search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகோலஸ் பூரன்"

    • சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.
    • இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    துபாய்:

    சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. பங்கேற்று விளையாடிய 6 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ப் ஜெய்ண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. நிகோலஸ் பூரன் 57 ரன்னும், பிளட்சர் 53 ரன்னும், முகமது வசீம் 43 ரன்னும், குசால் பெரேரா 38 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து ஆடிய துபாய் கேபிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும் தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை
    • சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் பூரன்.

    டி20 உலகக் கோப்பை முதல் சுற்று லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கேப்டன் நிகோலஸ் பூரன் பேசும்போது, தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

    'நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றிவிட்டோம். இந்த தோல்வி வேதனை அளிக்கிறது. நான் எனது மோசமான ஆட்டத்தால் சக வீரர்களையும் ஏமாற்றிவிட்டேன். இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 145 ரன்கள் எடுத்தால், அடுத்து அந்த ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். அது ஒரு சவாலாகவும் இருக்கும்' என்றார் பூரன்.

    மேலும், சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்த பூரன், அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். அயர்லாந்திடம் அடைந்த தோல்வி தங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • வங்காளதேசத்துக்கு எதிராக டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என கைப்பற்றியது.
    • நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    கயானா:

    வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 என கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அபிப் ஹுசைன் அரை சதமடித்தார். லிட்டன் தாஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் 39 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டி 20 தொடரைக் கைப்பற்றியது. நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    ×