என் மலர்
கேரளா
- பல்வேறு சொத்துக்கள் பற்றிய முக்கிய தகவல்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியுள்ளார்.
- தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு சமமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கூட்டணி 2-வது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி 3-வது இடத்தையும் பிடித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளும் பெற்றனர்.
இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி கடந்தமாதம் 28-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி பெற்ற வெற்றியை எதிர்த்து, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தான் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது சர்பில் ஹரிகுமார் என்ற வக்கீல் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்துக்களை சரியாக வெளியிடவில்லை. அவர் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் பற்றிய முக்கிய தகவல்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியுள்ளார்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு சமமானது. தவறான தகவல்களை வழங்கியதன் மூலம் வாக்காளர்களை தவறாக வழிநடத்தியிருக்கிறார். ஆகவே பிரியங்காவின் வெற்றியை ரத்து செ்ய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேரள ஐகோர்ட்டுக்கு வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை விடுமுறை ஆகும். ஆகவே அதன்பிறகு பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது.
- உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்
கேரளாவில் 6 வயது சிறுமியை சித்தி கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடனத்துள்ளது.
கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் [6 வயது]. அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி அனீஷா.
சிறுமி முஸ்கான் டிசம்பர் 19 [வியாழன்] அன்று காலை தனது வீட்டில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் முஸ்கான் படுக்கையில் அசையாமல் படுத்திருப்பதாக அவரது தந்தை கருதிய நிலையில் இறுதியில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில் சித்தி அனீஷா சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை அனீஷா ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அனீஷாவின் மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் கருதுகிறது.
உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நௌஷாத்திடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
- கோவில் நடை திறக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
- தங்க அங்கி ஊா்வலம் மற்றும் மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை யாத்திரை காலம் கடந்த (நவம்பா்) மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி, கோவில் நடை திறக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
41 நாட்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, சபரிமலை கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தினம், சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். தங்க அங்கி ஊா்வலம் மற்றும் மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, பக்தா்களுக்கு சுமூக தரிசனத்தை உறுதி செய்வது குறித்து மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
பக்தா்கள் வெளியேறும் வாயில்களை எப்போதும் திறந்து வைத்திருக்கவும், சிறப்பாக பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை கருத்தில் கொண்டு, உணவகங்களில் அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நடை பந்தலில் பக்தா்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, நெரிசல் இல்லாமல் சுமூகமாக செல்வது உறுதி செய்யப்படும்.
பக்தா்களுக்கான கூடாரங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் போ் தங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டல பூஜையைத் தொடா்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை வருகிற 30-ந்தேதி திறக்கப்படும்.
- கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
- தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- மருத்துவர்களில் பலர், சரியாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்து வருகின்றனர்.
- பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்ததுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் பலர், சரியாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் பணிக்கு வராமல் இருப்பதற்காக விளக்கத்தை தெரிவிக்குமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் உரிய அனுமதி பெறாமல் பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 33 டாக்டர்களை சுகாதாரப்பணிகள் இயக்குனரும், 3 டாக்டர்களை மருத்துவக் கல்வி இயக்குனரும் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்தது மட்டுமின்றி, துறை ரீதியாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் தனியார் துறைகளில வேலை கிடைத்து சென்றிருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் அது தொடர்பாக எந்த தகவலும் கொடுக்காமல் இருக்கிறார்கள். துறை வெளியிட்ட காரண நோட்டீசுக்கு பதிலளிக்காத மேலும் 17 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இதேபோன்று மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் டாக்டர்கள் உள்பட 337 பேர் அனுமதியின்றி பணிக்கு வராமல் இருக்கின்றனர். அவர்களில் 291 பேருக்கு பணிக்கு வராமல் இருப்பதற்காக காரணத்தை கேட்டு நோட்டிசு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வயநாட்டை சேர்ந்த இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார்.
- தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
அபுதாபியில் இருந்து திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து அதிகமானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அரபுநாடுகளில் அதிகமாக கேரளா மக்கள் பணி செய்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணூரில் மற்றொருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நோயாளிகளும் பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது.
- இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வனப்பகுதி அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது வன விலங்குகள் தாக்குதலை சந்தித்து வருகின்றனர். இதில் சில நேரம் உயிர்ப்பலியும் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஆன்மேரி, தனது ஆண் நண்பருடன் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அவர்கள் வேகமாக சென்றபோது, யானை முட்டித் தள்ளிய மரம் சாய்ந்து விழுந்தபோது ஆன்மேரி அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோகம் மறைவதற்குள் அதே பகுதியில் யானை தாக்கி தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டு பகுதி யை சேர்ந்தவர் எல்தோஸ் (வயது 45), தொழிலாளி. இவர் வேலை முடிந்து தனது நண்பருடன் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். வீட்டிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, காட்டுயானை வழிமறித்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். ஆனால் அந்த யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது. இதில் உடல் பாகங்கள் சிதறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது பற்றி பலமுறை புகார் கூறியும் வனத்துறை அலட்சியமாக உள்ளது என குற்றம்சாட்டினர். இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது. அந்த பகுதியில் அகழிகள், வேலிகள் அமைப்பது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருகிற 27-ந் தேதி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதன்பிறகு போலீசார், பலியான எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் எல்தோஸ் குடும்பத்தினரிடம் இன்று காலை அரசின் ரூ.10 லட்சம் இழப்பீடுக்கான காசோலையை வழங்கினார்.
- சமூக வலைத்தள பிரபலமான இந்த குழந்தையை 6 லட்சம் பேர் வரை பின்தொடர்ந்து வருகிறாா்கள்.
- கார்ட்டூன் கதாபாத்திரம் போல் ‘பாப்’ முடிதிருத்தத்துடன் நந்தூட்டி தோன்றுகிறாள்.
