என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹுவா மொய்த்ரா"

    • "வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
    • அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது.

    கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.

    மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடினர்.

    மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

    மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் இந்தச் சோதனையைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

    அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் டெல்லியில் அமித் ஷாவின் அலுவலகம் முன்பாகத் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    "வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

    தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி-க்களை டெல்லி போலீசார் அவர்களை குண்டுக்கட்டதாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

    "மத்திய உள்துறை அமைச்சகம் அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி எங்களது கட்சியின் அரசியல் ரகசியங்களையும், தேர்தல் வியூகங்களையும் திருட முயற்சிக்கிறது.

    மம்தா பானர்ஜி ஒரு பெண் சிங்கம், அவர் தனது கட்சியையும் மக்களையும் பாதுகாப்பார்" என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.

    இதற்கிடையே அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது என்று மம்தா பானர்ஜி சாடினார். 

    • 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
    • எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?

    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.

    மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.

    வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாயர்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், LIC எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க நபருக்கு, மோடி தனது சேமிப்பைப் பயன்படுத்தி அதானியை மீட்கிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை துரோகம் இல்லையா? இது கொள்ளை இல்லையா?

    அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி பணத்திற்கும், மே 2025 இல் ROO 33,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா?

    இதற்கு முன்பே, 2023 இல், அதானியின் பங்குகளில் 32% க்கும் அதிகமான சரிவு இருந்தபோதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?

    மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார். 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எல்ஐசியின் பதில் அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, LIC India, எதை நீங்கள் பொய் என்று கூறுகிறீர்கள்?, நீங்கள் வரிசெலுத்துவோரின் ரூ.30,000 கோடியை அதானிக்கு உதவ பயன்படுத்தியதையா அல்லது அதானிக்கு நிதி வழங்க விரைந்து அனுமதி வழங்குமாறு நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்ததை பொய் என்று கூறுகிறீர்களா? என்று வினவியுள்ளார்.   

    • மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்!
    • ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்!

    கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த சமீபத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    ஜூன் 25 அன்று 24 வயது சட்ட மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்யாண் பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

    "ஒரு சில ஆண்கள் இந்த வகையான குற்றங்களைச் செய்கிறார்கள்.. ஆனால் ஒரு நண்பன் தன் தோழியையே பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பணியில் இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

    கல்யாண் பானர்ஜியின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் என்றும், கட்சிக்கு எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறி, திருணாமுல் காங்கிரஸ் கட்சி உடனடியாக தனது சமூக ஊடகப் பதிவில் விளக்கம் அளித்தது.

    இந்த சூழலில் கல்யாண் பானர்ஜியின் கருத்துக்களை மஹுவா மொய்த்ரா கடுமையாகக் கண்டித்தார். தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆணாதிக்கம் கட்சிகளைக் கடந்து பரவி வருகிறது.

    யாராக இருந்தாலும் இந்த அருவருப்பான கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான் எங்களை வேறுபடுத்துகிறது" என்று பதிவிட்டார்.

    மஹுவா மொய்த்ராவின் இந்தக் கண்டனத்திற்குப் பிறகு, கல்யாண் பானர்ஜி அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கினார்.

    "மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்! அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார் - ஆனால் அவர் யார்? அவர் 40 வருட திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது மனிதரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், "ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்! அவர் மிகவும் பெண்களுக்கு எதிரானவர்.

    அவர் தனது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே தெரிந்தவர்" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த வார்த்தை போர் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 50 வயதான மஹுவா மொய்த்ரா பினாகி மிஸ்ராவை மே 3 அன்று திருமணம் செய்து கொண்டார்.
    • பினாகி மிஸ்ரா புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.

    இவர் கடந்த 3-ந் தேதி, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான பினாகி மிஸ்ராவை(வயது 65) ஜெர்மனியில் ரகசிய திருமணம் செய்தார். முதலில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரார்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா ஜெர்மனியில் வைத்து ரகசியமாக 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    பினாகியை கரம் பிடித்த மகுவா மொய்த்ரா இதுகுறித்து புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் சேர்ந்து கேக் வெட்டுவது போல காட்சி இருந்தது. அதனுடன், மஹுவாவின் பதிவில், அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் புதுமண தம்பதிகளான மஹுவா மொய்த்ரா-பினாகி மிஸ்ரா ஆகியோர் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1967-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ஆன் ஈவினிங் இன் பாரிஸ் படத்தில் இடம் பெற்ற காதல் பாடலான ராத் கே ஹம்சபர் பாடலுக்கு இருவரும் நடனமாடினர். வீடியோவை பார்த்த பலரும், புதுமண தம்பதியை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.

    • பிஜேடி தலைவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர்.
    • உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக உள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. இவருக்கு 50 வயதாகிறது. 50 வயதான மஹுவா மொய்த்ரா 65 வயதான பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாக தெரிகிறது.

    ஆனால், இருவரும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. மஹுவா மொய்த்ரா ஏற்கனவே டென்மார்க்கை சேர்ந்த லார்ஸ் பிரோர்சன்னை திருமணம் செய்திருந்தார். கட்சித் தலைவர்களுடன் இவர்களுடைய திருமணத்தை உறுதி செய்யவில்லை.

    பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரான பினாகி மிஸ்ரா, உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக உள்ளார். புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

    • ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
    • செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசும்போது, தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று பிப்ரவரி மாதம்தோறும் மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது.

