search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட்"

    • ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.
    • கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது. தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்த திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

    சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    இம்மாதம், தெலுங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்ய இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
    • 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.

    திருப்பதி:

    டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டல்லா லானா பொது சுகாதார மையத்தை சேர்ந்த பேராசிரியர் பிரபாத் ஜா ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    40 வயதிற்குள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால், புகை பிடிக்காதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, கன்னடா, மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 40 வயது முதல் 79 வயது வரை உடைய1.5 மில்லியன் சிகரெட் பிடிப்பவர்கள் மற்றும் பிடிக்காதவர்களிடம் ஆய்வு நடத்தினார்.

    சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.

    மேலும் 12 முதல் 13 ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழலாம். 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.

    இதனால் பெரிய நோய்களிலிருந்து அபாயத்தை குறைக்கலாம் சிகரெட் பிடிப்பதன் மூலம் வாஸ்குலர் மற்றும் புற்றுநோயால் இறக்கும் ஆபத்தை குறைக்கலாம். மேலும் நுரையீரல் நோய்களிலிருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

    • இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.
    • புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார்.
    • பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார். பின்னர் தான் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த தீப்பிடித்ததற்கான அலாரம் ஒலித்தது.

    இதனால் பயணிகள் மத்தியில் தீ பிடித்ததாக பீதி ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் மானுபாலு என்ற ரெயில் நிலையம் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு விரைந்து சென்றனர். அலாரம் ஒலித்த கழிவறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது உள்ளே ஒருவர் கையில் சிகரெட்டுடன் இருந்ததை பார்த்தனர். உடனே அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர் நெல்லூர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    • உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர்.
    • புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    சென்னை:

    புற்றுநோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 'நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல' என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

    உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்ப்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட நோய்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 15 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

    உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதை ஏற்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்திலும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. அது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை மீறி எல்லோருக்குமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே இதை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக்கடை, டீக்கடைகளில் தற்போது உள்ளதை போல் இனிவரும் நாட்களில் இஷ்டத்துக்கு பீடி, சிகரெட் விற்க முடியாது. லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க அனுமதிக்கப்படும். மேலும் அந்த கடைகளில் பீடி, சிகரெட்டை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்க முடியாது.

    இந்த விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும். சிறுவர்களிடையே புகைப்பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு தடுக்க முடியும். அதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி அருகே சிகரெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.16 ஆயிரத்து 540 பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    தத்தனேரி கொன்னவாயன் சாலையில் பள்ளி அருகே சிகரெட் விற்பனை நடைபெறுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அங்கு தத்தனேரி பள்ளிவாசல் தெரு காஜா மைதீன் மகன் சுல்தான் ரியாஸ்(35) சிகரெட் விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சக்தி நகர் விசுவநாதன் (60), மீனாட்சி நகர் சோனையா பிள்ளை சந்துகுமார்(48), அதேபகுதியை சேர்ந்த சிவகுமார் (45) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.16 ஆயிரத்து 540 பறிமுதல் செய்யப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
    • கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    மும்பை:

    இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மது விற்பனை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

    சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி டிசம்பர் 2022 வரை கடந்த 4 காலாண்டுகளில் சிகரெட் விற்பனை அளவு தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே போல மது விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.

    கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    இதுகுறித்து மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் கூறுகையில், பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான மேக்ரோ பொருளாதார பிரச்சினை சற்று இழுபறியாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் தேவை தொடர்ந்து வழுவாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

    அதிக வரி விதிப்பு, சட்ட விரோத மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மீது கடும் நடவடிக்கை ஆகியவை சிகரெட் சந்தையில் அதன் விற்பனை அளவை அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • சரக்கை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு ஓட்டுனரை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
    • கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நவி மும்பையில் உள்ள ரபேலில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இன்று அதிகாலை லாரி ஒன்று சிகரெட் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் காரில் வந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் லாரியை வழிமறித்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர், ஓட்டுனரின் கண்களை மூடிவிட்டு கொள்ளையர்களின் ஒருவன் லாரியை ஓட்டினான். இதையடுத்து, சரக்கை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு ஓட்டுனரை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு ரூ. 1.36 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளன*

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த துரைராஜ் கட்டிலில் படுத்துக்கொண்டே சிகரெட் பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.
    • உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்த துரைராஜ் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி இ.பி. ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 71). இவருக்கு ரத்த கொதிப்பு காரணமாக கை, கால்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைராஜ் கட்டிலில் படுத்துக்கொண்டே சிகரெட் பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் எதிர்பாராத விதமாக சிகரட்டில் இருந்த தீப்பொறி கட்டிலில் விழுந்து தீப்பிடித்தது. இதில் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்த துரைராஜ் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.
    • பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.

    கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் மாணவர்களுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

    • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 30 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
    • 4 கடைகளில் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமை–யில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சேலம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், செவ்வாய்பேட்டை, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், மேட்டூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 30 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    அதில், 4 கடைகளில் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அதேபோல், பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பழைய பேப்பர் வியாபாரம் மேற்கொள்ளும் 32 கடைகளில் ஆய்வு செய்ததில், 12 கடைகளில் விதிமீறல்கள் காணப்–பட்டன. இதைத்தொடர்ந்து மொத்தம் 16 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

    • புகையிலை பொருட்களில் சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.
    • உலக அளவில் ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.

    டொரண்டோ:

    கனடா நாட்டில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் கூறும்போது, புகையிலை பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.

    சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்க செல்லும் இளைஞர், சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளி விட்டு செல்கிறார். இது தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.

    இந்த எச்சரிக்கை பற்றிய புதிய மாற்றத்திற்கான ஆலோசனை காலம் இன்றில் இருந்து தொடங்க இருக்கிறது. வருகிற 2023ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இருந்து புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது.

    அந்த சிகரெட்டுகளின் மீது பதிக்கப்படும் சரியான வாசகம் மாற்றப்படலாம் என கூறியுள்ள பென்னட் தற்போது, ஒவ்வொரு முறை இழுக்கும்போதும் விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகம் ஒப்புதலுக்காக உள்ளது என்று கூறியுள்ளார்.

    இதனால் உலக அளவில், ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.

    ×