என் மலர்
இந்தியா

மோடியின் நம்பிக்கை துரோகம்.. அதானிக்காக கொள்ளையடிக்கப்படும் சாமானியர்களின் சேமிப்பு - கார்கே
- 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
- எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாயர்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், LIC எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க நபருக்கு, மோடி தனது சேமிப்பைப் பயன்படுத்தி அதானியை மீட்கிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை துரோகம் இல்லையா? இது கொள்ளை இல்லையா?
அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி பணத்திற்கும், மே 2025 இல் ROO 33,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா?
இதற்கு முன்பே, 2023 இல், அதானியின் பங்குகளில் 32% க்கும் அதிகமான சரிவு இருந்தபோதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?
மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார். 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எல்ஐசியின் பதில் அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, LIC India, எதை நீங்கள் பொய் என்று கூறுகிறீர்கள்?, நீங்கள் வரிசெலுத்துவோரின் ரூ.30,000 கோடியை அதானிக்கு உதவ பயன்படுத்தியதையா அல்லது அதானிக்கு நிதி வழங்க விரைந்து அனுமதி வழங்குமாறு நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்ததை பொய் என்று கூறுகிறீர்களா? என்று வினவியுள்ளார்.






