search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cellphone tower"

    • புதுக்குடி, கங்கனாங்குளத்தில் டவர் அமைந்துள்ள இடங்களை சேதுராமன் பார்வையிட்டார்.
    • திருட்டு சம்பவம் குறித்து சேதுராமன் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புதுக்குடியில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சேரன்மகாதேவி- களக்காடு சாலையில் அமைந்துள்ள கங்கனாங்குளம் கிராமத்திலும் அதே நிறுவனத்திற்கு சொந்தமான டவர் உள்ளது.

    இந்த நிறுவனத்தின் மேலாளராக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சேதுராமன் (வயது51) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நெல்லைக்கு வந்து ஆய்வு செய்த நிலையில் நேற்று புதுக்குடி மற்றும் கங்கனாங்குளத்தில் டவர் அமைந்துள்ள இடங்களை அவர் பார்வையிட்டார்.

    அப்போது புதுக்குடியில் டவர் அருகே வைக்கப்பட்டி ருந்த ரூ.31 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான உபகர ணங்களும், கங்கனாங் குளத்தில் உள்ள ரூ.20 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பி லான உபகரணங்களும் திருட்டு போயிருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த சேதுராமன் இந்த திருட்டு சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.51 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • செல்போன் டவர் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கபட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது மைதீன் கசாலி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பேட்டை ரஹ்மானிய பள்ளிவாசல் அருகில் ரஹ்மத்நகர், ராஜீவ் காந்திநகர், ஆசிரியர் காலனி, ப.த.நகர் ஆகிய இடங்களில் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் அதிக கதிர்வீச்சு பரப்பக்கூடிய செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்போன் டவர் கதிர்வீச்சால் பலவிதமான நோய்களால் குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பகுதி மக்கள் அச்சப்படுவதாலும் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலும் இந்த பகுதியில் செல்போன் டவர் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கபட்டதை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரி க்கை மனுவை அளித்தனர்.

    • குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
    • மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    குன்னத்தூர் :

    அவிநாசி அருகே குன்னத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பூலாங்குளம் குடியிருப்பு பகுதி அருகே தனியாா் செல்போன் நிறுவனம், செல்போன் உயா் கோபுரம் அமைப்பதற்காக தனியாா் இடத்தில் பணிகளை தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் உயா் கோபுரங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மேலும் பேரூராட்சி நிா்வாகத்தினா், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.

    இருப்பினும் உயா்கோபுரம் அமைக்கும் பணி தொடர இருப்பதாக அறித்த அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்புக் கொடி போராட்டம் குறித்து தகவலறிந்த குன்னத்தூா் போலீசார் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதைத்தொடா்ந்து செல்போன் உயா் கோபுரம் அமைக்க அனுமதி அளித்த தனியாா் இடத்தினா் அந்த முடிவைக் கைவிட்டனா். இதையடுத்து கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.

    • இந்த டவர் அமைந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள்.
    • மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன, அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் புதுநகரில் 200 வீடுகள் உள்ளன. இங்கு மொபைல் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டவர் அமைந்தால் 500 மீட்டர் சுற்றளவுக்கு கதிர்வீச்சு அதிகளவில் இருக்கும் .

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள். பலவிதமான நோய்கள் தாக்கும் வாய்ப்பும் உள்ளது .மேலும் இந்த பகுதியில் மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன. அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில் மொபைல் டவர் அமைக்காமல்இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுநகர் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    • தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தனிநபர் வீட்டு மாடியில் உள்ள தனியார் செல்போன் டவரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனதுர்காநகர், சரஸ்வதி நகர், பொதிகை நகர், லெட்சுமி நகர், ஏ.கே.எல். காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனிநபர் வீட்டு மாடியில் உள்ள தனியார் செல்போன் டவரை அகற்ற வேண்டும்.

    அரசு உத்தரவை மீறிய அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கருப்புசாமி, மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் வனரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    காட்பாடி கிளிதான்பட்டறையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என்று போராட்டம் செய்தனர்.

    அப்போது எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். மேலும் கால்நடை மற்றும் பறவையினங்கள் இறக்க கூடும்.எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

    கூத்தாநல்லூர் அருகே செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மாரங்குடி ஊராட்சியில் உள்ள தாமரைப்பள்ளம் கிராமத்திற்கு ஏற்கனவே சென்ற மின் பாதையை மாற்றி செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி தலைமையில் கிராம மக்கள், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தனித்துணை கலெக்டர் (நிலம்) பால்துரை, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், கச்சனம் இளம்மின் பொறியாளர் திருஞானம், வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டரிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து வடபாதி மங்கலம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் அருகே 5 ஜி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கழுவந்தோண்டி கிராமம் மெயின் ரோட்டில் இருந்து அம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையில் தனியார் ஒருவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு தனியார் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து கோபுரம் அமைப்பதற்கான 20 அடி ஆழமுள்ள குழி தோண்டப்பட்டது. 2 மாத காலமாக குழி மூடப்படாமல் இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாக பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வெளியேறாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதனால் குழந்தைகள் உள்பட பலருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். 

    இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் காட்டு பகுதியில் அமைக்க வேண்டும். மேலும் தற்போது தோண்டப்பட்டுள்ள குழியை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் ரோட்டில் கழுவந்தோண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் அங்கிருந்து கலைந்து செல்லாமல் மழையில் நனைந்தப்படி மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் அண்ணாதுரை, செல்வம், வளையாபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து உங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பலத்த மழையின்போது செல்போன் டவர் மீது இடி விழுந்ததில் டவர் தீப்பிடித்து எரிந்தது.
    புஞ்சை புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக தொடர்ந்து மழை கொட்டியது. ஈரோடு நகரை தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    புஞ்சை புளியம்பட்டியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இடியும்-மின்னலும் அதிகமாக இருந்தது. இதில் புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் மீது ‘இடி’ விழுந்தது.

    இதில் அந்த செல்போன் டவர் திடீரென தீ பிடித்து எரிந்தது. அதிகாலை 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது மழையும் பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    தக்க சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ளது கேர்பெட்டா. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு நடுவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கோத்தகிரி தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்து, கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி பெற்றது. இதையடுத்து அந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணிக்கு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்சாண்டர், கவுதம், நசீர், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு உள்ளதால் பணிகளை தடுத்து நிறுத்துவது சட்டப்படி குற்றம். வேண்டுமென்றால் ஐகோர்ட்டில் பொதுமக்கள் சார்பில் மனு தாக்கல் செய்து செல்போன் கோபுரம் அமைக்க தடை உத்தரவு பெறலாம். மேலும் மாவட்ட கலெக்டரிடம் குடியிருப்பு பகுதி அல்லாமல் வேறு இடத்தில் செல்போன் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கலாம் என்று யோசனை கூறினர். இதை கேட்டறிந்த பொதுமக்கள், எங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்கவே திரண்டோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களது நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். 
    ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் மாதா கோவில் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக செல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதி மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்று நோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மை குறைவு போன்றவை ஏற்படுவதோடு விலங்கு மற்றும் பறவைகள் அழிந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் டவர் அமைக்கும் இடத்திற்கு அருகே பள்ளிக் கூடம், அங்கன்வாடி உள்ளதால் இந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்ககூடாது என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர்.

    மேலும் செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தில் பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 2014-ம் ஆண்டு வளர்புறம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்ககூடாது என ஊராட்சி மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வளர்புரம் ஊராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் கிராம மக்கள் ஒன்றாக திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
    ×