search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் தகனம்"

    • முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    • இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    விக்கிரவாண்டி:

    உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    • ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டு பேசினர்.

    அருமனை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு ஊராட்சி பகுதியான புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், ஜவுளி வியாபாரி. இவரது மகள் ரோகிணி (27) சீனா நாட்டில் மருத்துவ படிப்பிற்காக சென்றிருந்தார். படிப்பை முடித்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராக இருந்துள்ளார். பெற்றோரும் மகளுக்காக காத்திருந்தனர். ஆனால் சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரோகிணி மருத்துவமனையில் இறந்து விட்டதாக கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வெளிநாடு உறவினர்களி டம் பேசி கொண்டு வருவதற்கான ஏற்பாடு நடந்தாலும், இந்தியன் தூதரகத்தில் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இந்த நிலையில் 51 நாட்களுக்கு பிறகு ரோகிணி உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.

    புல்லந்தேரியில் வீட்டிற்கு கொண்டு வந்த மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு மாணவியின் உடலை கண்ணுமாமூட்டில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன், காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார் (29).

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சகமாணவர்கள் அவரை தேடிய போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும், பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதன்குமார் உடல் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியை அடுத்த புதூரில் உள்ள சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    இதையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர் அஞ்சலி

    தொடர்ந்து அவரது உடல் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உள்பட பலர் மதன்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் நாமக்கல் மின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மகன் சாவுக்கான காரணத்தை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
    • சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை.

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டது சிட்லபாக்கம். இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க சுமார் ரூ.23 கோடி செலவில் தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தனிநடை பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஏரியை சுற்றி நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். மேலும் சிட்லபாக்கம் ஏரியை முன்மாதிரியான ஏரியாக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிட்லபாக்கம் ஏரியின் ஒரு புறத்தில் 44-வது வார்டுக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஏரிகரையை ஒட்டி பழைய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டின் அருகில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளி உள்ளது.

    இந்நிலையில் இந்த சுடுகாட்டில் பழைய முறைப்படியே கட்டைகளை வைத்து திறந்தவெளியில் இறந்தவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, சிட்லபாக்கம் பேரூராட்சியாக இருந்த போதே பாலாஜி அவன்யூ பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. தற்போது தாம்பரம் மாநகராட்சி உடன் இணைந்த பின்பும் இந்த சுடுகாட்டை நவீனமாக்க இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பை விட தற்போது சிட்லபாக்கம் பகுதியில் மக்கள்தொகை அதிகரித்து உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கூடுதலாக உடல்கள் வருவதால் ஏரிக்கரையோரம் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை. பொதுப்பணி துறையின் அனுமதி கிடைத்த பின்பு இங்கு நவீன மயானம் அமைக்கப்படும் என்றனர்.

    • தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    உயிரோடு இருக்கும் போது எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுகிறதோ அதைவிட அதிகமாக இறந்த பிறகு உடலுக்கும் வழங்குவதுதான் மரபு. எனவேதான் இறந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் தகனம் செய்கிறார்கள்.

    சென்னையில் மாநகராட்சி சார்பில் ஏராளமான மின் மயானங்கள் செயல்படுகிறது. இந்த மயானங்களுக்கு தகனம் செய்ய கொண்டு செல்லப்படும் உடல்களை தகன மேடைக்குள் வைப்பதற்கு முன்பு உறவி னர்கள் மரியாதை செலுத்துவார்கள். பின்னர் மயான பணியாளர்கள் அந்த உடலை பெற்று எரி மேடைக்குள் வைப்பார்கள்.

    எரியூட்டப்படும் உடல்கள் முற்றிலும் எரிந்து சாம்பல் கிடைப்பதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அப்படித்தான் மயானங்களில் இருந்து தகனம் செய்யப்பட்டவர்களின் சாம்பலை உறவினர்கள் பெற்று செல்வது வழக்கம்.

    சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் 68 வயதான இறந்தவர் உடலை எரிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். முறைப்படி உடலை பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர்.

    ஆனால் இவ்வளவு விரைவாக எப்படி எரியும் என்று சந்தேகப்பட்ட உறவினர்கள் சிலர் தகன மேடையை சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அரைகுறையாக எரிந்த உடல் உள்ளே இருக்கும் போதே மற்றொருவர் உடலை எரியூட்ட உள்ளே திணித்ததை பார்த்து இருக்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீ ஜுவாலைக்குள் அரைகுறையாக எரிந்த நிலையில் உடல் இருக்கும் நிலையில் இன்னொரு உடலை திணிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்கள்.

