search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
    • விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3 தொகுதியில் இளம் வேட்பாளர்களை நிறுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் ஆகியோர் அழைப்பின் பேரில் இருவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

    அப்போது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி ஏற்படும் நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பு இழக்கின்ற நிலையை தவிர்க்கவும் பா.ஜ.க.வை ஒன்று சேர்ந்து வீழ்த்தவும் இதுவே நல்ல நேரம் என்பதால் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

    அதனை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதி வேட்பாளர்களையும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.

    இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-

    கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெங்களூர் சென்ட்ரல், தெற்கு, புறநகர் பகுதியில் முக்கிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

    • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.

    மதுரை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

    பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.


    • மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பண்ருட்டி:

    நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்கள் என்பார்கள். ஆனால், நண்பரிடம் பழகி அவரது தங்கையையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு விழுப்புரத்தில் நண்பர் உள்ளார்.

    அவரது வீட்டுக்கு அச்சிறுவன் அடிக்கடி சென்று வருவார். அப்போது நண்பரின் 15 வயது தங்கையிடம் பழக்கம் ஏற்பட்டது.

    நண்பரிடம் பழகுவது போல்தான் சிறுமியிடமும் பழகி வந்துள்ளார். திடீரென அவர் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

    மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறினர். இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது தன்னை அண்ணனின் நண்பர்தான் கர்ப்பமாக்கினார் என்று கூறினார்.

    இது தொடர்பாக பண்ருட்டி யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் காவேரிக்கு தகவல் தெரிய வர அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாரிடம் கூறினார். இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரை அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாய் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து இதேபோன்று சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.
    • காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக கோடை அனல் வெயில் கொளுத்தி வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் பயிரிட்டு உள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து மட்டுமே காய்கறிகள் வரத்து இருப்பதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரக்கோலி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.


    இனிவரும் நாட்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நீலகிரி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளதால், கவலை அடைந்து உள்ள இல்லத்தரசிகள், தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது.
    • மறுஅறிவிப்பு வரும் வரை சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    கே.கே.நகர்:

    கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பு அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக போலீசாரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை செய்யப்பட்ட பின்பு வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது.

    அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

    இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். மற்றும் பயணிகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு விமான நிறுவனத்தினர் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இந்த சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது. எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சோதனையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • அம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.

    இந்தநிலையில் இன்று கூடிய சந்தைக்கு விவசாயிகள் வளர்க்கும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடைமுறைகள் இருந்ததால் ஆடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்தே இருந்தது. இந்த நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

    ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதனால் அம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். அதிலும் கருப்பாக உள்ள வெள்ளாடுகளையே அதிகமாக வாங்கினர்.

    மேலும், கொம்பு கிடாக்களையும் மக்கள் வாங்கினர். இன்றைய சந்தையில் இறைச்சிக்காக 10 கிலோ எடையில் இருந்து 35 கிலோ எடை வரை ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வெள்ளாடுகள் 10 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 30 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், செம்மறியாடுகள் 9 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

    ஆனால் இன்றைய சந்தையில் ஆடுகள் விலை 500 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையாகியது. ஆடுகள் விற்பனை அதிகரித்ததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேர்தலுக்கு பிறகு, பண்டிகை காலம் என்பதால் இன்று நடந்த சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாகவும், அடுத்து வரும் வைகாசி மாதத்திலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியவலசு கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மர சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

    இந்நிலையில் பொன்னுசாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்று உள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .


    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மர பொருள்கள் மற்றும் மிஷின்கள் முற்றி லும் சேதம் அடைந்தன.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து நடந்த பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
    • வருகிற மே 4-ந்தேதி வரை தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் என்பதால் அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்ப அலை வீசி வரும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படையெடுத்து இங்கு தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். வருகிற மே 4-ந்தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, டி.ஐ.ஜி. அபிநவ், எஸ்.பி. பிரதீப், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஓய்வுக்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கினார். பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார். பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக அதே விடுதியில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அவர் தங்கும் விடுதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். மேலும் மற்ற மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் படையெடுத்து வருவதால் விடுதிகள் நிரம்பி வருகிறது.

    • ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது.
    • இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது.

    நாகப்பட்டினம்

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்களுக்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் கடந்த 15 தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.

    நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, வேதாரணி யம் உள்ளிட்ட 27 மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை துறை முகங்களில் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுது நீக்கம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது :-

    ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது. இரும்பு விசைப்படகின் பழுதான சில பாகங்களை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுப்போம். அதேபோல் புதிய இரும்பினை பழுதான இடங்களில் பொருத்தும் போது ஆர்க் வெல்டு செய்வது வழக்கம்.

    இந்த வேலை கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது. அவ்வப்போது தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டும் ஈரத்துணியை சுற்றிக்கொண்டும் எங்கள் பணியை தொடர்கிறோம் என்றனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட ஈளாடா தடுப்பணை உள்ளது.

    மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை நம்பி, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக கொடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை ஊற்றுகள் காய்ந்து வறண்டு காணப்படுகிறது.

    இதனால் ஈளாடா அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், அணையில் தண்ணீர் குறைவதாலும் ஈளாடா, கோத்தகிரி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இப்போதே கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாலும், நீர் உந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களுக்கான மின்கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    ×