search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Budget 2019"

    வறட்சி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக குடும்பத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.1,200 கோடி அனுமதித்துள்ளது. #TNAssembly #Rs2000SpecialAssistance
    சென்னை:

    சட்டசபையில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    வறட்சி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக குடும்பத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.1,200 கோடி அனுமதித்துள்ளது.

    இதற்காக 2018-19-ம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளில் 700 கோடி ரூபாய் மற்றும் 500 கோடி ரூபாய் முறையே ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் சேர்க்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #Rs2000SpecialAssistance
    ஐராவதம் மகாதேவன் நூல்கள் அரசுடமையாக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNAssembly #Edappadipalaniswami
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சர். பி.டி. தியாகராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ஜராவதம் மகாதேவனின் நூல்கள் அரசுடைமையாக்குவது தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-

    வெள்ளுடை வேந்தர் சர். பி.டி. தியாகராஜருக்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஏற்கனவே அரசு சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ஐராவதம் மகாதேவன் அவர்களது நூல்களை அரசுடைமையாக்க ஏற்கனவே என்னால் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #Edappadipalaniswami
    பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMKWalkout #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த பின்னர், திமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:-



    ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1.000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.

    இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கிய நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. #DMKWalkout #TNAssembly
    தமிழக சட்டசபையில் இன்று அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. #TNAssembly #DMK #ADMK
    சென்னை:

    சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார்.

    தொடர்ந்து பேசிய ராமசாமி அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் ஆவார். நாங்களே பேசி நிதியை பெற்றுக்கொடுப்போம். மத்திய அரசிடம் நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதால் தான் நிதியை வாங்க முடியவில்லை என்றார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ‘யாரிடமும் சிக்கவில்லை. தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம்.

    அமைச்சர் தங்கமணி:- காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்தது. அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீட்டிலும் தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இது நமது மாநிலத்துக்கு தலைகுனிவு.

    அமைச்சர் ஜெயக்குமார்:- மேற்கு வங்காளத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்தால் எதிர்க்கட்சி தலைவர் கண்டிக்கிறார். ஆனால் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்த போது ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

    மு.க.ஸ்டாலின்:- தவறான தகவலை அமைச்சர் பதிவு செய்கிறார். வருமான வரி சோதனை நடந்தபோது முதல் நபராக கண்டனம் தெரிவித்தது நான் தான்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இடைத்தேர்தல் குறித்தும் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. #TNAssembly #DMK #ADMK
    சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே பெரிய, ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மூன்று பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜ பாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கவும், இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும், மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களுக்கும், அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    “மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளைக் கொண்டு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய உறை விந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்” என்று துணை முதலமைச்சர் தனது 2019-2020ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்த உறைவிந்து உற்பத்தி நிலையம் இந்த வளாகத்திலேயே அமையப் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிகப்பெரிய அளவில் இப்பூங்கா அமைக்கப்படுவதால், இதனை நிர்வகிப்பதற்கு, தொடர்புடைய துறை இயக்குநர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் அம்மாவின் பெயரால் அமைந்துள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள் ஆகியோரை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக கொண்டு, ஒரு சங்கம் அமைக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தினசரி நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #TNAssembly
    பாராளுமன்றத்தில் நேற்று தம்பிதுரை பேசியதில் தவறு இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்துள்ளார். #TNAssembly #Jayakumar #Ponmudi
    சென்னை:

    சட்டசபையில் இன்று பொன்முடி (தி.மு.க.) பேசுகையில், ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு நன்மையா? கெடுதலா? என்று உங்களால் சொல்ல முடியுமா? பாராளுமன்றத்தில் நேற்று உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசும் போது, ஜி.எஸ்.டி.யால் தான் எல்லாமே முடங்கி விட்டது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு-குறு தொழில் நிறைய மூடப்பட்டு விட்டதாக பேசி இருக்கிறார் என்றார்.

    பொன்முடி மேலும் பேசும்போது, மத்திய பட்ஜெட்டை பாராட்டி முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக தம்பிதுரை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறாரே இது அவரது தனிப்பட்ட கருத்தா? கட்சி கருத்தா? என்று கேட்டார்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- மாநில அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பேசியிருக்றார். இதில் என்ன தவறு உள்ளது.



