என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை மாற்றவுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தி.மு.க.வுக்கு 5 முழக்கம் இருக்கிறது. அதில் 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற முழக்கமும் ஒன்று.

    அண்ணா எதை கற்றுத்தந்தாரோ, எதை முன் வைத்தாரோ, அதை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. முன்வைத்து வருகிறது. 'ஆதிக்கமற்ற சமுதாயம் படைத்தே தீருவோம்' என்பது அண்ணாவின் 2-வது முழக்கம். அதனால் தான் ஒரு ஆதிக்க சமூகத்தை கட்டமைக்க நினைக்கின்ற பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

    அதே போன்று 'இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கும் நம்முடைய கொள்கையில் கடுகளவு கூட விட்டுக்கொடுக்காமல் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். அதேபோன்று 'வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கொண்டு வருகிற அளவுக்கு அந்த முழக்கத்தை நிறைவேற்றி உள்ளோம்.

    அதேபோன்று 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற தத்துவத்திலும் உறுதியாக இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அந்த தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக செயல்படும், மாநில சுயாட்சிகளை, மாநில உரிமைகளை, மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை தராமல் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அவர்களின் இசைக்கெல்லாம் ஆடுகின்ற ஒரு கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. சொந்தக் கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை, பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு டெல்லியில் போய் அமித்ஷாவிடம் முழங்காலிடுகிறார்கள். இந்த கூத்தையெல்லாம் செய்பவர்கள் இந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.

    தி.மு.க. என்றைக்கும் தன்னுடைய முதல் முழக்கமான 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தத்துவத்திலிருந்து கடுகளவும் வழிதவறாது. 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார். அவரது வருகையால் தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. அவர் இந்த முறையும் 100 சதவீதம் வெறுங்கையோடு தான் வரப்போகிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை அவர் தரப்போவதில்லை. அதை அவர் முடிவோடு வைத்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களையோ, நமக்கு சேர வேண்டிய நிதியையோ அவர் கொண்டு வரப்போவதில்லை.

    வெறும் வார்த்தை ஜாலங்களோடு வரப்போகிறார். எப்படியாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த குட்டை குழம்பாது, மீன் பிடிக்கவும் அவர்களால் முடியாது. பா.ஜ.க.வின் முகத்திரை வெகு விரைவில் கிளிய இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது பராசக்தி படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, நான் சினிமா பார்க்கவில்லை என கூறினார்.

    • தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
    • கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    கண்ணாடி பாலம் அமைப்பதற்கு முன்பே, கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டபிறகு, படகில் பயணம் செய்ய அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று, பின்பு அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையிலேயே தற்போது இருக்கிறது. இதனால் தற்போது திருவள்ளுவர் சிலைக்கு நேராக படகுகள் இயக்கப்படவில்லை.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக படகுகளை இயக்கப்படுகிறது.

    இந்தநிலையில் போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை படகில் சென்று பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதனை கருத்தில் கொண்டு வருகிற 15-ந் தேதி முதல் 17-ந்தேதி வரையிலான 3 நாட்களும் படகு போக்குவரத்து 3 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.

    அதன்படி வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய படகு போக்குவரத்து, இந்த 3 நாட்களும் 2 மணி நேரத்துக்கு முன்னதாக காலை 6 மணிக்கே தொடங்கப்படுகிறது. அதேபோல் மாலையில் வழக்கமாக 4 மணியுடன் நிறுத்தப்படும் படகு போக்குவரத்து, கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது கூட்டத்தில் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 17-ந்தேதி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.

    அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப்பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.

    வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகுமீனா, வன அலுவலர் அன்பு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.

    குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர். 

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது.
    • கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், பயங்கர சீற்றத்துடனும் காணப்படுகிறது.

    இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

    கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர். சூறாவளி காற்றுடன் கூடிய பயங்கர கடல் சீற்றம் காரணமாக இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று படகு போக்குவரத்து இயக்க வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு கடல் சார் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் இன்று அதிகாலையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இதேபோல சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன.
    • கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்தது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்ததால் கடல் பயங்கர கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. சில நேரங்களில் எழுந்து வந்து ராட்சத அலைகள் கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கரையை நோக்கி வந்த ராட்சத அலைகளை கண்டு கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    அவ்வப்போது நிகழ்ந்த கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். சில நேரங்களில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் அங்கு இருந்து வெளியேற்றினர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.

    இந்த கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 9 மணிக்கு "திடீர்"என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு துறையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகிய வற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதேபோல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    • த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.
    • மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய்.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

    மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியல் தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள். தொலைந்தார்கள்.

    அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியான தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வரும் என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே நெஞ்சில் இன்று உதயமாகி உள்ளது.

    விஜயின் அதிர்வுகள் இன்றைக்கு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்றைக்கு த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கே அந்த ஆசை உள்ளது.

    நான் ரெயிலில் பயணித்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார். நான் அவரிடம் என்ன த.வெ.க.வுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா? என்று கேட்டேன்.

    அவர் சொன்னார். எங்களுக்கு த.வெ.க. மீது தான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது தி.மு.க.வை என்று வருத்தத்துடன் சொன்னார்.

