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
- மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.
அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.
2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுதி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.
புதுவை:
புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் பல்வேறு நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வந்தனர்.
இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.
இந்நிலையில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* புதுச்சேரியில் அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
* நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
* உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.
* மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
- மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
இதை உறுதி செய்யும் வகையில் பா.ஜனதாவின் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி ஆண்டு விழாவின்போது முடிவு தெரிவிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டுவிழாவில் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி (பா.ஜனதா) போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். தொண்டர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
- வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது.
வேட்பாளர் யார்? என இன்னும் முடிவு செய்யப்படாத சூழ்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜனதாவினர் சுவர் விளம்பரங்கள் வாயிலாக தேர்தல் பணியினை தொடங்கியுள்ளனர்.
தேர்தல் பணியில் முந்திக்கொண்ட பா.ஜனதாவினர் மண்ணாடிப்பட்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.
அதில் தாமரை சின்னத்துடன் வாசகமும் இடம்பெற்றிருந்தது.
காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுமாறு கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
உற்சாகமடைந்த பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி முழுவதும் சுவர் விளம்பரம் வரையும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
அதற்கு முன்னதாக திருக்கனூர் கடைவீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 62 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 78 லட்சம் உதவித்தொகை வழங்கும் பணி ஆணையினை அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளிடம் வழங்கினார்.
வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .
எதிர்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.