    பொன்முடி:- நேற்று செம்மலை இங்கு பேசும்போது, முதல்-அமைச்சர் சிக்சராக அடிக்கிறார். முதல் சிக்சர், 2-வது சிக்சர் என்று பேசினார். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை சிக்சர் அடித்தாலும் மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி கண்டிப்பாக கிளீன்போல்டு ஆகி விடும்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- உறுதியாக சொல்கிறேன். அது “நோ-பால்” ஆகி விடும்.

    (சட்டசபையில் பலத்த சிரிப்பு எழுந்தது)

    அமைச்சர் தங்கமணி:- கிரவுண்டுக்குள் வந்து பந்து போட்டால்தான் போல்டு ஆகும். கிரவுண்டுக்குள்ளேயே வேலை இல்லாதபோது பந்துக்கு என்ன வேலை.

    இவ்வாறு அடுத்தடுத்து சிரிப்பலையுடன் விவாதம் நடந்தது. #TNAssembly #Jayakumar #Ponmudi
    சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #Budget2019 #Balakrishnan
    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். மக்களை ஏமாற்றுவதற்காக வெத்து வேட்டு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு ஆதார விலை கிடைக்கவில்லை. இதை பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.



    தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதற்கு பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    கஜா புயலுக்காக மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிவாரண நிதியையும் தமிழக அரசால் பெற முடியவில்லை. இது போன்ற நிலையில் பா.ஜ.னதாவுடன் அ.தி.மு.க. எவ்வாறு கூட்டணி வைக்கலாம். இவர்கள் அமைக்கும் கூட்டணி தமிழக மக்களால் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கூட்டணி குறித்து தி.மு.க.வுடன் பேசி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNBudget #Budget2019 #Balakrishnan
    சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்து பணிமனை வரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. #MetroTrain
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற் கட்டத்தில் 45.01 கிலோ மீட்டர் நீளமுள்ள இரண்டு வழித் தடங்கள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவுள்ளன. திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரையிலான ஒன்பது கிலோ மீட்டர் நீளமுள்ள முதற்கட்டத்தின் நீட்டிப்புப் பணிகள் நிறைவுற்று 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    2018-2019-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக 1,950 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த படி, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்து பணிமனை வரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை 20,196 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

    இதற்கு மாநில அரசும் 40,941 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மற்ற வழித்தடங்களுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் சென்னைப் பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரெயிலின் சேவைப்பகுதி 172.91 கிலோ மீட்டராக அதிகரித்து, பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரெயிலின் பங்கு கணிசமாக அதிகரிக்கும். 2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்வதற்கு வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

    இத்திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 248.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2019-2020-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித்துறைக்காக 28,756.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மூன்று பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகளை 2018- 2019ஆம் கல்வி ஆண்டில் அரசு நிறுவியுள்ளதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 2019- 2020ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல் தலைமுறை பட்டதாரி மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 480.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேசத் தரத்திற்கு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் சட்டங்களை அரசு இயற்றி சிவசுப்பிரமணிய நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதித்துள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத் திறன்களும் சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொழிற் கல்லூரிகளில் உள்ள வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகிறது.

    எனவே மாநிலத்தில் முதன்மையான பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித்தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS #AnnaUniversity
    வரும் ஆண்டிலும் முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ், 2019-2020-ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இந்த அரசு உத்தேசித்துள்ளது.

    ஒரு வீட்டிற்கு அலகுத்தொகை 1.20 லட்சம் ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்து, அத்தொகையை மத்திய அரசும், மாநில அரசும் முறையே 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என ஏற்றுள்ளன.

    கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில அரசு, கூடுதல் நிதியாக 50 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்குகிறது. இதனால் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை 1.70 லட்சம் ரூபாயாகவும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை 98 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,276.14 கோடி ரூபாய் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்றே, வரும் ஆண்டிலும் முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.

    இத்திட்டத்திற்காக 2019-2020ம் அண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், 18,273.96 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, 14-ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.

    காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.



    இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

    இதையடுத்து சபாநாயகர் தனபால் அறையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்ட பிற அலுவல்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை 11ம் தேதி முதல் 14-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்த விவாதம் முடிந்ததும், 14-ந் தேதி விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக பதில் அளித்துப் பேச இருக்கிறார். அத்துடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி முடிந்ததும், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.



    காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

    இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றும் அவர் அறிவித்தார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ×