என் மலர்
புதுச்சேரி
- இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
- இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான கனிய முதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மின்துறை அனைத்து வீடுகளின் மின் மீட்டர்களை மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட வினியோகத்துறை திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மீட்டரை மாற்றுவதற்காக நுகர்வோர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுமுற்றிலும் இலவசம். இந்த ஸ்மார்ட் மீட்டர்களால் மனித தவறுகளால் ஏற்படும் பிழைகள் மற்றும் சரியான நேரத்தில் பில் வராதது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
நுகர்வோர் தங்களின் தினசரி மின் பயன்பாட்டை செல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தானியங்கி முறையில் ஸ்மார்ட் மீட்டர்கள் நுகர்வோர்களின் மின் தடங்கல்களை உடனுக்குடன் மின்துறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும் வசதி உள்ளது.
எனவே பொதுமக்கள் புகார் அளிக்க அவசியமில்லை. மின் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கட்டண வரிகள் எவ்வித மாற்றமுமின்றி 'போஸ்டு பெய்டு' கட்டணம் முறையே தொடரும்.
முதல் கட்டமாக இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சோலார் பொருத்தப்பட்ட வீடுகள், அரசுத்துறை, அரசு சார்ந்த உபயோகம், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பழுதடைந்த மீட்டர் உள்ள நுகர்வோர்கள் மற்றும் அதிக மின் பயன்பாட்டாளர்களுக்கு பொருத்தப்படுகின்றது. புதிய மின் இணைப்பு பெறுவோர் மற்றும் விருப்பமுள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 சதவீதம் நுகர்வோர்களின் வீட்டில் 3 மாதங்களுக்கு பழைய மீட்டருடன் ஸ்மார்ட் மீட்டரையும் பொருத்தி, மின் பயன்பாட்டை ஒப்பீடு செய்து பிழை ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
- அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 01.07.2016-ம் ஆண்டு 7-வது ஊதிய குழு பரிந்துரை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி 6-வது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் 6-வது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுனங்களில் 6-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
இந்த அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- விஜய் பாணியில் அரசியல் பிரவேசம்.
- காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் சார்லஸ் மார்ட்டின்.
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மல்லை சத்யா நேற்று திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், டிசம்பரில் தானும் ஒரு கட்சியைத் தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வருபவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வருபவர். இதனால் சார்லஸ் பாஜகவின் 'பி டீம்' எனவும் புதுச்சேரி காங்கிரஸ் பல விமர்சனங்களை முன்வைத்தது.
இந்நிலையில் டிசம்பரில் தான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். 2026-ல் பாஜக சார்பில் போட்டியிடுவார் என பலரும் நினைத்திருந்த நிலையில், திடீரென புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஜார்லஸ், "டிசம்பர் மாதத்தில் கட்சி அறிவிக்கப்படும். தொடர்ந்து பாதயாத்திரை உள்ளிட்ட விஷயங்களை திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 30 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஜே.சி.எம் மக்கள் மன்றம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர்.
- முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்கிரஸ்.,- பா.ஜ.க. கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதத்தொகை ரூ.2 ஆயிரத்து 500 உயர்வு, மஞ்சள் ரேசன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாத உதவி தொகை, முதியோர், விதவை உதவி தொகை ரூ.500 உயர்வு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை ஆகிய திட்டங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை கவரும் வகையில் முதல்-அமைச்சரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ்,
* பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
* இந்த திட்டத்தில் பயன்பெற புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துகு்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
* ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.
* விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* தூரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பி.எம்.இ.டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். தேர்தலுக்கு முன் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
- நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
- பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க.வில் ஜெ.பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர்.
இவர் கடந்த 2006 முதல் 2011 வரை புதுவை நகராட்சி கோலாஸ் நகர் வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திடீரென இன்று அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதா அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுவை நகராட்சியில் கவுன்சிலராகவும், 2 முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன்.
2021-ம் ஆண்டு கட்சி பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள்.
நான் தொடர்ந்து கட்சி பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள்.
மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கட்சி வளர்ச்சிக்கும் வார்டு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை செய்து மக்களிடம் நற்பெயரும் பெற்றுள்ளேன்.
தற்போது என்னால் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற இயலாத சூழல் உள்ளது. எனவே நான் வகித்து வரும் புதுவை மாநில ஜெ.பேரவை செயலாளர் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன். கட்சி சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடியார், எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் அண்ணன் அன்பழகன் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். பதவி விலகிய பாஸ்கர் மாற்று கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.
புதுவை, வில்லியனூர் குடிநீர் பிரிவு, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
- மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர் குடிநீர் பிரிவு மடுகரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
- வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வந்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது.
இதனிடேயே வங்கக்கடலில் அக்டோபர் 27-ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.
இருப்பினும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.
அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
இந்த மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால் இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.
இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது.
இதனிடையே பருவமழையின் தொடர்ச்சியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
- அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் ஜீப்பில் புதுச்சேரிக்கு கோர்ட்டு விசாரணைக்கு வந்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை முடித்து மாலை மீண்டும் ஏனாம் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஏனாமில் தடை செய்யப்பட்ட மதுவகையான கள்ளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாட்டில் பாட்டிலாக வாங்கினர்.
ஓடும் ஜீப்பிலேயே அவர்கள் கள்ளு குடிக்க தொடங்கினர். போதை தலைக்கேறியதால் பாடல்களை போட்டு நடனமாடினர். ஏனாம் வரை குடித்து செல்வதற்கு போதுமான அளவிற்கு 'கள்' பாட்டில் வைத்திருந்தனர்.
பணியில் இருந்து கொண்டு 'கள்' குடித்து அட்டகாசம் செய்ததுடன் அதனை தைரியமாக அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.
போலீசார் 'கள்' குடித்து ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த பட்டியலில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம்பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.
இதனை "ஜஸ்ட் மிஸ்டு" என்று அவர் தனது குழுவில் கோடிட்டு காண்பித்துள்ளார். அதற்காக ஜீப்பில் பார்ட்டி வைப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே 'கள்' குடித்து ஆட்டம் போட்டு அதை சமூக வலைதளத்தில் பரப்பி இருப்பது புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.
டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
- காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
- சூரியகாந்தி நகர், எழில்நகர், செயின்ட் சீமோன்பேட், ஜெகராஜ் நகர்,
புதுச்சேரி:
புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை வெங்கட்டாநகர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் ஒயிட் டவுன் கிழக்கு பகுதி, முத்தியால்பேட்டை வடக்கு பகுதி, சாரம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிருஷ்ணா நகர் (பகுதி) மேற்கு பகுதி, கோவிந்தசாலை, மறைமலை அடிகள் சாலை தெற்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 முதல் மதியம் 12 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருவள்ளுவர் நகர், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர், எழில்நகர், செயின்ட் சீமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிகுப்பம் ரேடு, தெபெசன்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9-வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில் வீதி, சித்தன்குடி, நேரு நகர், ராஜீவ்காந்தி நகர், இளங்கோ நகர் (பகுதி), காமராஜ் சாலை (பகுதி), சாந்தி நகர், கோவிந்தசாலை (பகுதி), சாரம், ராஜா அய்யர் தோட்டம், சக்தி நகர், லெனின் வீதி(பகுதி), சத்தியா நகர் (பகுதி) ஆகிய பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது.
- ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சரளா (வயது 45). அவரது கணவர் ராமு ஏற்கனவே இறந்து விட்டார்.
இவர்களது மூத்த மகள் லோகேஸ்வரி (21), இவர் கோரிமேடு அன்னை தெரசா அரசு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி பலியான சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






