search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார கட்டணம்"

    • காற்றோட்ட வசதி இல்லாததால் நகர மக்கள் ஏ.சி. படுக்கை வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.
    • கடந்த ஆகஸ்டை ஒப்பிடும்போது ஒவ்வொரு குடும்பத்திலும் மின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. 2 கோடியே 41 லட்சம் பேர் வீடுகளுக்கான மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதில் 97 லட்சம் குடும்பத்தினர் 100 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கட்டணம் கிடையாது. முதல் 100 யூனிட் தவிர இலவச மின்சாரம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    101-200 யூனிட் வரை ரூ.2.25, 401-500 யூனிட் வரை ரூ.6, 501-600 வரை ரூ.8 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    801-1000 யூனிட் பயன்படுத்துவோருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதால் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டும்.

    மின்கட்டண உயர்வு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் என பெரும் தொகை கட்டுகின்ற நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என்ற அளவில் மின் கட்டணம் செலுத்தி வந்த சாதாரண மக்கள் தற்போது தங்களின் வருவாயில் பெரும் தொகையை மின் கட்டணத்திற்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னையில் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மாத சம்பளம் வாங்கக்கூடியவர்கள் வருமானத்தில் மின் கட்டணத்திற்கு பல ஆயிரங்களை செலவிடும் நிலை உள்ளது.

    கடந்த ஆகஸ்டை ஒப்பிடும்போது 2 மடங்கு மின் கட்டணம் உயர்ந்து இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஏ.சி. பயன்பாடு என்று கூறப்படுகிறது. சொந்த வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களும் ஏ.சி. எந்திரத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சென்னை நகரத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியால் ஒட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளில் மட்டுமின்றி 90 சதவீத வீடுகளில் ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது.

    காற்றோட்ட வசதி இல்லாததால் நகர மக்கள் ஏ.சி. படுக்கை வாழ்க்கைக்கு மாறி விட்டனர். அதுவும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் கோடை வெயில் படிப்படியாக குறைந்து விடும்.

    ஆனால் இந்த வருடம் செப்டம்பர் வரை வெயில் கொளுத்தி வருகிறது. மாறுபட்ட தட்ப வெப்ப சூழலால் மக்கள் ஏ.சி.யை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

    கடந்த ஆகஸ்டை ஒப்பிடும்போது ஒவ்வொரு குடும்பத்திலும் மின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதுவே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சாதாரண வீடுகளில் உள்ள மக்கள் முதல் பண்ணை வீடுகளில் வசிக்கும் மக்கள் வரை மின் கட்டண உயர்வு பாதித்து உள்ளது. பனையூரில் பண்ணை வீட்டில் வசிக்கும் ஒருவர் கடந்த ஆண்டு மே மாத மின் கட்டணம் ரூ.60 ஆயிரம் செலுத்தி உள்ளார். அதே அளவில் தான் இந்த ஆண்டு பயன்படுத்தி உள்ளார். ஆனால் மின் கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்ந்து உள்ளது.

    மின் கட்டண உயர்வால் மின் வாரியத்திற்கு வருவாய் அதிகரித்து உள்ளது. மே மாதம் மின்வாரியத்திற்கு மின் கட்டண வசூல் தொகை ரூ.939 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த வருடம் ரூ.737 கோடி வசூலாகி உள்ளது. மின் கட்டண சிலாப்புக்கான மாறுபாட்டால் பலர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. வீடுகளில் இருந்து பணியாற்றி வருபவர்கள் ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பருவமழை தொடங்க உள்ள நிலையில் கூட பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் பயன்பாடு அதிகளவில் நீடித்து வருகிறது.

    இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு. மாறுபட்ட கால சூழ்நிலையால் ஏ.சி. பயன்பாடு அதிகமாக இருப்பதால் கட்டணம் அதற்கேற்றவாறு மாறுபடுகிறது.

    இந்த ஆண்டு கோடையில் அதிகபட்சமாக 19,587 மெகா வாட் மின் பயன்பாடாக இருந்தது தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் மின் பயன்பாடு 16 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
    • வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.

    பவானி:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

    பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.

    2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.

    அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.

    மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.

    அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

    வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன.
    • மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன.

    இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியை செலவு செய்கிறது. இதில் வீடுகளின் பங்கு மட்டும் ரூ.5,284 கோடி ஆகும்.

