உடலை அரைகுறையாக எரிக்கும் அவலம்- விரைவில் சாம்பல் கொடுத்ததால் உறவினர்கள் கண்டுபிடித்தனர்

தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடலை அரைகுறையாக எரிக்கும் அவலம்- விரைவில் சாம்பல் கொடுத்ததால் உறவினர்கள் கண்டுபிடித்தனர்
Published on

சென்னை:

உயிரோடு இருக்கும் போது எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுகிறதோ அதைவிட அதிகமாக இறந்த பிறகு உடலுக்கும் வழங்குவதுதான் மரபு. எனவேதான் இறந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் தகனம் செய்கிறார்கள்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் ஏராளமான மின் மயானங்கள் செயல்படுகிறது. இந்த மயானங்களுக்கு தகனம் செய்ய கொண்டு செல்லப்படும் உடல்களை தகன மேடைக்குள் வைப்பதற்கு முன்பு உறவி னர்கள் மரியாதை செலுத்துவார்கள். பின்னர் மயான பணியாளர்கள் அந்த உடலை பெற்று எரி மேடைக்குள் வைப்பார்கள்.

எரியூட்டப்படும் உடல்கள் முற்றிலும் எரிந்து சாம்பல் கிடைப்பதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அப்படித்தான் மயானங்களில் இருந்து தகனம் செய்யப்பட்டவர்களின் சாம்பலை உறவினர்கள் பெற்று செல்வது வழக்கம்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் 68 வயதான இறந்தவர் உடலை எரிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். முறைப்படி உடலை பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் இவ்வளவு விரைவாக எப்படி எரியும் என்று சந்தேகப்பட்ட உறவினர்கள் சிலர் தகன மேடையை சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அரைகுறையாக எரிந்த உடல் உள்ளே இருக்கும் போதே மற்றொருவர் உடலை எரியூட்ட உள்ளே திணித்ததை பார்த்து இருக்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீ ஜுவாலைக்குள் அரைகுறையாக எரிந்த நிலையில் உடல் இருக்கும் நிலையில் இன்னொரு உடலை திணிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்கள்.

இந்த தவறை செய்த 3 பணியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் பிரபு ஜீசஸ் கூறினார்.

இங்கு நாள் ஒன்றுக்கு 4 உடல்களை மட்டுமே எரிக்க முடியும் என்றும் மாலை 4 மணியளவில் மேலும் 2 உடல்கள் தகனத்துக்கு காத்திருந்ததாகவும் கூறினர்.

அதிகாரிகள், காவல் துறை தலையிட்டு இரவு 11 மணியளவில் உடல் தகனம் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மயானத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், எரிவாயுவை மிச்சப்படுத்த இந்த மாதிரி செயல்படலாம் என்று சந்தேகப்படுவதாகவும் புகார் கூறினார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com