கேரளா மாநிலம் புனலூரை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை நந்தூட்டி. முக ஒப்பனையில் ஆர்வம் கொண்ட இந்த குழந்தையின், சிகை அலங்காரம், கண்களுக்கு மை தீட்டுவது, நகப்பூச்சு அலங்காரத்தில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
சமூக வலைத்தள பிரபலமான இந்த குழந்தையை 6 லட்சம் பேர் வரை பின்தொடர்ந்து வருகிறாா்கள். இந்தநிலையில் நந்தூட்டி, முக ஒப்பனையில் ஈடுபடுவது தொடர்பான புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கார்ட்டூன் கதாபாத்திரம் போல் 'பாப்' முடிதிருத்தத்துடன் நந்தூட்டி தோன்றுகிறாள்.
பின்னர் தனது உதட்டுக்கு சாயம் பூசி அந்த சுட்டி பெண் மகிழ்கிறாள். இடைஇடையே தன் தலையை ஆட்டியும், மழலை மொழியில் தன்னை தானே பாராட்டியும் கொள்கிறார். ஒருசில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 4 நாட்களில் 95 லட்சம் பார்வைகளையும் 5 லட்சம் 'லைக்'குகளை அள்ளி வைரலாகி வருகிறது.
- வருகிற 19-ந்தேதி முதல் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 4,11 மற்றும் 18 தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அவர்களது வசதிக்காக வருகிற 19-ந்தேதி முதல் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடா-கொல்லம் வழித்தடத்தில் வருகிற 21 மற்றும் 28-ந்தேதிகளிலும், கொல்லம்-காக்கிநாடா டவுன் இடையே 23 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. செகந்திராபாத்-கொல்லம் இடையே ஜனவரி 2,4,9,11 மற்றும் 16, 18-ந் தேதிகளிலும், கொல்லம்-நரசாபூர் இடையே ஜனவரி 15 மற்றும் 22-ந் தேதிகளிலும், குண்டூர்-கொல்லம் இடையே ஜனவரி 4,11 மற்றும் 18 தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது.
- காரின் முன்பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொன்னி மல்லசேரியை சேர்ந்தவர் நிகில் (வயது 27), கனடாவில் வேலை பார்த்து வருகிார். இவருக்கும் அனு (26) என்பவருக்கும் கடந்த 30-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக மலேசியா சென்றனர். அங்கு தேனிலவை முடித்து விட்டு கேரளா புறப்பட்டனர். அவர்களது விமானம் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தது.
தம்பதியரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக அனுவன் தந்தை பிஜு, நிகிலின் தந்தை மத்தாய் ஈப்பன் ஆகியோர் வந்திருந்தனர். விமானத்தில் இருந்து நிகில்-அனு தம்பதி வந்ததும் அங்கிருந்து 4 பேரும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அதிகாலை 4 மணிக்கு கார், புனலூர்-மூவாட்டு ப்புழா மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் தமிழக ஐயப்ப பக்தர்கள் பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்ததால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஹைட்ராலிக் கட்டர் கொண்டு வரப்பட்டு காரின் பாகங்களை உடைத்த பிறகே, அதன் உள்ளே இருந்தவர்களை மீட்க முடிந்தது. அதற்குள் அனுவை தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
படுகாயம் அடைந்த அனுவை மீட்டு பத்தனம் திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.
- சளித்தொற்று காற்று மூலம் பரவுகிறது.
- பருவநிலை மாற்றம் காரணமாக பெரியவர்களுக்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாதத்தில் இருந்தே அவ்வப்போது மழை பெய்த படி இருக்கிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களில் மழைக்கால நோய்கள் பரவின. காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை ஏராளமானோரை பாதித்தது.
அதிலும் பள்ளி குழந்தைகளை சளித்தொல்லை அதிகளவில் பாதித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் கடந்த 10-ந்தேதி 328பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது நேற்று 2,870 ஆக அதிகரித்தது. டிசம்பர் மாதம் தொடங்கி பாதி நாட்கள் கூட முடியாத நிலையில் சளி தொல்லைக்கு ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போதைய இந்த சளித்தொற்று காற்று மூலம் பரவுகிறது. இதனால் சிகிச்சை பெறவருபவர்களிடம் இருந்து டாக்டர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் இந்த தொற்று, பருவநிலை மாற்றம் காரணமாக பெரியவர்களுக்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, வயிற்றுவலி, முதுகுவலி, பசியின்மை, தசை-உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சாதாரண காய்ச்சல் என்று நினைக்காமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- சபரிமலை பகுதியில் இன்று 3-வது நாளாக மழை பெய்தது.
- சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் மழை பெய்தது.
இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களாக கனமழை மற்றும் மூடு பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் சபரிமலை பகுதியில் இன்று 3-வது நாளாக மழை பெய்தது. மேலும் அருகில் உள்ள வர்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் பயங்கரமாக இருந்தது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் இன்று சபரிமலைக்கு வந்தனர்.
ஆனால் மற்ற நாட்களை விட குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்தது. சபரிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதே பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதற்கு காரணம் என்று கூறுப்படுகிறது. பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் சன்னிதானம் உள்ளிட்ட எங்கும் நெரிசல் இல்லை.
வலிய நடைப்பந்தலில் அதிகாலை கோவில் நடை திறந்ததில் இருந்து, சில மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். அதன்பிறகு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் பதினெட்டாம் படி ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
மழை ஓரளவுக்கு குறைந் திருப்பதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதுவும் இல்லை. இதனால் அங்கு குளிக்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தபடி இருக்கின்றனர். தினமும் எரிக்கப்படும் 15,400 கிலோ குப்பையில், 3,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.