    மின் கட்டண சலுகையை பல பேர் தவறாக பயன் படுத்துவதை கண்டறிய வீட்டுக்கு வீடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் வாரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனைவரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இப்போது யார்-யார் எத்தனை வீடுகளுக்கு மானியம் பெறுகிறார்கள் என்ற விவரம் அரசின் கைவசம் உள்ளது. இதனால் எவ்வளவு பணம் வீணாகி வருகிறது என்ற விவரமும் மின் வாரியத்திடம் இருக்கிறது.

    தற்போது தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதை சமாளிக்க அரசிடம் இருந்து மின் வாரியம் கடன் வாங்கி வருகிறது. அந்த வகையில் மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

    ஆனாலும் நிலக்கரி கொள்முதல், மின் வினியோக வழித்தடம் பராமரித்தல், துணைமின் நிலையங்கள் அமைத்தல், உபகரணங்கள் வாங்குதல், ஊழியர்களின் சம்பளம் போன்றவைகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது.

    மின்வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த கோரி கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்த போது கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் ரூ.2.25 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு ரூ.4.60 வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள்.

    401-500 யூனிட் வரை ரூ.6-ம், 501-600 யூனிட் வரை ரூ.8-ம், 601-800 யூனிட் வரை ரூ.9-ம், 801-1000 யூனிட் வரை ரூ.10-ம் 1001 யூனிட் மேல் 1 யூனிட் ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தொழிற்சாலைகளுக்கான கட்டணம் 1 யூனிட் ரூ.6.35-ல் இருந்து ரூ.6.75 ஆக உயர்ந்தது.

    இந்த கட்டணம் உயர்த்தப்பட்ட போது மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் இனி மேல் ஆண்டு தோறும் ஜூலை 1-ந்தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டது.

    2023 ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் இதில் எது குறைவாக உள்ளதோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பண வீக்கம் 4.70 சதவீதம் இருந்தது. இதன் அடிப்படையில் 4.70 சத வீதம் வரை உயர்த்த வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை வீடுகளுக்கு உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் குடிநீர் மோட்டார், காம்புண்டு விளக்கு போன்ற பொது பயன்பாட்டில் உள்ளவைகளுக்கு வணிக கட்டணமாக யூனிட்டுக்கு 8 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

    அடுத்த மாதம் மின் கட்டணம் அதிகரிக்கும் போது இது மேலும் 4.7 சதவீதம் அதிகமாகும்.

    அதன்படி பார்த்தால் வீட்டு பயன்பாட்டுக்கு உரிய மின் கட்டணம் யூனிட்டுக்கு 11 பைசா உயரும் என்றும் கடைகளுக்கு யூனிட் 30 பைசா உயரும் என்றும் தெரிகிறது.

    இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:-

    மின் கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    அதன்படி பார்த்தால் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 11 பைசா அதிகரிக்கும். கடைகளுக்கு 30 பைசா யூனிட்டுக்கு அதிகரிக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால்தான் மக்களுக்கு சுமை தெரியாது. இல்லையென்றால் ஒவ்வொரு ஆண்டுக்குரிய கட்டண உயர்வையும் சேர்த்துதான் வசூலிக்க வேண்டியது வரும். அப்போது பெரிய சுமையாக தெரியும்.

    எனவே இப்போது 4.70 சதவீத உயர்வு என்பது சிறிய தொகைதான். இதில் பொதுமக்களின் விமர்சனம் என்னவென்றால் 9 மாதங்களுக்கு முன்பு தானே மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள். அதற்குள் மறுபடியும் உயர்த்துவதா? என்று கேள்வி கேட்பார்கள் அதுதான் பிரசினை.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. 2 ஆண்டுக்கு ஒருமுறை கூட உயர்த்திக் கொள்ளலாம். அது அரசின் கொள்கை முடிவை பொறுத்து அமையும். எனவே அரசு சார்பில் விரைவில் இதற்கு தெளிவான பதில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்
    • போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மின்சார மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடந்தன.

    வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். தாமரைசிங், சுரேஷ் மேசியா, நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப் பட்டனர்.

    • இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
    • மின் கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் தவித்து வரும் மக்களுக்கு, தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • அதில் மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று கூறினார்கள்.

