search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து பிரச்சினை"

    • ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.

    சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

    இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.
    • சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்தாக திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரி வினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருக்காணிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருக்காணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தநிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 2பேர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • திருச்சுழி அருகே சொத்து பிரச்சினையில் மகன், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார்.
    • இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலப்பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது63). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முத்தம் மாளின் கணவர் முத்துச் சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.

    அதன் பின்னர் தனது தோட்டத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். மேலப்பாறைக் குளத்தில் வசிக்கும் மகள்கள் முரு கேஸ்வரி, முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.

    இந்த நிலையில் அவர் தோட்டத்தில் தனியாக இருந்தபோது மகன் முத்துக் குமார் வந்தார். அவர் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கூறி தகராறு செய்தார். மேலும் மகள்கள் வீட்டிற்கு முத்தம் மாள் செல்லக்கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தார்.

    ஆனால் அதற்கு சம்மதிக் காமல் முத்தம்மாள் பதில் வாக்குவாதம் செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதில் காய மடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொத்து பிரச்சினையில் சகோதரியின் வீட்டுக்கு தீவைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள திரளியை சேர்ந்த அசோக் குமாரின் மனைவி சத்யா(வயது36), இவருடைய அண்ணன் சந்தோஷ் குமார்(39) புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். சத்யா குடியிருந்த வீட்டை அவரது தந்தை அவருக்கே எழுதி கொடுத்து விட்டார். இதனால் அண்ணன், தங்கைக்கு சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று சத்யா வீட்டுக்கு வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், சத்யா வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சத்யா வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 பேர் ஷோபகுமாரியின் கையை பிடித்து தகராறு செய்ததோடு, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீசில் புகார்
    • பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஏசுதாஸ், மார்ட்டின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள பத்தறை மேலவிளையை சேர்ந்தவர் விக்ரமன் தம்பி (வயது 70).

    இவருக்கும் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விக்ரமன் தம்பி தனது மனைவி ஷோபகுமாரியுடன் தங்கள் நிலத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மார்ட்டின், பெலிக்ஸ், ஆரோக்கியம் உள்பட 8 பேர் ஷோபகுமாரியின் கையை பிடித்து தகராறு செய்ததோடு, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    தாக்குதலில் படுகாயமடைந்த ஷோபகுமாரி உடையார்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி 9 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஏசுதாஸ், மார்ட்டின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    • ராஜபாளையத்தில் சொத்து பிரச்சினையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மனைவி அழகம்மாள் (57). கோபால் வீட்டின் அருகே அவரது சகோதரர் கிருஷ்ணன் (58) வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் தனது அண்ணியின் உறவினருக்கு சொந்தமான வீட்டை வாங்கியதாக தெரிகிறது. அதை ஏமாற்றி வாங்கி விட்டதாக கோபாலும், அவரது மனைவியும் கருதினர். இதனால் சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி 2 குடும்பத்தினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன், தனது மனைவி பொன்னுத்தாயுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அண்ணி அழகம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணன், அவரது மனைவிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.

    அப்போது கிருஷ்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் அழகம்மாளை தாக்கினார். இதில் அவரும் படுகாயமடைந்தார். 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது வழக்கு
    • புதுக்கடை போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே விழுந்தயம் பலம் பகுதி பனங்காலவிளையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் அந்த பகுதியில் பொருட்களை வினியோகிக்கும் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார். அருவை என்ற பகுதி, காட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டீபன் (67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சினை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று செந்தில்குமார் வீட்டருகில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு ஜார்ஜ் ஸ்டீபன் எரித்துள்ளார். இதனை செந்தில்குமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜார்ஜ் ஸ்டீபன் கையில் வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் மனைவி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை, இரண்டாவது மனைவி மகனுக்கு எழுதி வைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
    • 2-வது மனைவியின் மகன் சுகுமார் என்பவரும் சேர்ந்து அடித்து விரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தனசேகரன், கோகிலாமணி இருவரும் புகார் அளித்தனர்.

    ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தனசேகரன், கோகிலாமணி தம்பதியினர். தனசேகரின் தந்தை பழனிசாமிக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை, இரண்டாவது மனைவி மகனுக்கு எழுதி வைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், மேட்டூரில் வசித்து வந்த தனசேகரன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மனைவியுடன் வந்து தாசநாயக்கன்பட்டி வீட்டில் வசித்து வருகிறார். இங்கு குடியிருக்கக்கூடாது என்று பழனிசாமியும், 2-வது மனைவியின் மகன் சுகுமார் என்பவரும் சேர்ந்து அடித்து விரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தனசேகரன், கோகிலாமணி இருவரும் புகார் அளித்தனர்.இந்த புகார் குறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் தனசேகரன், கோகிலாமணி இருவரையும் கையையும், கழுத்தையும் பிடித்து வெளியே தள்ளியாதாக கூறப்படுகிறது.

    போலீசாரின் இந்த செயலை கண்டித்து தனசேகரன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் முன்பாகவே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நியாயத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதா குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்களின் புகார் குறித்தும், போலீசார் வெளியே தள்ளியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, காவல் நிலையத்திற்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர். அதனால், வெளியே சென்று பேசுங்கள் என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டது. வேறு ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

    ×