என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்கால கூட்டத்தொடர்"

    • தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களின் விரிவாக்கம் செயல்படுத்துவது எப்போது?
    • தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்து வருகின்றனவா?

    இன்று நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எந்தெந்த விவகாரங்கள் குறித்து உரையாற்றினார் என்பது குறித்து திமுக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-

    1. நெல் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த ஒன்றிய அரசின் குழுவின் அறிக்கை மீதான் நடவடிக்கை என்ன?

    2014ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையிலான ஈரப்பதத்தின் சதவீதம் குறித்த கொள்கை முடிவின் விவரங்கள் மற்றும் கொள்முதல் செய்யும் போது நெல்லில் உள்ள ஈரப்பதத்தின் விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரங்கள்:

    இந்த பருவத்தின் தீவிர மழை மற்றும் புயல்களை கருத்தில்கொண்டு நெல் கொள்முதல் ஈரப்பத விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா?

    திருத்தப்பட்ட ஈரப்பத வரம்பு(கள்), செல்லுபடியாகும் காலம் மற்றும் தளர்வு பொருந்தும் மாநிலங்கள்/மாவட்டங்கள் யாவை?

    தானியங்களின் தரத்தைப் பாதுகாக்கவும் சேமிப்பு/போக்குவரத்து உதவிகள் வழங்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

    மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு அனுப்பிய மூன்று குழுக்கள் தமிழ்நாட்டில் உள்ள DPCகள் மற்றும் பண்ணைகளில் சேகரித்த நெல் மாதிரிகளின் ஆய்வறிக்கை மற்றும் அரசு அதன்மீது எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

    2. தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்து வருகின்றனவா?

    கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி (AIR) சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பினார்.

    கிராமப்புறங்கள், மலைப்பகுதி, கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் முழுமையாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் கிடைக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

    தமிழ்நாட்டில் பிரசார் பாரதியின் கீழ் புதிய டிரான்ஸ்மிட்டர்கள், கோபுரங்கள், டிஜிட்டல் ஸ்டுடியோக்கள் மற்றும் எஃப்.எம். அலைவரிசைகளை நிறுவியதன் தற்போதைய நிலை என்ன?

    தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் உட்பட மற்ற பிராந்திய மொழி ஒளிபரப்பை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிடாதது ஏன்?

    கல்வி, விவசாயம், கலாச்சாரம் மற்றும் அவசரகாலத் தொடர்புத் தேவைகளுக்காக பொது ஒலிபரப்பை அனைவரும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? என்று அவர் கேட்டுள்ளார்.

    3. தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களின் விரிவாக்கம் செயல்படுத்துவது எப்போது?

    நாடு முழுவதும் பசுமை ஹைட்ரஜன், கடல்சார் காற்றாலை மற்றும் சேமிப்பு வசதியுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் செல்வம் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரங்கள்:

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் மையங்கள், கடல்சார் காற்றாலைப் பண்ணைகள் அல்லது எரிசக்தி சேமிப்பு வசதிகளை நிறுவுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதா?

    திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுபோன்ற பசுமை ஹைட்ரஜன் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புத் திட்டங்களுக்காக சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

    இதுபோன்ற திட்டங்களை நிறைவு செய்வதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் ஏதேனும் காலக்கெடு அல்லது செயல்திட்ட இலக்குகளை நிர்ணயித்துள்ளதா?

    4. அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துக!

    ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டம் மற்றும் மிஷன் போஷன் 2.0 திட்டத்தின்கீழ் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசின் திட்டம் என்ன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.

    கடைசியாக மதிப்பூதியம் உயர்த்தப்பட்ட தொகையின் விவரங்கள், 2021 ஆம் ஆண்டு முதல் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அளவிலான விருதுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டுள்ளார்.

    மேலும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் வேலைகளான தரவு உள்ளீட்டுப் பணிச்சுமை குறித்து அரசு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கென பிரத்யேகமான குறை தீர்க்கும் அமைப்பு உருவாகக் வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

    5. கள்ளக்குறிச்சியில் தண்டவாளங்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

    கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் மின்மயமாக்கல், சிக்னல் அமைப்புகளின் மேம்பாடுகள் மற்றும் தண்டவாளங்களை புதுப்பித்தல் செய்யப்பட்ட இரயில் தண்டவாளங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேட்டுள்ளார்.

    தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்தபோது அதற்குப் பின்னரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விபத்துக்களைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? நீளமான பற்றவைக்கப்பட்ட தண்டவாளங்கள், அதிவேகத் தண்டவாளக் கண்காணிப்பு மற்றும் தானியங்கித் தண்டவாள ஆய்வு அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?

    மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் வேகத்தையும் சரக்கு ஏற்றிச் செல்லும் திறனையும் மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த விவரங்கள்? மற்றும் மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களைப் பராமரித்தல் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வதற்கான திட்டங்கள் குறித்த விவரங்களையும் மலையரசன் எம்.பி. கேட்டுள்ளார்.

    6. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு என்ன?

    தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களின் விவரங்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

    நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் விடுவிக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள், திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட இரயில்வே திட்டங்களுக்கான முன்மொழிவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

    7. பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக தொலைத்தொடர்பு சேவைகள் பெறுவதற்கான வழிகள் என்ன?

    தொலைத்தொடர்பு வலையமைப்பில் பேரிடர் அபாயத்தைத் தாங்கும் திறனுக்காகச் செயல்படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அமைப்புகளின் விவரங்கள் குறித்து திமுக எம்.பி. அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த மூன்று ஆண்டுகளில், பிராந்திய வாரியாக நடத்தப்பட்ட பேரிடர் தாங்கும் திறன் ஒத்திகைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மற்றும் இத்துறையில் மேம்பட்ட பேரிடர் மேலாண்மைக்காக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.

    8. இரயில்வேயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன?

    பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேசிய ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் அதிவேகப் பாதைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழித்தடங்களுக்கான கோரிக்கைகள்மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தருமபுரி அ. மணி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

    தர்மபுரி மாவட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் வழித்தடங்களின் விவரங்கள், அவற்றின் பாதை அமைப்பு, உத்தேச செலவு மற்றும் தற்போதைய நிலை ஆகியவையின் விவரங்கள் என்ன? இந்த மாவட்டங்களில் அதிவேக/சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடங்களைக் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா? மேற்கண்ட மாவட்டங்களில் ரயில்வே பாதுகாப்பு, நவீன சிக்னல் அமைப்புகள் மற்றும் தண்டவாள மேம்பாட்டை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் யாவை? மற்றும் இவை முடிவுக்கு வரும் காலக்கெடு என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.

    9. கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா NH-36 சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்

    தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை-36 (அல்லது அதன் தொடர்புடைய பகுதி) உட்பட பல நான்கு வழி நெடுஞ்சாலைப் பகுதிகள் கட்டமைப்பு சேதம், விரிசல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் உடனடி ஆய்வு மற்றும் சேத மதிப்பீட்டிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தொடர்ச்சியான சேதங்களைத் தடுக்க, இந்தச் சாலைகளைச் சீரமைத்து, காலநிலைக்கு தகுந்தவாறு மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

    பாதுகாப்பான இணைப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும், டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் பாதிக்கப்படும் நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி அல்லது முன்னுரிமை அடிப்படையில் பழுதுபார்க்க அமைச்சகம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

    10. தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் தேசிய கல்விக் கொள்கை – ஒன்றிய அரசு திருத்தம் செய்வது எப்போது?

    தேசிய கல்விக் கொள்கையின் (NEP) சில விதிகள் தமிழ்நாட்டின் பாடத்திட்ட வடிவமைப்பு, மொழி கொள்கை மற்றும் உள்ளூர் கல்வி முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக இருப்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

    மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த விசயங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை என்ன? ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை மதிக்கும் அதே வேளையில், தேசிய கல்விக் கொள்கையானது கூட்டாட்சி அமைப்புடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் டாக்டர் கனிமொழி சோமு எம்.பி. கேட்டுள்ளார்.

    11. பள்ளிகளில் மாற்றுப் பாலின மாணவர்களுக்கான கவுன்சலிங் வழங்க நடவடிக்கை என்ன?

