search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிப்டோகரன்சி"

    • 18 வயது முதல் 25 வயது வரையிலானோர் 35 சதவீதம்
    • 18 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருப்பதாக ஆய்வில் தகவல்

    கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டடு மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு சென்றார்கள். பொருளாதார சிக்கலில் சில நாடுகள் சிக்கித் தவித்ததாலும் கிரிப்டோகரன்சியின் பரிமாற்றம் விஸ்பரூபம் அடைந்தது. இதனால் பிட்காய்ன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

    இனிமேல் கிரப்டோகரன்சிதான் என்று கூறப்பட்டது. சில நாடுகள் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் வெளிவருவது குறைந்துவிட்டது.

    பாகிஸ்தானில் அரசியல் நிலையற்றத் தன்மை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் பாகிஸ்தானியர்களின் பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

    கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களில் 10 பேரில் ஒருவர் பணத்தை பெறுவதும், சம்பளம் செலுத்துவதையும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிமாற்றம் செய்ய விரும்புகிறார்கள் என குகாய்ன் என்ற உலகாளவிய கிரிப்டோகரன்சி எக்சேஞ்ச் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    குடும்ப ஆண்டு வருமானம் 5 மில்லியன் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30 சதவீதம் பேர் புது முதலீட்டார்களாக சேர்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானிய முதலீட்டார்களில் 40 சதவீதம் பேர் 30 ஆயிரம் அல்லது 100 டாலருக்கு குறைவாக முதலீடு செய்துள்ளனர். இதில் 18 வயது முதல் 25 வயதுள்ள முதலீட்டாளர்கள் 35 சதவீதம் பேர். தற்போது குறைவான பணம் முதலீடு செய்தாலும் பிற்காலத்தில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை யூகித்து முதலீடு செய்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தான் வங்கி இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. டிஜிட்டல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. அதில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கூறுவது மிகவும் கடினம் என்றாலும், தற்போது பாகிஸ்தானின் முதலீட்டாளர்களின் மதிப்பு 18 பில்லியன் டாலர் முதல் 25 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.

    • பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
    • அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோகரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

    அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

    முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.

    இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.

    மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோகரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.

    எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    • இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
    • 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது.

    பெங்களூரு:

    சிந்தனையாளர்கள் அமைப்பு சார்பில் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்தியா மட்டும் அதை முறைப்படுத்துவதால் சரியாக இருக்காது. 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது. இந்த ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த சபை கூட்டத்தில் விவாத பொருளில் (அஜண்டா) கிரிப்டோகரன்சி விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கிரிப்டோகரன்சி குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. அது நுண்ணிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று கூறியுள்ளது. ஜி20 நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டுள்ள நிதி நிலை தன்மை வாரியமும் (எப்.எஸ்.பி.) அதுகுறித்து அறிக்கை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அந்த அமைப்பும் நிதி நிலை தன்மை குறித்த விஷயத்தில் கவனம் செலுத்தும்.

    அந்த எப்.எஸ்.பி. அறிக்கை மற்றும் சர்வதேச நிதியக அறிக்கை குறித்து வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். வருகிற செப்டம்பரில் ஜி20 நாடுகள் சபையின் பிரதமர்கள் மாநாடு நடக்கிறது. டிஜிட்டல் கரன்சிகள் முழுவதுமாக டிஜிட்டல் மயம், தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. சில நேரங்களில் அதன் அடையாளத்தை ஏற்படுத்துவது மிக கடினமானது. ஆனால் அது ஆற்றல் வளம் வாய்ந்தது. அதனால் அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்த விஷயத்தில் ஒரு நாடு தனித்து செயல்பட முடியாது. ஏனெனில் தொழில்நுட்பத்திற்கு எல்லை கோடுகள் கிடையாது. அதற்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கிரிப்டோகரன்சி விஷயம் பயனுள்ளதாக இருக்காது.

    ஆனால் வினியோகிக்கப்படும் பதிவு தொழில்நுட்பத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த பதிவு தொழில்நுட்பம் நல்ல நிலை, வளம் மற்றும் சொந்த பலத்தை கொண்டுள்ளது. இதை நாங்கள் எங்களின் மனதில் வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன்-ரஷியா போர் சூழலுக்கு மத்தியிலும் இந்தியா தனது வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.

    கச்சா எண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. அதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது. இதற்கு எதிராக ஒவ்வொரு அரசும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் பால் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. நான் பெங்களூருவில் நந்தினி பால், இனிப்பு, தயிர் சாப்பிட்டேன். டெல்லியில் இருக்கும்போது, அமுல் நிறுவன பால் பொருட்களை பயன்படுத்துகிறேன்.

    டெல்லியில் நந்தினி பால் பொருட்கள் கிடைப்பது இல்லை. நான் அமுல் பொருட்களை வாங்குவதால் கர்நாடகத்திற்கு எதிராக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. கர்நாடகத்தில் நந்தினி பால் நிறுவனத்தை பலப்படுத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும். நந்தினி பொருட்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.