    மதுரை 

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து ெகாண்டு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அவர் கூறிய தாவது-

    மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் இன்றைக்கு மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தி.மு.க. கடந்த தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர். அதில் மாதந்தோ றும் மின்கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று கூறினார்கள். தற்போது ஆள் பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள்.

    மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். 200 யூனிட் பயன்படுத்துவோர் 63.35 லட்சம் மின் நுகர்வோர்கள், 300 யூனிட் பயன்படுத்துவோர் 36.25 லட்சம் மின் நுகர்வோர்கள்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெசவாளர்க ளுக்கு 750 யூனிட் இலவச மாக வழங்கப்பட்டது தற்போது 750 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நெசவாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர் மிகவும் பாதிப்படைவார்கள்.

    சொத்து வரி வருவாய் மூலம் அரசுக்கு ரூ.1750 கோடி கிடைக்கும். இந்த வருவாயை மற்ற துறை மூலம் ஈட்டி மக்கள் சுமையை அரசு குறைத்து இருக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.

    மதுரை கருப்பாயூரணி பகுதியில் மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பேசும்போது, 1000 ரூபாய் நோட்டு எப்படி செல்லாதோ, அதேபோல் ஓ.பி.எஸ். செல்லாத நோட்டாக மாறி விட்டார். ஓ.பி.எஸ்-ஐ எல்லோரும் அன்போடு பன்னீர்செல்வம் என்று அழைத்து வந்த நிலையில் தற்போது அவர் கண்ணீர் செல்வமாக மாறிவிட்டார்.

    அ.தி.மு.க.வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் விரைவில் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்வது உறுதி என்றார்.

    • தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
    • மின் கட்டணம் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

    மின் கட்டணம் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மின்சார வாரியம் மின் நுகர்வோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கு வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரையில் மின் மீட்டர் டெபாசிட் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கும் மாத வாடகையாக ரூ.60 வீதம் இரண்டு மாதத்திற்கு ரூ.120 வசூலிக்க முடிவு செய்துள்ளது.

    மிட்டருக்கு வாடகை கட்டணம் வசூலித்தால் கணிசமான வருவாய் மாதந் தோறும் மின்சார வாரியத்திற்கு கூடுதலாக கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    வாடகை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின்சார வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு அனுமதி கிடைத்துவிட்டால் செப்டம்பர் மாதத்தில் இருந்து மீட்டருக்கு ரூ.120 (2 மாதத்திற்கு) வாடகை வசூலிக்கப்படும்.

    தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டருக்கு இந்த வாடகையை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் எதிர்காலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது இந்த வாடகையை ரூ.350 ஆக உயர்த்த திட்டமிட் டுள்ளது.

    இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மீட்டரை பொதுமக்கள் வாங்கி தரும் பட்சத்தில் வாடகை கட்டணம் செலுத்துவதில் இருந்து தவிர்க்கலாம். மீட்டர் தொடர்பான கட்டணம் வசூலிக்கலாம் என தமிழ் நாடு மின்பகிர்மானம் விதி கூறுகிறது. மேலும் மின் மீட்டர் இடமாற்றம் அல்லது மாற்றம் செய்வதற்கு 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் கூறுகிறது.

    தற்போது மீட்டர் போர்டு 'சிங்கில் பேஸ்' இடமாற்றம் செய்வதற்கு ரூ.500, 3பேஸ் இணைப்புக்கு ரூ.750-ம் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கிறது. இந்த கட்டணத்தை மேலும் உயர்த்தவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான செலவாக ரூ.1000 மற்றும் ரூ.1500-ம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குறைந்த அழுத்த டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் செலவின கட்டணமும் ரூ.1000 முதல் ரூ.2000 வரை கூட வாய்ப்பு உள்ளது. உயர் அழுத்த டிரான்ஸ்பார்மருக்கு ரூ.2000 முதல் ரூ.4000 வரை உயர்த்தவும் பரிசீலிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சார கட்டணம் அல்லாத வருவாய் 2021-2022-ம் ஆண்டில் ரூ.1,730 கோடியாக இருந்தது. இதனை நடப்பு ஆண்டில் ரூ.1.793.45 கோடியாக அதிகரிக்க (3.7சதவீதம்) திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு.

    தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.

    2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

    201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும். 2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.

    விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×