என் மலர்
கேரளா
- ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.
அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.
விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
- யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
- இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றிப்பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
சுவாமி வீதி உலா நடைபெற்றதை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதைக்கண்ட பக்தர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். யானைகள் இடையிலான மோதலில் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்நிலையில், யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் டைந்தனர்.
தகவலறிந்து வந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் பலியானோர் உடல்களைக் கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
- போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளுக்குள் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
இதனால் மனித உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வயநாட்டில் சமீப காலமாக வன விலங்குகள் அட்டகாசம் அதிகளவில் நடந்து வருகிறது. புலி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கியதில் உயிர் பலியும் ஏற்பட்டது.

வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி மனிதர்கள் பலியாவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்தநிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வனவிலங்குகள் தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் வயநாடு மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அறிவித்தது.
அதன்படி இன்று வயநாடு மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இந்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வயநாடு மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி கைது செய்தனர். அப்போது சில இடங்களில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் பல இடங் களில் பதட்டமாக சூழல் நிலவியது.
போராட்டக்காரர்கள் திரண்ட இடங்களில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் வயநாட்டில் தனியார் பஸ்கள் இன்று இயக்கப்பட வில்லை. சில இடங்களில் போராட்டக்காரர்கள் அரசு பஸ்களையும் மறித்து நிறுத்தினர்.
இதனால் வயநாடு மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை தொங்கவிட்டு சித்ரவதை.
- 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவர்களை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை, அவர்கள் கல்லுரியில் சேர்ந்ததில் இருந்தே மூன்றாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் ராக்கிங் செய்திருக்கின்றனர்.
அவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை (டம்பில்ஸ்) தொங்கவிடுதல், விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்துதல் என பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
சித்ரவதை காரணமாக ஏற்பட்ட காயங்களில் முகப்பொலிவு மற்றும் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தம் லோசன்களை அதிகளவில் தடவி விட்டிருக்கின்றனர். அந்த லோசனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு ராக்கிங் செய்திருக்கின்றனர்.
மேலும் சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்திருக்கின்றனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.
சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் தொடர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்தபடி இருந்தால், அதுபற்றி முதலாமாண்டு மாணவர்கள் சிலர், தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முதலாமாண்டு மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபிறகே, முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட தகவல் வெளியானது.
விசாரணையில் முதலாமாண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டது உறுதியானதால் அது தொடர்பாக வழக்கு பதிந்தனர்.
ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்களான கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் கலூர் பகுதியில் ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அஸ்வின் தீபக் என்பவர் 'இ-டெலி காபே' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
அவரது ஓட்டல் அந்த பகுதியில் பிரபலமான ஓட்டல் ஆகும். இதனால் எப்போதும் அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை ஓட்டலில் இருந்த பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த ஓட்டலில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலிறயடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இருந்த போதிலும் இந்த சம்பவத்தில் அந்த ஓட்டலில் வேலை பார்த்து வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சுமித் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் நாகாலாந்தை சேர்ந்த கைபோ நுபி, லுலு, அசாமை சேர்ந்த யஹியன் அலி, ஒடிசாவை சேர்ந்த கிரண் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் எர்ணாகுளம் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் ஏதோ குண்டு வெடிப்பு நடந்து விட்டதோ? என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவானது.
அதன்பிறகே பாய்லர் வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு புலியின் முன்கால் பகுதியளவு துண்டிக்கப்பட்டிருந்தது.
- பிராந்திய சண்டைகள் காரணமாக புலிகள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இதில் புலி ஊருக்குள் புகுந்து மக்களை அடிக்கடி தாக்கி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து அந்த புலியை உயிருடனோ, சுட்டுப் பிடிக்கவோ வனத் துறை உத்தரவிட்டது.
அதன் பேரில் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்ற நிலையில், காட்டுப் பகுதியில் அந்த புலி இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
அந்த புலி எப்படி இறந்தது? என்பது மர்மமாக உள்ளது. இந்த மர்மம் விலகு வதற்குள் நேற்று ஒரேநாளில் 3 புலிகள் இறந்த நிலையில் வயநாட்டில் தனித்தனியாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு வயநாடு வனப்பிரிவின் சுண்டேலுக்கு அருகில் உள்ள ஓடதோடு பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் சுமார் 1 வயது பெண் புலி சடலத்தை முதலில் அந்தப் பகுதியினர் பார்த்துள்ளனர்.