    அதே போல் பிற மாநில பால் பொருட்கள் கர்நாடகத்தில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல போட்டி தான் என்று சொல்வேன். அதனால் தான் உலகில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்திய திகழ்கிறது. நந்தினி பால் நிறுவனத்தை அழிக்கவே அமுல் கொண்டு வரப்படுவதாக சொல்வது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் தான் அமுல் நிறுவன பால் பொருட்கள் கர்நாடகத்தில் அனுமதிக்கப்பட்டன.

    ஆனால் அந்த ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் தற்போது அதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதை உணர்வு பூர்வமான விவகாரமாக மாற்றியுள்ளனர். அரசியல் விஷயங்களுக்குள் நமது விவசாயிகள், பெண்களை இழுக்க கூடாது. எடியூரப்பா ஆட்சியில் பாலுக்கு ஆதரவு விலையாக லிட்டருக்கு ரூ.2 வழங்கப்பட்டது. அதன் பிறகு அது ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • ஒரு நாளில் 101 புகார்கள் வந்துள்ளன.

    மும்பை:

    ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வந்தனர். இவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். இந்த நிலையில் இவர்களிடம் முதலீடு செய்து நஷ்டமடைந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல மேலும் பலர் இந்த கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கலாம் என உணர்ந்த போலீசார், அப்படி பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொதுஅறிவிப்பை வெளியிட்டனர்.

    இதன்மூலம் ஒருநாளில் மாவட்டம் முழுவதும் இருந்து 101 பேர் போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் முதலீட்டாளர்கள் ரூ.700 கோடி வரை இந்த மோசடியில் இழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    காரத் தம்பதியின் மீதான இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் கிரண் காரத் போலீசில் அளித்த புகாரின் மூலம் இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தனது புகாரில் "தனது கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் மற்றும் 20 பேர் தன்னை 4 நாட்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தனது சில சொத்துகள் மற்றும் நிலங்களை விஜய் ஜோல் பெயரில் மாற்ற கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கரின் மருமகன் ஆவார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரண்டியல் கூறுகையில், 'அர்ஜுன் கோட்கரும் அவரது ஆட்களும் காரத்தை பிணை கைதியாக பிடித்து வைத்து துன்புறுத்தியதன் மூலமாக சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்' என குற்றம் சாட்டினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கிரிப்டோகரன்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும செயலறியல் துறை சார்பில் ''கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம்'' என்ற தலைப்பில் காணொலி மூலமாக கருத்தரங்கு நடந்தது.

    இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கிரிப்டோ கரன்சி பற்றி விளக்குவதும், அதன் செயல்பாடுகளைப் புரிய வைப்பதும் ஆகும்.

    சென்னை இந்துக் கல்லூரியின் முதுகலை மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை சிவப்பிரியா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் அதன் மதிப்பைப் பெறும் கிரிப்டோ கரன்சிகள் குறித்து விளக்கினார்.

    இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பார்க்கவும், கண்காணிக்கவும் முடியும் என்று கூறிய அவர், அதன் பரிவர்த்தனை முறையையும் விளக்கினார்.

    கிரிப்டோகரன்சிகளில் பரிவர்த்தனை செய்யும் ஆப்பிள் பே டாலர் , யுரோ போன்ற பியட் கரன்சிகளைப் போல இல்லை என்றும் இது பொதுவாக நாணயங்கள் மற்றும் டோக்கன்கள் போன்ற 2 வகைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார். துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயம் ஆகும்.
    • ஒரு பதாகையில் கிரிப்டோ மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பீட்டை குறித்து வைத்துள்ளார்.

    பெங்களூரு :

    பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் சுபம் சாய்னா. இவர் மாரத்தஹள்ளியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம், சில்லறை நாணயம் வாங்குவது கிடையாது. அதற்கு மாற்றாக கிரிப்டோகரன்சி வாங்கி வருகிறார். இதற்காக அவர் தனது கடையில் ஒரு பதாகையில் கிரிப்டோகரன்சி வாங்கப்படும் என்றும், கிரிப்டோ மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பீட்டை குறித்து வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை அக்சய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    தற்போது அவை சமூக வலைத்தளத்தில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருளாக மாறிஉள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், டீ கடைக்காரர் கிரிப்டோகரன்சி பயன்படுத்தும் அளவிற்கு நாடு டிஜிட்டல் தரம் பெற்றுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சுபம் சாய்னா, ஆரம்ப காலத்தில் கிரிப்டோகரன்சி முதலீடு செய்து பணத்தை இழந்து வந்துள்ளார். பின்னர் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் டீ கடையை தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கு கிரிப்டோகரன்சி மீது உள்ள ஆர்வம் காரணமாக தனது வாடிக்கையாளர்களிடம் பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி நாணயத்தை பெறுவதற்கு விரும்புகிறார். கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயம் ஆகும். இது காகிதமற்ற பணபரிமாற்ற முறையில் சர்வதேச அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் கடந்த காலங்களில் கிரிப்டோகரன்சி விவகாரம் அரசுக்கு எதிராக தலை தூக்கியதும் குறிப்பிடத்தக்கது.

    ×