என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
    • ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது.

    பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-

    தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்ப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

    தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் 2002&03ஆம் ஆண்டுடன் ரத்து செய்யப் பட்டு, 2004 ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.

    இத்தகைய சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தான் இந்த அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்பதை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.

    பழைய ஓய்வூதியத்துடன் ஓப்பிடும் போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு; பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல அம்சங்கள் தெளிவற்று உள்ளன. அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இத்தகைய தெளிவற்றை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் எவ்வளவு? என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மாறியிருக்கும் இன்றைய சூழலில் ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு 30 வயதிற்கும் மேலாகும் நிலையில், அவர்கள் 30 ஆண்டுகள் பணி செய்வது என்பது சாத்தியமற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன் அளவு குறித்து எந்த விளக்கமும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

    வழக்கமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 30 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியமும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களுக்கு கால அளவிற்கு ஏற்ற வகையிலும் ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டப்படி 30 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்பதும், அதன் அளவை குறிப்பிடாததும் பெரும் அநீதி.

    அதேபோல், 2003&ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பணியில் சேர்ந்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு எவ்வளவு? என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்காமல் கருணை ஓய்வூதியம் வழங்குவதாக அறிவிப்பது அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி சிறுமைப்படுத்தும் செயலும் ஆகும்.

    இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓய்வூதிய நிதியத்திற்கு அரசு ரூ.13,000 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்தத் தொகையை, இன்னும் 45 நாள்களில் முடங்கவிருக்கும் திமுக அரசு, எப்போது, எப்படி செலுத்தும்? என்பது தொடர்பாக எந்த விளக்கமும் திமுக அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.

    தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும் போது தான் தெளிவாகத் தெரியும். அத்தகைய அரசாணை வெளியாகும் போது அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.

    அதுமட்டுமின்றி, இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதற்கான 30 ஆண்டுகள் பணி செய்ய வாய்ப்பில்லாதவர்களும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்; அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று கூறியுள்ள அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள், அப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஓட்டைகள் நிறைந்த இத்திட்டத்தை அரசு அறிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    திமுக அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், 56 மாதங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு, பதவிக்காலம் முடிவடைவதற்கு 56 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பது சதி மட்டும் தான்.

    இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம்; நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறி வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இப்படி ஒரு ஏமாற்று வேலையை திமுக அரசு செய்கிறது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைக்கப்படும் போது பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை பாமக உறுதி செய்யும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.
    • வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    இந்நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ரஷிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வெனிசுலா மீதான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ளது. இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தங்களின் அரசியல் சித்தாந்தத்திற்காக அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அமெரிக்கா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.

    இந்தச் சூழலை பெரும் கவலையுடன் கவனித்து வருவதாகவும், நிலைமையை ஆராய அவசரக் குழுவைக் கூட்டியுள்ளதாகவும் ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     இப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

    மேலும் கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.   

    • ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் பந்து வீசுவதற்கான உடற் தகுதிச் சான்றை இன்னும் ஹர்திக் பாண்ட்யா பெறாததால், அவரை நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும் டி20 உலக கோப்பை அணியிலும் அவர் உள்ளதால் வேலைப் பளு அதிகரித்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம்.
    • கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.

    மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் மீதான தாக்குதல், கோடிக்கணக்கான மக்கள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தெளிவாக, சந்தேகமின்றி VB GRAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உரிமை அடிப்படையிலான MGNREGA சட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும், வேலைக்கான உரிமை மற்றும் பஞ்சாயத்திற்கான உரிமையை மீண்டும் வழங்குதல் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைக்கிறது. இதனால்தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் என்ற தேசிய அளவிலான போராட்டத்தை ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25-ந்தேதி வரை நடத்துகிறோம்.

    MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம். கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.

    MGNREGA திட்டம் பசி மற்றும் துயர இடம்பெயர்வைக் குறைத்தது, கிராமப்புற ஊதியத்தை உயர்த்தியது மற்றும் பெண்களின் பொருளாதார கண்ணியத்தை வலுப்படுத்தியது. VB GRAM G இந்த உரிமையை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படும், எனவே நெருக்கடியான காலங்களில் கூட, பணம் தீர்ந்ததும் பணிகள் முடிவடையும். மேலும், நிதியையும் பணிகளையும் மத்திய அரசே தீர்மானிக்கும். இது கிராம சபைகளையும் பஞ்சாயத்துகளையும் பொருத்தமற்ற நிலைக்குத் தள்ளிவிடும்.

    MGNREGA-ஐ தாக்குவது கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் தாக்குவது போன்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அமைதியாகவும் உறுதியாகவும் நாங்கள் எதிர்ப்போம்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது.
    • வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கு விற்பனை.

    வாரம் தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை இன்று காலை குறைந்த நிலையில், மாலை சற்று உயர்ந்து உள்ளது.

    சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், தற்போது ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,00,800 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.80 அதிகரித்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கும் ஒரு கிலோ ரூ.2.57 லட்சத்திற்கும் விற்பனையாகிறது. 

    • பெண் தனியாக இருப்பதை அறிந்த சுக்ராம் பிரஜாபதி, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.
    • உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற நபரை இளம்பெண் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தந்தையை இழந்த 18 வயது இளம்பெண் தனது தாயுடன் வசித்து வந்தார்.

    ஜனவரி 1 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்ற நிலையில் அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    மதியம் 3.30 மணியளவில் பக்கத்துக்கு வீட்டுக்காரரான சுக்ராம் பிரஜாபதி (50),பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

    இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

    அப்பெண் தன்னை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சுக்ராம் அப்பெண்ணை தடுத்துள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த இளம்பெண், தற்காப்பிற்காக அவரை வெட்டியுள்ளார். இதில் சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கொலை செய்த பிறகு, அப்பெண் ரத்தம் படிந்த கோடாரியுடன் நேராக அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடைந்தார்.

    உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் தற்காப்பிற்காகவே இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தற்காப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை விடுவிக்கத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  

    • ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல்.
    • அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பு.

    ஜனவரி 9ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    தங்களுக்காக விருப்ப மனு பெற்றவர்கள் மட்டும் அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
    • ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீரர்கள் விவரம்:-

    சுப்மன் கில் (C), ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் , நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    • கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்

    பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொள்கிறது.
    • அதிமுக குழு 10 மண்டலங்களாகப் பிரித்து, 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

    அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வரும் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    அதன்படி, 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொள்கிறது.

    அதிமுக குழு 10 மண்டலங்களாகப் பிரித்து, 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

    பல தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த தரவுகளை நிர்வாகிகள் கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளது.

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் தேடிவந்தனர்.
    • போலீசார் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றபோது துப்பாக்கிச்சூடு.

    உத்தர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அம்ஜத் கான் (வயது 35) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

    அம்ஜத் கான் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அம்ஜத் கான், போலீசார் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட தொடங்கினான்.

    இதனால் போலீசார் தங்களை பாதுகாக்க பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அம்ஜத் கான் காலில் குண்டு பாய்ந்தது. குண்டு தாக்கி சுருண்டு விழுந்த அம்ஜத் கானை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    அம்ஜத் கானிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாக இருந்து வந்தனர். அவர்களை ஒழிக்கும் பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டு என்கவுண்டர் சம்பவத்தில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இன்று அதிகளவில் அந்த பகுதிக்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடியான தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு சென்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு என்கவுண்டர் சம்பவத்தில் இருந்து 14 நக்சலைட்டுகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுக்மாவில் நடந்த அதிரடி தாக்குதல் மூலம் கோண்டா பகுதி நக்சலைட்டுகள் குழு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சத்தீஸ்கரில் கடந்த ஆண்டில் 285 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×