

நெல்லை:
நெல்லை பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது மைதீன் கசாலி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பேட்டை ரஹ்மானிய பள்ளிவாசல் அருகில் ரஹ்மத்நகர், ராஜீவ் காந்திநகர், ஆசிரியர் காலனி, ப.த.நகர் ஆகிய இடங்களில் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் அதிக கதிர்வீச்சு பரப்பக்கூடிய செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்போன் டவர் கதிர்வீச்சால் பலவிதமான நோய்களால் குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பகுதி மக்கள் அச்சப்படுவதாலும் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலும் இந்த பகுதியில் செல்போன் டவர் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கபட்டதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரி க்கை மனுவை அளித்தனர்.