ஆனால் அந்தப் புலியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து வந்து புலியின் உடலை மீட்டனர். இந்த சூழலில், வயநாடு வன விலங்கு சரணாலயத்தின் கீழ் உள்ள குறிச்சியாடு வனப்பகுதியின் தத்தூர் பிரிவில் ஆண், பெண் என மேலும் 2 புலிகளின் சடலங்கள் வனத்துறையால் கண்டெடுக்கப்பட்டன.
இதில் ஒரு புலியின் முன்கால் பகுதியளவு துண்டிக்கப்பட்டிருந்தது. அது எப்படி நடந்தது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி வயநாடு வனவிலங்க காப்பாளர் வருண் டாலியா கூறுகையில், இது புலிகள் இனச்சேர்க்கை செய்யும் காலம். அப்போது பிராந்திய சண்டைகள் காரணமாக புலிகள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இந்த காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் புலிகள் தங்கள் பகுதியை கடுமையாக பாதுகாப்பதால் மோதல்களுக்கு வழி வகுக்கும் என்றார்.
நாளை (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெற்ற பிறகு தான் புலிகள் இறப்புக்கான காரணம் உறுதியாக தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே ஓரே நாளில் 3 புலிகள் சடலம் கிடந்தது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வனம் மற்றும் வனவிலங்கு மந்திரி சசீந்திரன் உத்தர விட்டுள்ளார். இதற்காக வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் கொண்ட தனி குழுவும் அமைத்துள்ளார். இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் நிலையத்தில் பிரிஜில் சரண் அடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சாருவிளாகம் வெள்ளரடை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 70). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் பிரிஜில் (29) சீனாவில் மருத்துவம் படித்து வந்தார். அதற்கான தேர்வு எழுதிய போதும் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதனை தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
வீட்டில் அவர் பெற்றோருடன் தங்கியிருந்தார். நேற்று இரவு இவர்களது வீட்டில் இருந்து ஜோசின் மனைவி சுஷாமா திடீரென பயங்கரமாக அலறினார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் ஜோஸ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
சுஷாமா மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மகன் பிரிஜில் தான் தந்தையை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை தேடிய நிலையில், போலீஸ் நிலையத்தில் பிரிஜில் சரண் அடைந்தார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னை சுதந்திரமாக வாழ தந்தை அனுமதிக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தைகளின் காய்கறி தோட்டத்தில் பூத்திருந்த காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் ஒன்று கூட செடியில் இல்லை.
- திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸ் நிலைய போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தைக்காடு பகுதியில் அரசின் மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. அதனை அந்த பள்ளியில் படித்து வரும் சிறு குழந்தைகள் பராமரித்து வந்தனர். குழந்தைகள் பராமரித்த அந்த தோட்டத்தில் பீட்ரூட், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைகோஸ், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன.
அவற்றுக்கு அந்த குழந்தைகள் தினமும் காலை மற்றும் மாலையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். அந்த காய்கறி தோட்டத்தை குழந்தைகள் மிகவும் ஆர்வமாக பராமரித்து வந்ததையடுத்து பள்ளிக்கு பின்புறத்தில் இருந்த அந்த காய்கறி தோட்டம், பள்ளியின் முன் பகுதிக்கு மாற்றப்பட்டது.
குழந்தைகள் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்த அந்த காய்கறி தோட்டம் பார்ப்பதற்கு மிகவும் பசுமையாக இருந்தது. இந்தநிலையில் அந்த காய்கறி தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காலி பிளவர் செடியில் காலி பிளவர்கள் பூத்திருந்தது. அந்த காலிபிளவர் அறுவடை செய்ய தயாராக இருந்தது.