    இந்த தவறை செய்த 3 பணியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் பிரபு ஜீசஸ் கூறினார்.

    இங்கு நாள் ஒன்றுக்கு 4 உடல்களை மட்டுமே எரிக்க முடியும் என்றும் மாலை 4 மணியளவில் மேலும் 2 உடல்கள் தகனத்துக்கு காத்திருந்ததாகவும் கூறினர்.

    அதிகாரிகள், காவல் துறை தலையிட்டு இரவு 11 மணியளவில் உடல் தகனம் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மயானத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், எரிவாயுவை மிச்சப்படுத்த இந்த மாதிரி செயல்படலாம் என்று சந்தேகப்படுவதாகவும் புகார் கூறினார்கள்.

    இதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    • பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவரது உடலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
    • சர்வீஸ் சாலையில் வைத்தே குஜூன்மோனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சக்குளத்துகாவு பகுதியை சேர்ந்தவர் குஜூன்மோன்(வயது72). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் பூத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்ட குஜூன்மோனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    அவரை அவரது உறவினர்கள் நீரில் மூழ்கிய பகுதி வழியாக சிரமப்பட்டு கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்வதிலும் வெள்ளம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.

    ஆகவே அவரது உடல் புஸ்பகிரி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால் வெள்ளம் வடியாததால் அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே அவரது இறுதி சடங்கை வெள்ளம் இல்லாத பொது இடத்தில் வைத்து நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து குஜூன்மோனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள சர்வீஸ் சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவரது உடலை பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்பு சர்வீஸ் சாலையில் வைத்தே குஜூன்மோனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    அவரது மகன் சுனில்குமார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதய நோயால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
    • பணம் மட்டுமின்றி பொருட்கள் உதவியும் எங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தது.

    திருப்பதி:

    லக்னோவைச் சேர்ந்த பெண் சமூக சேவகர் வர்ஷா (வயது 42). இவர் சிறுவயது முதலே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

    கொரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சு ஏற்பாடு செய்தார். பின்னர் ஆதரவற்றவர்கள் மற்றும் கொரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தார்.

    இவரது தலைமையில் 12 பேர் கொண்ட குழு உள்ளது. இந்த குழுவினர் கடந்த 3 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடலை தகனம் செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 200 பேர் உடல்கள் இவர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    வர்ஷாவின் சமூக சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவர் உலகின் மதிப்புமிக்க போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    கொரோனா பரவல் ஏற்பட்டபோது எனது நெருங்கிய நண்பர் இறந்து விட்டார். அவரது உடலை எடுத்துச் செல்வதற்காக உதவி கேட்டோம். ஆனால் நோய் பரவலுக்கு பயந்து ஆம்புலன்சு கொண்டுவர மறுத்தனர்.

    மேலும் சிலர் கொடுக்க முடியாத தொகையை கேட்டனர். இந்த சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாள் ஒரு ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து டிரைவரை அமர்த்தினேன்.

    அதில் இறந்தவர்களை ஏற்றிச்செல்ல இலவச வாகனம் என்ற எழுதியபடி எனது நண்பர் பலியான ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.

    கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    முதல் நாளில் 5 உடலை தகனம் செய்தோம். தொடக்கத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது. காரணம் கவச உடை அணிந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலிலும் உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டோம்.

    சில நாட்கள் அதிக அளவில் உடல்களை அடக்கம் செய்ய நேர்ந்ததால் சுடுகாட்டிலேயே இரவு நேரங்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.

    தொடக்கத்தில் எனது சொந்த பணத்தை பயன்படுத்தினேன். பிறகு உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் எங்களுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கினார். அதன் மூலம் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தோம்.

    பணம் மட்டுமின்றி பொருட்கள் உதவியும் எங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தது. அதன் மூலம் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறோம்.

    ஆரம்பத்தில் நான் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் நான் விளக்கி கூறியதும் எனது செயலை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.
    • ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

    ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைதொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர்ஜெயந்த் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேஜர் ஜெயந்த் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனைபடைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார். ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்தார். 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.

    பைலட் பயிற்சியில் தேர்வுபெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார். 2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவகுடியிருப்பில் மேஜர்ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார்.

    மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் தெரிவிக்கையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதேபோல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனைதொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன். அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்றார்.

    ×