search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்த டெல்லி எதிரணியை 220 ரன்னுக்கு கட்டுப்படுத்தி 'திரில்' வெற்றியை தனதாக்கியது. முந்தைய 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றியை ருசித்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட் அசத்தி வருகிறார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷா கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் வெளியில் வைக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு பதிலாக களம் கண்ட ஷாய் ஹோப் சோபிக்காததால் வார்னருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். அன்ரிச் நோர்டியா அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது தலைவலியாக இருக்கிறது. இம்பேக்ட் வீரராக முந்தைய ஆட்டத்தில் ஆடிய ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தனது இடத்தை தக்கவைத்து கொள்வார்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு 6 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் பார்மில் உள்ளனர். இஷான் கிஷன், டிம் டேவிட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது பாதகமாக உள்ளது.

    கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட மோசமான தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப மும்பை முனைப்பு காட்டும். இந்த சீசனில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு டெல்லியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததால் மும்பை அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். ஆனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19 ஆட்டங்களில் மும்பையும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் (குஜராத் அணிக்கு எதிராக) கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் பட்டையை கிளப்புகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.

     

    லக்னோ அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரில் நடைபெற்ற கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக சென்னையை வீழ்த்திய அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலில் உள்ளது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஜெய்ப்பூரில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்த லக்னோ அணி அதற்கு பழிதீர்க்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ராஜஸ்தான் அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வாகை சூடினால் ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றை எட்டி விடும்.

    இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • பேர்ஸ்டோ 45 பந்தில் சதம் விளாசினார்.
    • ஷஷாங்க் சிங் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரர்களான சுனில் நரேன் - சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 54 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்னில் வெளியேறினார். தொடக்கம் மெதுவாக ஆரம்பித்த பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணிக்கு 5 ஓவரில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷஷாங்க் சிங் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி சிக்சருமாக மாற்றினார். இதனால் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    பேர்ஸ்டோ 108 ரன்னிலும் ஷஷாங்க் சிங் 68 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன்.
    • அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக யுவராஜ் சிங் இருந்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

    அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

    ஒருவேளை அவர் அணியில் இல்லாத பட்சத்தில் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தற்சமயம் சிறப்பான ஃபார்மில் உள்ளதாக நினைக்கிறேன்.

    இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், உலகக்கோப்பை அணியில் நான் ஷிவம் தூபேவை பார்க்க விரும்புகிறேன்.

    மேலும் அணியின் மூத்த வீரர்கள் என்னதான் தரமான ஃபார்மில் இருந்தாலும் அதை மறந்து, வயதின் அடிப்படையில் மூத்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழும். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    மேலும் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், டி20 கிரிக்கெட்டில் அதிக இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நிறைய இளைஞர்கள் அணிக்குள் வருவதையும், அடுத்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதையும் பார்க்க விரும்புகிறேன்.

    என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.

    • கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 71 ரன்னும் சால்ட் 75 ரன்களும் குவித்தனர்.
    • சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் - சால்ட் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்டனர்.

    இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் சால்ட் 75 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் - ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 24 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஷ்ரேயாஸ் - வெங்கடேஷ் ஜோடி டெத் ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

    • யாராவது ஒருவர் களம் இறங்கிய சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அக்சார் பட்டேலால் செய்ய முடியும்.
    • பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பிரமாண்ட வீரர்.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் யார் யாரெல்லாம் இடம் பெற வேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    அந்த அடிப்படையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் தனது கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    நிச்சயமாக அக்சார் பட்டேல் அணியில் இடம் பெற வேண்டும். என்னை பொருத்தவரைக்கும் ரிஷப் பண்ட், அக்சார் பட்டேல் என இருவரும் டி20-க்கான இந்தியா அணியில் நிச்சயமாக இடம்பெற வேண்டும். டி20 போட்டியில் ரோகித் சர்மா, யாராவது ஒருவர் 8-வது இடத்தில் களம் இறங்கி 15 முதல் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தால், அந்த பணியை அக்சார் பட்டேல் செய்வார். அவருக்கு யாராவது ஒருவர் களம் இறங்கிய சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அக்சார் பட்டேலால் செய்ய முடியும்.

    அதுதான் ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேலுக்கு சாதகமாகும். அவர்கள் அவரும் திறமையானவர்கள். மற்றும் இந்திய அணிக்காக பரிசு. பந்தை அடிக்கக் கூடிய திறன் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் டெக்னிக்கிற்கு தேவையான நேரம் தேவையில்லை. போட்டிக்கான அடிப்படை இருக்க வேண்டும். அது அக்சாரிடம் உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங்கை பார்த்தீர்கள் என்றால், டர்னிங் ஆடுகளத்தில் நெருக்கடியின் கீழ் ரன்கள் அடித்திருப்பார். பேட்டிங் செய்யும் திறன் அவரிடம் உள்ளது. டி20-யில் அடித்து விளையாட வேண்டியது அவசியம். டி20-யில் அவரை சற்று முன்னதாக களம் இறக்கி செட்டில் ஆக கொஞ்சம் டைம் கொடுத்தால், அதன்பின் அவரால் அடித்து விளையாட முடியும்.

    பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பிரமாண்ட வீரர். டி20 கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் உள்ளது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் பங்கேற்கவில்லை. சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    • குருணால் பாண்ட்யா பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது.

    ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குருணால் பாண்ட்யா. இவர் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவி பன்குரி சர்மாவிற்கு கடந்த 21-ந்தேதி ஆண்குழந்தை பிறந்துள்ளது.

    பிறந்த குழந்தை மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, குழந்தையின் பெயர் வயு (Vayu) எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கவிர் (Kavir) என்ற ஆண்டு குழந்தை பிறந்தது. தற்போது அவனுக்கு இரண்டு வயது நிறைவடைய இருக்கும நிலையில், 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    குருணால் பாண்ட்யா மாடல் அழகியான பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டி20 உலகக் கோப்பையில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் விளாசியர்.
    • கிறிஸ் கெய்ல், உசைன் போல்ட் ஆகியோரும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2024 டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமனம் செய்துள்ளது.

    2007-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்து அணிக்கு எதிரான பிராட் ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடித்து சாதனைப் படைத்தவர் யுவராஜ் சிங். மேலும், இந்திய அணி 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

    ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், அதிவேக ஓட்டப்பந்தைய வீரராக கருதப்படும் உசைன் போல்ட் ஆகியோரையும் ஐசியி தூதராக நியமனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது உள்பட டி20 உலகக் கோப்பையில் விளையாடியதில் இருந்து எனது சில அருமையான கிரிக்கெட் நினைவுகள் வந்துள்ளன, எனவே இந்த பதிப்பின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடமாகும். மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் உருவாக்கும் வைப் (vibe), உலகின் மற்ற பகுதியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் கிரிக்கெட் விரிவடைகிறது. டி20 உலகக் கோப்பை மூலம்அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மோதல் இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும், எனவே புதிய மைதானத்தில் உலகின் சிறந்த வீரர்கள் விளையாடுவதைக் காண்பது ஒரு பாக்கியம்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் 9 இடங்களில் 55 போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 29-ந்தேதி பார்படோஸில் நடக்கிறது.

    • 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • அர்ஜென்டினா வீராங்கனை பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இந்தோனேசியா- மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை நந்தா சகாரினி 61 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் மங்கோலியா 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் இந்தோனேசியாவிள் இளம் வீராங்களை ரொமாலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24 ரன்னில் சுருண்டது. தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் ரொமாலியா. மொத்தமாக 3.2 ஓவர்கள் வீசி ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இது அவருக்கு முதல் சர்வதேச போட்டியாகும்.

    இதற்கு முன்னதாக 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஃப்ரெடெரிக் ஓவர்டிஜ் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது. அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
    • கடந்த முறையில் இதுபோன்று தொடரின் பாதிலேயே வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் கழித்து காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மிட்செல் மார்ஷ்க்குப் பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குல்பதீன் நயிப்பை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவருடைய அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதன்காரணமாக முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் களம் காண்கிறார் குல்பதீன் நயிப்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரஷித் கான், நூர் முகமது, ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது அவர்கள் வரிசையில் குல்பதீன் நயிப்பும் இணைந்துள்ளார்.

    இந்த சீசனில் மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார். கடந்த வருடமும் போட்டியில் மத்தியில் இருந்து விலகினார். தற்போது இந்த சீசனிலும் போட்டியின் மத்தியில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணி இவரை 6.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Abhishek Sharma will be ready for India in six months Yuvraj Singh
    • ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா யார் பந்து வீசினாலும் சிக்சர், பவுண்டரி விளாசுகிறார். டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பவர்பிளேயில் எதிரணியை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

    இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்டசத்திர ஆல்ரவுண்டர் யுராவஜ் சிங் கூறுகையில் இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கப் பிறகு, அவர் இந்தியாவுக்காக விளையாட தயாராக வேண்டும். இதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரும் ஆறு மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.

    அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.

    பெரிய ஷாட்டுகள் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இவர் பெரிய ஷாட் அடிப்பது சிறந்தது. ஆனால், ரொட்டேட் ஸ்டிரைக் செய்வதற்கு சிங்கிள் எடுப்பது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்வது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து அவர் அதிக நம்பிக்கை பெற்றுக் கொண்டிருப்பார். தற்போது டிராவிஸ் உலகத்தரம் வாய்ந்த வீரர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். சிறந்த தொடக்கத்தை எப்படி மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவது என்பதை கற்றுக் கொள்ள அபிஷேக் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதைத்தான் அவர் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது.
    • ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் அன்றைய தினம் அவர்களுடையதாக அமையவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் கிளாசன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி ஆர்சிபி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை பதிவு செய்தது.

    நேற்று மீண்டும் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இதில் எப்படியும் 300 ரன்கள் குவிக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் பரிதாபப்பட்டனர்.

    ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. 207 இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா பவர்பிளேயில் விளாசி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் அசத்த சன்ரைசர்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும், மார்கிராம், 7 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும், கிளாசன் 7 ரன்னிலும் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் எடுத்து யாஷ் யதாள் பந்தில் ஆட்டமிழந்தார்.

    300 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், 207 இலக்கை எட்ட முடியவில்லையே என ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடக்க வீரர்களிடம் 14 போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெட்டோரி கூறியதாவது:

    எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய நாள் (நேற்று) அவர்களுடையதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற நாட்கள் அமையும். 14 போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக நாங்கள் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதரவு பெற முடியவில்லை.

    இது கடினமான தோல்விதான். என்றால், எந்த அணியும் எந்த அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்கடிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஐபிஎல் எந்த போட்டியில் எளிதாக போட்டி என்பது கிடையாது.

    இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    ×