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள், சிறுமிகள், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பாலின அடையாளத்திற்கு உட்படாத மாணவர்களின் பாலினம் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.

    நாடு முழுவதும் பள்ளி அளவில் மாற்றுப் பாலின மாணவர்களுக்காக அரசாங்கம் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை வழிமுறைகள் வழங்க உதவி மையங்களை உருவாக்குகிறதா? என்றும் பள்ளிகளில் மாற்றுப் பாலின மாணவர்களது குடும்பத்தினருக்கான மனநல ஆலோசனைகளை வழங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.

    • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

    • ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இதனால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் ராகுல் காந்தி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
    • இதில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
    • மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

    இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.

    இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

    இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
    • இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர். பொதுமக்கள் தரப்பிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்பாக வளரும்.

    இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூண் மற்றொன்றின் வரம்புக்குள் ஊடுருவினால் அது ஆட்சி முறையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊடுருவல் அவ்வப்போது நடப்பதைப் பார்க்க முடிகிறது.

    மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தேசிய நீதி துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை உச்சநீதிமன்றத்தின் போக்கு கேள்விக்கு உள்ளாக்குகிறது.

    ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டபூர்வமாகப்பட்ட அரசமைப்பு பரிந்துரையை நீதித்துறை ரத்து செய்த இந்த சம்பவத்துக்கு நிகராக வேறு எந்த சம்பவமும் இல்லை.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த மசோதா உறக்கத்தில் உள்ளது. இது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

    • ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
    • செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசும்போது, தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று பிப்ரவரி மாதம்தோறும் மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது.

    ஆனால் மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய். 8 மாதங்களுக்கு பிறகு உண்மை இப்போது வெளிவருகிறது. இப்போது மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இப்போது இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அதை மேம்படுத்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பப்பு என்ற சொல்லை உருவாக்கியது இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இழிவுபடுத்தவும் திறமையின்மையை குறிக்கவும் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார்? என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    நேற்று கேள்வி நேரத்தின் போது, ​​வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை மந்திரி, கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அரசு அமைந்த பிறகு 2014 முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இதுதான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. அதிக சொத்து வைத்துள்ளவர்கள், தொழிலதிபர்களின் தலைக்கு மேலே அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

    ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை விசாரிக்கும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது அதன் இலக்கை அடைவதில் தோல்வி அடைந்துவிட்டது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்னுமே கூட கனவாகவே உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் இந்த அனல்பறக்கும் உரையானது வைரலாகி வருகிறது.

    • பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மசோதாவை அறிமுகம் செய்தார்.
    • இன்று நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.

    இதையடுத்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சாசன திருத்த மசோதாவை, நேற்று முன்தினம் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ராஜஸ்தானின் அல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது, அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

    அவர் பேசும்போது, "காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? இருப்பினும், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம்" என்றார்.

    கார்கே, பாஜகவை தாக்கி பேசும்போது நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கார்கே கூறிய கருத்திற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    நாகரிமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், பாராளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார். இந்த விவகாரம் காரணமாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த கருத்து பாராளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டதாக கூறினார். நாட்டின் 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசியிருக்கலாம். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்றும் அவைத்தலைவர் கூறினார்.

    இதற்கிடையே தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 

    எல்லையில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியான தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் கடந்த 9ந்தேதி ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன.

    அதேநேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இரு அவைத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    சீன எல்லை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இன்றும் ஒத்திவைப்பு நோட்டீசை கொடுத்தது. காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இதை அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு நிபந்தனை விதிக்கப்பட்ட பிரச்சினையும் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபா நாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது
    • பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதே போல் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி விவாதிக்க கோரி வருகின்றனர்.

    எதிர்க்கட்சியினர் அமளியால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றும் அமளி ஏற்பட்டது. காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    அவர்களை அமைதி காக்கும் படியும், இருக்கையில் அமருமாறும் சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பியவாரே இருந்தனர். தொடர்ந்து கூச்சல், அமளி நிலவியது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதேசமயம் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.

    ×