என் மலர்
நீங்கள் தேடியது "இடைக்கால பட்ஜெட்"
- மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது.
- தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது.
திருச்சி:
திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு பணிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடாக நடத்தப்பட உள்ளது. இது தமிழக இன அரசியல் வரலாற்றில் ஒரு பாய்ச்சலாகவும், ஒரு படிநிலை முன்னேற்றமாகவும், மாறுதலாகவும் அமையும். உயிரினங்கள் வாழ்வதற்கு ஐந்து பஞ்சபூதங்களும் அவசியம் வேண்டும். ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நீரற்ற நிலமாக மாறி வருகின்றன.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நிலத்தடியில் நீர் இல்லை என இந்த அரசாங்கம் சொல்கிறது. செய்தி சொல்வதற்கு இந்த அரசு தேவையில்லை. அதனை சீர் செய்வதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் ஆறு மாவட்டங்களில் தண்ணீரில் யுரேனியம் கலந்து தாய்ப்பாலில் அது கலந்து விட்டதாக கூறியுள்ளனர்.
ஆகவே தான் நாங்கள் இந்த நிலம், நீர், மரம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் மாநாடு நடத்தியுள்ளோம். நாம் வழிபடுவதற்கு இங்கு ஒரு கோடி தெய்வங்கள் உள்ளன. ஆனால் நாம் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி மட்டும் தான் இருக்கிறது. வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளோம். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் போட்டியிடும் தொகுதியையும் அன்று அறிவிப்பேன்.
இடைக்கால பட்ஜெட் குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் 10¼ லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளார்கள். இங்கு கடன் வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் இந்த ஆட்சி முறையை மாற்ற வேண்டும் எனச் சொல்கிறோம்.
மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது. எங்கள் மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது. எங்கள் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப்போகிறது. மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது. இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடாக இருக்கப் போகிறது.
அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன். தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்கிறீர்கள்.
தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின்தான். அவர் இல்லை என்றால் இந்தியா கூட்டணி இல்லை. அவர் கொடுத்தது தான் காங்கிரஸ் 10 தொகுதி. அவர் விலகிவிட்டால் இந்தியா கூட்டணி கிடையாது. அதனால் தான் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை ஆதரித்து வருகிறார்கள் என்றார்.
- ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும்.
- 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று ஆகும். சொந்த வரி வருவாயாக ரூ.2.06 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியிருக்கும் திமுக அரசு, அதில் 90 விழுக்காட்டை, அதாவது 1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கிக் குவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால் இதில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், 2025-26ஆம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிச் செயல்பாடுகள் தமிழ்நாட்டை சீரழித்து, கடன் வலையில் வீழ்த்துவதாக அமைந்திருக்கின்றன. திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் கணிக்கப்பட்டதை விட 21% அதிகமாக ரூ.1 லட்சத்து 84,551 கோடியை கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கிக் குவித்திருக்கிறது.
ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால், 2025-26ஆம் ஆண்டில் மூலதனச் செலவாக ரூ.51,443 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறது. இது 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.57,231 கோடியை விட ரூ.6788 கோடி குறைவாகும். ரூ.51,443 கோடிக்கு மூலதனச் செலவுகளை செய்துள்ள திமுக அரசு, அந்த அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை விட மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இதை விட மோசமான நிதி மேலாண்மை இருக்க முடியாது.
வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள சுமார் ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது?
கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி கடன் நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை நடப்பாண்டில் கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியிலிருந்து தான் திமுக அரசு செலுத்தியுள்ளது. புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் திமுக செய்திருக்கிறது. கடனை அடைக்க செலுத்தப்பட்ட தொகையும் போக, கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில் ரூ.77,223 கோடி மீதமிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை எங்கு போனது என்பது தெரியவில்லை.
வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறித்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்படும் என்று ஒவ்வொரு ஆண்டும் கூறி வந்தது. ஆனால், இன்று வரை திமுக அரசு வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்கவில்லை; மாறாக உயர்த்தி வைத்திருக்கிறது. 2025-26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசுக்கு நிதி மேலாண்மைத் திறன் இருந்திருந்தால் இதை இயன்றவரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை விட 66%, அதாவது ரூ.27,584 கோடி அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட வருவாய்ச் செலவுகளைக் கூட திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை; அதைக் கூட கடன் வாங்கித் தான் அரசு செலவு செய்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசு தேவையின்றி கடன் வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. மூலதன செலவுகளுக்காக மட்டும் கடன் வாங்கி, மொத்தக் கடன் சுமையை குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான திறனும், அறிவும் திமுக அரசுக்கு இல்லை.
வருவாயைப் பெருக்குவதும், அதற்குள் செலவு செய்வதும் தான் சிறந்த நிதி நிர்வாகம் ஆகும். ஆனால், இந்த இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் ரூ.2.20 லட்சம் கோடி சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இது இலக்கை விட ரூ.14,355 கோடி, அதாவது 6.50% குறைவு ஆகும். அதேபோல், வரி அல்லாத வருவாய் இலக்கை விட 7.82%, அதாவது ரூ.2554 கோடி குறைந்து விட்டது. மொத்த வருவாயும் ரூ.3.31 லட்சம் கோடி என்ற இலக்கில் இருந்து ரூ.21,871 கோடி (6.6%) குறைந்து ரூ.3.09 லட்சம் கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில் அரசின் வருவாய் செலவுகள் ரூ.5113 கோடி அதிகரித்து ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கடன் வாங்கிக் குவித்ததைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யப்படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952-ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020-21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி ஆகும். 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும். தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
- ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்" என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்… என்று கூறியுள்ளார்.
- எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
- நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.
கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.
முதலமைச்சரின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை.
- மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
- நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
சென்னை :
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டிவதைத்த ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
* திமுக அரசு எந்த அளவிற்கு தமிழக மக்களுக்கு காது குத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவே பத்திரிகை வெளியிட்டோம்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காமல் திமுக அரசு ஏமாற்றி உள்ளது.
* பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
* வாய்ஜாலம் நிறைந்த மேனாமினிக்கி உரை போல் தான் இடைக்கால பட்ஜெட் உரை உள்ளது.
* திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது.
* சுமார் ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது.
* மாநில சொந்தவரி வருவாய் குறைந்தது குறித்து சட்டசபையில் இன்று எந்த விளக்கத்தையும் நிதியமைச்சர் கூறவில்லை.
* நிதி நிர்வாக திறனற்ற திமுக அரசால் மக்கள் மீது மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.
* நிதி பற்றாக்குறையை குறைக்க மக்கள் மீது வரி சுமையை ஏத்துவதும் கடன் வாங்குவதும் நல்லதல்ல.
* மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
* நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
* அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும், புட்டு பார்த்தால் சொத்தையாக இருக்கும் அதுதான் இன்றைய பட்ஜெட்.
* ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று கூறினார்கள் மொத்தமாகவே 140 நாள் தான் நடத்தினார்கள்.
* வேளாண்துறையில் நீர்வளத்துறையை சேர்த்தது ஏன்? வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று பட்ஜெட்.
* கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றார்.
- 2025-26 நிதி ஆண்டில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* 2025-26 நிதி ஆண்டில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
* 2026-27 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி நிலுவையில் உள்ளது.
* 2025-26ல் தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ.9.52 லட்சம் கோடி.
* இடைக்கால பட்ஜெட்டின் படி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் ரூ.10.62 லட்சம் கோடி.
* மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைவிடாமல் தாக்கல் செய்து தனது உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.
- தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
- விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* 4,226 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான விளையாட்டுக் கருவிகளைத் தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை வழங்கி உள்ளது.
* தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 101 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
* மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா-இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நாடே வியக்கும் வண்ணம் கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் இளையோருக்கான உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடத்தப்பட்டதைப் பாராட்டும் விதமாக, இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் விளையாட்டு விருதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் வென்றெடுத்துள்ளது.
* விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது.
- 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* புயல், பெரு வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறம்படக் கையாண்டது.
* ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கோரிய போதிலும் ரூ.1151 கோடி மட்டுமே கொடுத்தது.
* பேரிடர் நிவாரண நிதியில் சொற்பமான நிதியைத் தான் மத்திய அரசு கொடுத்தது.
* பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு தமிழகத்தில் ரூ.6,013 கோடி தான் கொடுத்துள்ளது.
* பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது.
* இடைக்கால பட்ஜெட்டில் வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வரிப் பகிர்வு பங்கை அதிகரிக்க வேண்டும் என கேட்ட போதும் 41% ஆக தொடரும் என அறிவித்தது.
* அரை நூற்றாண்டு காலம் கடந்த பிறகும் கூட நிலை மாறவில்லை.
* தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு 4.07% ஆக குறைக்கப்பட்டதால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* 0.44% மிகச்சிறிய அளவிலேயே நிதிப் பகிர்வு உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* 16-ஆவது நிதிக்குழுவும் தனது கடமையில் இருந்து தவறி இருக்கிறது.
* செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது.
* ஜி.எஸ்.டி.யால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
* 2025-26 மத்திய அரசின் பட்ஜெட்டில் வரிப் பங்கு திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி இழப்பீட்டு நிதி தர நிபந்தனை விதிக்கப்படுகின்றன.
* மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள்.
* ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3112 கோடி நிலுவை.
* மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி நிலுவைக் கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது.
* நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி.
* நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
* மத்திய அரசின் வரிப் பங்கீடு தமிழகத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
* 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு
* மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்.
* அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.
* ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது. 5 ஆண்டுகளில் புதிதாக 43 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 17318 பேர் புதிதாக காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடம் தமிழ்நாடு முதலிடம்.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22-ம் நிதி ஆண்டில் 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 623 நபர்களுக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகள் மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், சென்னை மற்றும் அதன் கூழ் பகுதிகளில் 15 ஆயிரத்து 393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62 ஆயிரத்து 407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
* நவீன மின்னணு நில அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி நிகழ்நேர இயக்கவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மறு நில அளவைப் பணி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
* அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
* 84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
* கோவிலுக்குச் சொந்தமான 8111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 120 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
* சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
* அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
* மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் தலையாய நோக்கம்.
* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
* நடப்பாடிண்டில் 14.89 லட்சம் மெட்ரின் டன், 5 ஆண்டுகளில் 2.15 கோடி மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட்டுறவு உணவு நுகர்வோர் துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 45 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,359 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* மீனவர்களின் நலனுக்கும் நல வாழ்வுக்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
* இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுக பணிகள் நடைபெற்று வருகின்றன.
* மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் தொகை ரூ.8000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* கப்பல் கட்டுமானத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை பரவலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
* கோவை மாவட்டத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.
* சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முதலீடு, வர்த்தகத்துறைக்கு ரூ.4882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மின் தேவை எதிர்காலத்தில் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
* பசுமை மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் 1000 மெகாவாட் மின்கல சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் ராம்சார் தலங்கள் உள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 100 காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் ரூ.6121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 1885 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.8313 கோடியில் 4 வழித்தடமாக அகலப்படுத்தப்படுகின்றன.
* 5 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் 3,673 பேருந்துகள் ரூ.361 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
* புதிய சிற்றுந்து திட்டத்தின் மூலம் 6303 வழித்தடங்களில் சிற்றுந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
* மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நெடுஞ்சாலைகள் துறை, சிறுதுறைமுகங்கள் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* 1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
* சென்னையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
* புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நில எடுப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.