அவற்றை விளைவித்த குழந்தைகள் மூலமாக அறுவடை செய்யும் வகையில் ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்தனர். வார விடுமுறை முடிந்து நேற்றைய தினத்தில் காலி பிளவர்களை வெட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் விடுமுறை முடிந்து குழந்தைகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அப்போது குழந்தைகளின் காய்கறி தோட்டத்தில் பூத்திருந்த காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் ஒன்று கூட செடியில் இல்லை. இதனைப் பார்த்த பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
யாரோ மர்மநபர்கள் குழந்தைகளின் காய்கறி தோட்டத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட காலி பிளவர்கள் மற்றும் முட்டைகோஸ்களை திருடிச் சென்றிருக்கின்றனர். தாங்கள் இவ்வளவு நாட்களாக தண்ணீர் ஊற்றி வளர்த்த காய்கறிகள் திருட்டு போனதை பார்த்த குழந்தைகள் கவலையடைந்தனர்.
அந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளான ஸ்வேதா, அம்யா, ஆத்யா, சிவானந்தா, அக்ஷா ஆகியோர் ஒருவரையொருவர் கண்களில் கண்ணீருடன் பார்த்தபடி இருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினர்.
குழந்தைகள் ஆர்வமாக வளர்த்த செடிகளில் முளைத்த காய்கறிகளை திருடியது யார்? என்று ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இதனையறிந்த குழந்தைகளின் பெற்றோரும் கவலையடைந்தார்கள். இதுகுறித்து அந்த பள்ளியின் ஆசிரியை சுனிதா கூறியதாவது:-
காய்கறி தோட்டத்தை நர்சரி முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக பராமரித்து வந்தனர். இந்த தோட்டத்தில் கடந்த வாரம் 5 காலிபிளவர்கள் திருட்டு போகின. ஆனால் அதனைப்பற்றி நாங்கள் கவலையடையவில்லை. ஆனால் திங்கட்கிழமை நாங்கள் கண்ட காட்சி குழந்தைகளுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளின் தோட்டத்தில் காய்கறிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்றது. அதன்பேரில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸ் நிலைய போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
- அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகை உணவுகள் வழங்கப்படுகின்றன.
- வீட்டில் பிரியாணி சாப்பிடும்போது ஷங்கு இவ்வாறு கேட்டான்.
அங்கன்வாடியில் உப்மாவுக்குப் பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை வழங்க கேட்கும் குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து, கேரளா அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவு வகைகள் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஷங்கு என்ற குழந்தை அத்தகைய கோரிக்கையை வைக்கும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை விடுத்ததாகவும், அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
"ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக்கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன என்று ஜார்ஜ் விளக்கினார்.
"இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன," என்று ஜார்ஜ் மேலும் கூறினார்.
வைரலான வீடியோவில், தொப்பி அணிந்துள்ள ஷங்கு என்ற குழந்தை, "எனக்கு அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதிலாக 'பிர்னானி' (பிரியாணி) மற்றும் 'பொரிச்சா கோழி' (சிக்கன் ஃப்ரை) வேண்டும்" என்று அப்பாவியாக தனது தாயிடம் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள.
வீட்டில் பிரியாணி சாப்பிடும்போது ஷங்கு இவ்வாறு கேட்டான். அப்போது இந்த வீடியோவை தான் படம்பிடித்ததாக ஷங்குவின் தாயார் கூறினார். மேலும், வீடியோ நன்றாக இருப்பதை அடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் அவர் கூறினார்.
- கைதானவர்களுக்கு கேரளாவில் உதவியவர்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வடக்கு பரவூரில் சட்டவிரோதமாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இணைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
'ஆபரேசன் கிளீன்' என்ற பெயரில் போலீஸ் ஐ.ஜி. வைபவ் சக்சேனா தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில் வடக்கு பரவூர் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் சிக்கினர். அவர்கள், இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள ஆற்றின் ஆழமற்ற பகுதியை கடந்து இந்தியாவுக்குள் வந்ததும், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டு தற்போது கேரளாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் வடபரவூர் அருகே மன்னம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் ஹொசைன் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அவர்களது ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தபோது, இந்தியாவில் சட்ட விரோதமாக வசிப்பதும், தங்களை இந்திய குடிமக்களாக காட்டிக் கொள்வதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கைதானவர்கள் போலீசாரிடம் கூறும்போது, வங்கதேசத்தில் உள்ள ஏஜண்டுகள் தங்களின் அனைத்து இந்திய ஆவணங்களையும் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களுக்கு கேரளாவில் உதவியவர்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- "fxxk நிக்கா அவன் நிஜமாவே இறந்துட்டான்" என பதிவிட்டு கொண்டாடியுள்ளனர்.
- பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய 1 மணி நேரத்திலேயே சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
கேரள மாநிலம் கொச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 15 வயது சிறுவன் சக மாணவர்களின் தொடர் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி மாவட்டம் எர்ணாகுளத்தில் திருவாணியூர் பகுதியில் உள்ள குளோபல் பப்ளிக் பள்ளியில் படித்து வந்த மிஹிர் என்ற 15 வயது மாணவன் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி, 26 ஆவது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டான்.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய 1 மணி நேரத்திலேயே சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். இதனால் தாய் ராஜ்னா மகனின் மரணத்திற்கான காரணத்தை தேடத் தொடங்கினார். அவனது நண்பர்கள், பள்ளித் தோழர்கள் ஆகியோரிடம் விசாரித்து இறுதியில் ராஜ்னா விடையை கண்டுபிடித்துள்ளார்.

பள்ளியில் சக மாணவர்கள் செய்த தொடர் ரேகிங்கால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டான் என்று சிறுவனின் தாயார் ராஜ்னா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), மற்றும் கேரள முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில் ராஜ்னா புகார் அளித்துள்ளார். தனது மகனுடைய தற்கொலையின் பின்னணி குறித்து ராஜ்னா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், எனது மகன் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான குழந்தையாக இருந்தான். ஆனால் பள்ளியில் நடந்த கொடுமைகள் அவனை கடுமையாக பாதித்திருக்கிறது. பிற மாணவர்கள் சிலர் மிஹிரை அவனது நிறத்தை வைத்தும் உடல் தோற்றத்தை வைத்தும் பள்ளியிலும், பள்ளிக்கு போய் வரும் பஸ்சிலும் என தொடர்ந்து ரேகிங் செய்துள்ளனர்.
தொடர்ந்து அடிப்பது, மன ரீதியாக வார்த்தைகளால் புண்படுத்துவது என சகல விதமான கொடுமைகளுக்கும் மிஹிர் ஆளாகியுள்ளான். தற்கொலை நடந்த அன்றைய தினம், மிஹிரை பள்ளி கழிவறைக்கு அழைத்துசென்று கழிவறை இருக்கையை நாக்கால் நக்கச் செய்துள்ளனர். மிஹிரின் தலையை கழிவறைக்குள் திணித்து தண்ணீரை பிளஸ் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மிஹிர் இறந்த அன்று, இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் மாணவர் குழு, "fxxk நிக்கா அவன் நிஜமாவே இறந்துட்டான்" என பதிவிட்டு லைக் மற்றும் சாட் செய்து கொண்டாடியுள்ளது.
இதை அறிந்தும் பள்ளி நிர்வாகம் தங்களின் நற்பெயரை இழக்காமல் இருக்க அமைதி காக்கிறது என தாய் ராஜ்னா குற்றம்சாட்டியுள்ளார். ராஜ்னா கொடுத்த புகாரின் பேரில் திருப்புனித்துரா ஹில் பேலஸ் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இன்ஸ்டாவில் டெலிட் செய்யப்பட்டுள்ள அந்த மாணவர் குழு அக்கவுண்டில் இருந்து டிஜிட்டல் ஆதாரங்களை மீட்கும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டு வருகிறது.
- எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் வங்கதேசத்தினர் செய்யப்பட்டனர்.
- 2 வாரங்களுக்கு முன்பு தஸ்லிமா பேகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த 27 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் பகுதியில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் வங்கதேசத்தினர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கதேசத்தை சேர்ந்த 28 வயதான தஸ்லிமா பேகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்ட காவல் அதிகாரி வைபவ் சக்சேனா தொடங்கிய 'ஆபரேஷன் கிளீன்' என்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.