    ஆனால் மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய். 8 மாதங்களுக்கு பிறகு உண்மை இப்போது வெளிவருகிறது. இப்போது மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இப்போது இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அதை மேம்படுத்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பப்பு என்ற சொல்லை உருவாக்கியது இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இழிவுபடுத்தவும் திறமையின்மையை குறிக்கவும் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார்? என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    நேற்று கேள்வி நேரத்தின் போது, ​​வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை மந்திரி, கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அரசு அமைந்த பிறகு 2014 முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இதுதான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. அதிக சொத்து வைத்துள்ளவர்கள், தொழிலதிபர்களின் தலைக்கு மேலே அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

    ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை விசாரிக்கும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது அதன் இலக்கை அடைவதில் தோல்வி அடைந்துவிட்டது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்னுமே கூட கனவாகவே உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் இந்த அனல்பறக்கும் உரையானது வைரலாகி வருகிறது.

    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் நேற்று பேசினார்.
    • அப்போது பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பேசி சர்ச்சையை கிளப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினார்.

    மக்களவையில் கவுதம் அதானியின் நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை அவர் சாடினார்.

    அனைத்து விஷயங்களிலும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள். நமது நாட்டின் நற்பெயர் மற்றும் நமது சந்தைகளின் அமைப்பு ஸ்திரத்தன்மை ஆபத்தில் உள்ளன. இவை அனைத்தையும் முழுமையாக அனைத்து அம்சங்களிலும் விசாரிக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது அவர் பேசுகையில், சில பாஜகவினர் சில கருத்துக்களை கூறியுள்ளனர். மஹுவா மொய்த்ரா தனது உரைக்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினரை வாயை மூடுமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். மேலும், அவர் சில கடுமையான வார்த்தைகளை உபயோகித்ததால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறித்து மஹுவா மொய்த்ரா சில நாடாளுமன்றத்திற்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய தனது பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

    • மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார்.
    • அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார்.

    இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

    மக்களவைக்கு கேள்விகளை நேரடியாக பதிவிடுவதற்காக, பாராளுமன்ற இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுவா மொய்த்ரா வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகார் மீது மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.

    மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யின் கருத்துக்கு பஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது வீட்டுக்கு சிபிஐயின் வரவு நல்வரவு ஆகுக. அதானியை முதலில் விசாரிக்கட்டும், என்னிடம் உள்ள ஷுக்களை எண்ணிக் கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
    • சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

    இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கைக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வெறியேற்றியது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு நடந்த துரோகம். மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கட்சி அவருடன் நிற்கிறது. பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் எங்களை தோற்கடிக்க முடியாது. இது ஒரு சோகமான நாள்.

    மொய்த்ரா தனது நிலைப்பாட்டை விளக்கக்கூட பாஜக அனுமதிக்கவில்லை.

    மொய்த்ரா ஒரு பெரிய ஆணையுடன் பாராளுமன்றத்திற்கு திரும்புவார். தங்களுக்கு பெரிதளவில் பெரும்பான்மை இருப்பதால் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாஜக நினைக்கிறது. அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மஹூவா மொய்த்ரா எம்.பி பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.
    • பாஜகவுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அப்போது, மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் என்பது இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்புச்சகோதரி மஹூவா மொய்த்ரா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான சனநாயக படுகொலையாகும்.

    பாராளுமன்றத்தில் சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்புகின்ற அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, பழிவாங்கும் நோக்குடன் முறையற்ற வகையில் அவரை பதவி நீக்கம் செய்து இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளது. தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்ற பாஜகவின் இத்தகைய கொடும் மனப்பான்மை கோழைத்தனமானதாகும்.

    பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம், என்று நாட்டு மக்கள் மீதான பாஜக அரசின் அடுத்தடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் மக்களின் மனச்சான்றாக நின்று, துணிச்சலாக ஓங்கி ஒலித்த ஒற்றைக்குரலையும் அதிகார கொடுங்கரம் கொண்டு நசுக்கியுள்ளனர் நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள்.

    சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்பிய ஏதாவது ஒரு கேள்விக்கு பிரதமர் மோடியிடமோ அல்லது அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடமோ, பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ பதில் இருந்துள்ளதா? பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பினார் என்ற காரணத்திற்காகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் இந்த நாடும், அரசும் ஏழை, எளிய மக்களுக்கானதா? அல்லது அம்பானி, அதானிக்கானதா? மஹுவா மொய்த்ரா யார் சொல்லி கேள்வி கேட்டார் என்று நீதி விசாரணை செய்தவர்கள், அவர் கேட்ட கேள்விகள் சரியா? தவறா? என்பதற்கு எந்த விசாரணையும் இதுவரை செய்யாதது ஏன்?

    கௌரி லங்கேஷ், கல்புர்கி என்று தங்களது பாசிசப் போக்கிற்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களின் குரல்களை எல்லாம் படுகொலைகள் மூலம் நிரந்தரமாக நிறுத்தியவர்கள் தற்போது நாடாளுமன்றத்தின் குரல்வளையையும் நெரிக்க தொடங்கியுள்ளது வெட்கக்கேடானது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, அடிபணியாத எதிர்க்கட்சி உறுப்பினர்களை வரிமானவரித் துறை, அமலாக்கத் துறைகளை ஏவி மிரட்டி அடிபணியச்செய்வது என்ற பாஜகவின் அதிகார கொடும்போக்கின் அடுத்த படிநிலையே தற்போது சகோதரி மஹுவா மொய்த்ராவின் சிறிதும் அறமற்ற பதவி நீக்கமாகும்.

    அதிகாரம் நிலையானது என்ற மமதையுடன் பத்தாண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய கொடுங்கோன்மை நடவடிக்கைகளுக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


    • மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    இதுகுறித்து பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது.

    வீட்டை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மொய்த்ரா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார்.

    • வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக ஆஜராக மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது.
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

    இதற்கிடையே, வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் 19-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மஹுவா மொய்த்ராவுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    ×