    எல்லா கட்சிகளும் த.வெ.க. எனும் நந்தவனத்திற்கு வருவதற்கு நாள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

    மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய். திருவண்ணாமலையில் 1,35,000 இளைஞர்களின் நிர்வாகிகளின் வடக்கு மண்டல மாநாடு நடத்துகின்ற அன்று, அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையனை த.வெ.க.வில் இணைத்ததன் மூலம் தி.மு.க. இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.

    டிச.5-ந்தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள். அவரது நினைவிடம் நோக்கி பேரணிகள் நடத்துவதாக அறிவித்தார்கள்.

    அன்றைக்கு தான் த.வெ.க. தலைவர் என்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அன்றைக்கு நான் இணைந்து செய்தியானதே தவிர அந்த பேரணி செய்தியை எந்த தொலைக்காட்சியும் வெளிப்படுத்தவில்லை.

    ஆகவே, எதிரியை எங்கே, எப்போது அடிக்க வேண்டும் என்ற லாவகம் தெரிந்த ஒரே தலைவர் இந்திய அரசியலில் எங்கள் த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
    • குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சாமுவேல், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் கிங்ஸ்லின், குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர். 

    • 6 கோவில்களுக்கு சொந்தமான 8 குளங்கள் ரூ.2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு சில கோவில்களுக்கு வருமானம் இல்லாததையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    நாகர்கோவில்:

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 127 கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகமும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் அதிகளவில் தி.மு.க. ஆட்சியில் தான் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பெருமையுடன் கூறுவோம். அதேபோல் 12 திருக்கோவில்களுக்கு சொந்தமான 20 திருத்தேர்கள் ரூ.1.85 கோடி செலவில் தேர்களுக்கான பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    6 கோவில்களுக்கு சொந்தமான 8 குளங்கள் ரூ.2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் குளம் புனரமைக்கும் பணிகள் ரூ.34 லட்சம் செலவில் நடந்தபோது எதிர்பாராதவிதாக ஏற்பட்ட சரிவினால் அந்த பணிகளுக்கு மறுஒப்பந்தம் கோர ஆணையருக்கு அனுப்பட்டுள்ளது. ஆணையர் அனுமதி பெற்று இந்த மாத இறுதிக்குள் மீண்டும் பணிகள் தொடங்கும்.

    தெப்பத்திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் குளத்தை செப்பனிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2021-ம் ஆண்டு குமரி மாவட்ட கோவில்களுக்கு மொத்தமாக ரூ.3 கோடி மானியம் அரசு வழங்கியது.

    கோவில்களின் விழா செலவினங்கள், கோவில் பணியாளர்கள், தினமும் ஏற்படும் உற்சவங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை அதிகம் ஆவதாவலும், ஒரு சில கோவில்களுக்கு வருமானம் இல்லாததையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் ஆண்டுக்கு ரூ.18 கோடியாக மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 490 கோவில்களுக்கு இதுவரை ரூ.58 கோடியில் மானியம் தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மேலும் 1000 ஆண்டு பழமையான கோவில்களுக்கு தொல்லியல் துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு குடமுழுக்கு நடத்தப்படும்.

    குறிப்பாக 12 ஆண்டுகளுக்குள் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் 3967 திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 4 ஆயிரம் கும்பாபிஷேகமாக சென்னையில் உள்ள ரவீஸ்வரன் கோவிலுக்கு நடக்க இருக்கிறது. தரையில் இருந்து 6 அடிக்கு கீழ் உள்ள ரவீஸ்வரன் கோவில் உள்பட 25 கோவில்கள் லிப்டிங் முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது.

    இரணியல் கோட்டை பழைமை மாறாமல் கட்ட வேண்டும் என்பதற்காக ரூ.3 கோடியில் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.8 கோடி தேவை உள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் அமைப்பதற்கு பெரும் திட்ட வளாகம் பணிகள் எடுத்து இருக்கிறோம்.

    ரூ.33 கோடி செலவில் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, வடிவமைப்பு முடிந்து ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
    • குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.

    ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.

    த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.

    எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

    இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.

    இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.

    தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.

    • 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங் கண்ணி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் கன்னி யாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் ஆகிய இடங்களை பயங்கரமாக தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி பலியானார்கள்.

    குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பலியானவர்கள் நினைவாக அந்தந்த கிராமங்களில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 26-ந்தேதி இறந்த வர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்படி சுனாமி நினைவு தினமான இன்று சுனாமி பேரலைக்கு பலியா னவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்குத்தந்தை அஜன் சார்லஸ், சாஜன் செசில் தலைமையில் நடந்த திருப்பலியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கல்லறையில் பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

    21 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடு மாறாத அளவிற்கு உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கொட்டில்பாடு சுனாமி காலனியில் இருந்து ஊர்வலமாக சென்ற மக்கள் கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்குள்ள ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது.

    கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலைகள் அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுனாமி 21-வது நினைவு தினத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்தில் மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை ஓரங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. குளச்சல் பகுதியில் சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழாயில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

     

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழா மற்றும் அலங்கார விளக்குகள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., கலந்து கொண்டு தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

     

    ×