என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடுக்கடுக்கான கேள்விகள்... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பட்டையை கிளப்பிய திமுக எம்பிக்கள்
- தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களின் விரிவாக்கம் செயல்படுத்துவது எப்போது?
- தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்து வருகின்றனவா?
இன்று நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எந்தெந்த விவகாரங்கள் குறித்து உரையாற்றினார் என்பது குறித்து திமுக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-
1. நெல் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த ஒன்றிய அரசின் குழுவின் அறிக்கை மீதான் நடவடிக்கை என்ன?
2014ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையிலான ஈரப்பதத்தின் சதவீதம் குறித்த கொள்கை முடிவின் விவரங்கள் மற்றும் கொள்முதல் செய்யும் போது நெல்லில் உள்ள ஈரப்பதத்தின் விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரங்கள்:
இந்த பருவத்தின் தீவிர மழை மற்றும் புயல்களை கருத்தில்கொண்டு நெல் கொள்முதல் ஈரப்பத விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா?
திருத்தப்பட்ட ஈரப்பத வரம்பு(கள்), செல்லுபடியாகும் காலம் மற்றும் தளர்வு பொருந்தும் மாநிலங்கள்/மாவட்டங்கள் யாவை?
தானியங்களின் தரத்தைப் பாதுகாக்கவும் சேமிப்பு/போக்குவரத்து உதவிகள் வழங்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு அனுப்பிய மூன்று குழுக்கள் தமிழ்நாட்டில் உள்ள DPCகள் மற்றும் பண்ணைகளில் சேகரித்த நெல் மாதிரிகளின் ஆய்வறிக்கை மற்றும் அரசு அதன்மீது எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
2. தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்து வருகின்றனவா?
கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி (AIR) சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பினார்.
கிராமப்புறங்கள், மலைப்பகுதி, கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் முழுமையாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் கிடைக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
தமிழ்நாட்டில் பிரசார் பாரதியின் கீழ் புதிய டிரான்ஸ்மிட்டர்கள், கோபுரங்கள், டிஜிட்டல் ஸ்டுடியோக்கள் மற்றும் எஃப்.எம். அலைவரிசைகளை நிறுவியதன் தற்போதைய நிலை என்ன?
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் உட்பட மற்ற பிராந்திய மொழி ஒளிபரப்பை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிடாதது ஏன்?
கல்வி, விவசாயம், கலாச்சாரம் மற்றும் அவசரகாலத் தொடர்புத் தேவைகளுக்காக பொது ஒலிபரப்பை அனைவரும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? என்று அவர் கேட்டுள்ளார்.
3. தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களின் விரிவாக்கம் செயல்படுத்துவது எப்போது?
நாடு முழுவதும் பசுமை ஹைட்ரஜன், கடல்சார் காற்றாலை மற்றும் சேமிப்பு வசதியுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் செல்வம் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரங்கள்:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் மையங்கள், கடல்சார் காற்றாலைப் பண்ணைகள் அல்லது எரிசக்தி சேமிப்பு வசதிகளை நிறுவுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதா?
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுபோன்ற பசுமை ஹைட்ரஜன் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புத் திட்டங்களுக்காக சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
இதுபோன்ற திட்டங்களை நிறைவு செய்வதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் ஏதேனும் காலக்கெடு அல்லது செயல்திட்ட இலக்குகளை நிர்ணயித்துள்ளதா?
4. அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துக!
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டம் மற்றும் மிஷன் போஷன் 2.0 திட்டத்தின்கீழ் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசின் திட்டம் என்ன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.
கடைசியாக மதிப்பூதியம் உயர்த்தப்பட்ட தொகையின் விவரங்கள், 2021 ஆம் ஆண்டு முதல் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அளவிலான விருதுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டுள்ளார்.
மேலும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் வேலைகளான தரவு உள்ளீட்டுப் பணிச்சுமை குறித்து அரசு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கென பிரத்யேகமான குறை தீர்க்கும் அமைப்பு உருவாகக் வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
5. கள்ளக்குறிச்சியில் தண்டவாளங்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் மின்மயமாக்கல், சிக்னல் அமைப்புகளின் மேம்பாடுகள் மற்றும் தண்டவாளங்களை புதுப்பித்தல் செய்யப்பட்ட இரயில் தண்டவாளங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேட்டுள்ளார்.
தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்தபோது அதற்குப் பின்னரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விபத்துக்களைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? நீளமான பற்றவைக்கப்பட்ட தண்டவாளங்கள், அதிவேகத் தண்டவாளக் கண்காணிப்பு மற்றும் தானியங்கித் தண்டவாள ஆய்வு அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் வேகத்தையும் சரக்கு ஏற்றிச் செல்லும் திறனையும் மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த விவரங்கள்? மற்றும் மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களைப் பராமரித்தல் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வதற்கான திட்டங்கள் குறித்த விவரங்களையும் மலையரசன் எம்.பி. கேட்டுள்ளார்.
6. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு என்ன?
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களின் விவரங்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் விடுவிக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள், திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட இரயில்வே திட்டங்களுக்கான முன்மொழிவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
7. பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக தொலைத்தொடர்பு சேவைகள் பெறுவதற்கான வழிகள் என்ன?
தொலைத்தொடர்பு வலையமைப்பில் பேரிடர் அபாயத்தைத் தாங்கும் திறனுக்காகச் செயல்படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அமைப்புகளின் விவரங்கள் குறித்து திமுக எம்.பி. அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், பிராந்திய வாரியாக நடத்தப்பட்ட பேரிடர் தாங்கும் திறன் ஒத்திகைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மற்றும் இத்துறையில் மேம்பட்ட பேரிடர் மேலாண்மைக்காக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.
8. இரயில்வேயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன?
பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேசிய ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் அதிவேகப் பாதைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழித்தடங்களுக்கான கோரிக்கைகள்மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தருமபுரி அ. மணி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் வழித்தடங்களின் விவரங்கள், அவற்றின் பாதை அமைப்பு, உத்தேச செலவு மற்றும் தற்போதைய நிலை ஆகியவையின் விவரங்கள் என்ன? இந்த மாவட்டங்களில் அதிவேக/சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடங்களைக் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா? மேற்கண்ட மாவட்டங்களில் ரயில்வே பாதுகாப்பு, நவீன சிக்னல் அமைப்புகள் மற்றும் தண்டவாள மேம்பாட்டை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் யாவை? மற்றும் இவை முடிவுக்கு வரும் காலக்கெடு என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.
9. கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா NH-36 சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்
தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை-36 (அல்லது அதன் தொடர்புடைய பகுதி) உட்பட பல நான்கு வழி நெடுஞ்சாலைப் பகுதிகள் கட்டமைப்பு சேதம், விரிசல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் உடனடி ஆய்வு மற்றும் சேத மதிப்பீட்டிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தொடர்ச்சியான சேதங்களைத் தடுக்க, இந்தச் சாலைகளைச் சீரமைத்து, காலநிலைக்கு தகுந்தவாறு மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
பாதுகாப்பான இணைப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும், டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் பாதிக்கப்படும் நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி அல்லது முன்னுரிமை அடிப்படையில் பழுதுபார்க்க அமைச்சகம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
10. தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் தேசிய கல்விக் கொள்கை – ஒன்றிய அரசு திருத்தம் செய்வது எப்போது?
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) சில விதிகள் தமிழ்நாட்டின் பாடத்திட்ட வடிவமைப்பு, மொழி கொள்கை மற்றும் உள்ளூர் கல்வி முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக இருப்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த விசயங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை என்ன? ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை மதிக்கும் அதே வேளையில், தேசிய கல்விக் கொள்கையானது கூட்டாட்சி அமைப்புடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் டாக்டர் கனிமொழி சோமு எம்.பி. கேட்டுள்ளார்.
11. பள்ளிகளில் மாற்றுப் பாலின மாணவர்களுக்கான கவுன்சலிங் வழங்க நடவடிக்கை என்ன?
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள், சிறுமிகள், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பாலின அடையாளத்திற்கு உட்படாத மாணவர்களின் பாலினம் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் பள்ளி அளவில் மாற்றுப் பாலின மாணவர்களுக்காக அரசாங்கம் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை வழிமுறைகள் வழங்க உதவி மையங்களை உருவாக்குகிறதா? என்றும் பள்ளிகளில் மாற்றுப் பாலின மாணவர்களது குடும்பத்தினருக்கான மனநல ஆலோசனைகளை வழங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.






