என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anitha Radhakrishnan"

    • நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
    • மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டின் உலக மீன்வள தினம் "கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்" ('Strengthening the value addition in Seafood exports)' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று சென்னை நந்தனத்தில் அனமந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துனற இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துனற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்று, மாநிலத்தின் சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்போர், கடலில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்போர், சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துனறமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, சிறந்த விற்பனையாளர் (TNFDC) ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர் நலவாரிய பயனாளர்களுக்கும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம் மற்றும் உள்ளீடுகள் / இடு பொருட்களுக்கான மானியம், சிறிய உயிர்கூழ்ம (பயோபிளாக்) குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பிற்கான மானியம், குளிர்காப்பிடபட்ட நான்குசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

    • அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் அவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில்.
    • தேர்தலின்போது நடந்த தகராறை வைத்து அதை திமுகவுடன் முடிச்சுப் போடும் ஈனச்செயலை செய்ய முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணனை கொலை செய்தவரே குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக்கொண்டு கைதாகிய நிலையில், உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த தகராறை வைத்து அதை திமுகவுடன் முடிச்சுப் போடும் ஈனச்செயலை செய்ய முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    திமுகவுக்கு திமுக அரசுக்கு எதிராக செய்தி பரப்ப எதுவும் கிடைக்காதா என தினமும் அலையும் பிரபல பத்திரிக்கை, "முத்து பாலகிருஷ்ணனுக்கும், சவுந்திரராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால், அவர் தான் லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டதாக முத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தியதில், திட்டமிட்டு கொலை நடந்தது தெரியவந்தது" என செய்தி வெளியிட்டதை எடப்பாடி பழனிசாமி படிக்கவில்லை போலும்.

    தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் பைக்கில் சென்றபோது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் பலியானார்.

    லாரி ஓட்டுநர் சவுந்திரராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த முத்து பாலகிருஷ்ணன் வஞ்சகம் செய்து ஏமாற்றியதால் டிப்பர் லாரி ஏற்றி கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுநர் சவுந்திரராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொல்லம்பரம்பு கிராமத்தில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை தற்போது கைதாகியுள்ள லாரி ஓட்டுநர் சவுந்திரராஜன் அனுபவித்து வந்துள்ளார். 650 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தில் கல் குவாரி இருப்பதால் அதை வைத்து டிப்பர் லாரி மூலம் பொருட்களை சவுந்திரராஜன் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் அந்த நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்து பால்ராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார். தான் அனுபவித்து வந்த நிலத்தை தனக்கு தகவல்கூட தெரிவிக்காமல் விற்பனை செய்து ஏமாற்றியதாக கருதிய சவுந்திரராஜன், அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார்.

    அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் அவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில். அதனால் பாதிக்கப்பட்ட சவுந்திரராஜன் பலிதீர்க்கவே லாரி ஏற்றிக்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது ஊடகச் செய்திகளில் தெளிவாக வெளியாகியுள்ள நிலையில், "திமுக ஆட்சியில் அதிமுக பிரமுகரை கொலை செய்தது திமுக பிரமுகர்" என்று பேசினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற தீய எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் பற்றி அவதூறை விதைக்க முயற்சிக்கிறார்.

    கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கருணாகரனின் மனைவி கவுரி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரை எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் தனது மனைவியை நிறுத்தியுள்ளார். அப்போது சில சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதை வைத்து அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலையை திமுக பிரமுகர் கருணாகரன் மீது சுமத்துவது எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயக் கணக்கு போட்டுள்ளார்.

    முத்து பாலகிருஷ்ணன் மரண வழக்கு போலீஸ் விசாரணையில் இருக்கும்போதே எடப்பாடி பழனிசாமி திமுக பிரமுகரை இதில் சம்பந்தப்படுத்தி பேசுவது திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கேவலமான எண்ணம்.

    ரியல் எஸ்டேட் தொழில் விரோதத்தால் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலையான நிலையில், "தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலை" என்று சொல்வது மோசடி, ஏமாற்றுதல், பாலியல், போதைப்பொருள், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் அதிமுக பிரமுகர்களை புனிதர்களாக காட்ட எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதை காட்டுகிறது.

    "சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற அவதூறுக்கு ஆதாரம் தேடி தோற்றுப்போன பழனிசாமி இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ளார். இதிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கும் என அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

    • உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
    • வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார் முதல்-அமைச்சர்.
    • அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் விழா ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி இணை பேராசிரியர் மோனிக்கா ராம்ராஜ் முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் ஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.

    திட்டத்தை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஓன்று. அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து பின்னர் கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு எத்தனை வருடமாக இருந்தாலும் ஓருமுறை பதிவு செய்து விட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்துவிடும். முதல்-அமைச்சர் இத்திட்டத்தை நேரடியாக தொடங்கி வைத்துள்ளார். பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார். கல்வியறிவு இல்லாத மாநிலமாக உருவானால் எல்லா வகையிலும் வளர்ச்சியடையும். கடந்த காலங்களில் கல்லூரி படிப்பை தொடர முடியாத பலரும் இந்த புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்து தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு ரூ. 349 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தில் தொடங்கி பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு கல்லூரி படிப்பை தொடர புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி பாரதி கண்ட புதுமைப்பெண் கனவை நிறைவேற்றியுள்ளார். பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பை தொடரும் நீங்கள் இதில் பயன்பெற்று பயனடைய வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், நாகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சமூகநல அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னான்டோ நன்றி கூறினார்.

    • ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இ நூலகத்தை’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    • நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இ நூலகத்தை' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    இதில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொது மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டு பத்து ஜெயராமன் மகன்களான ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தொழிற் சங்க தலைவர் சரவண குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் உடையார், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், துணை செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
    • தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந்தேதி அதீத கனமழை பெய்தது.

    இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

    இதற்கிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினருடன் ஈடுபட்டார். 17-ந்தேதியில் சாத்தான்குளம் பகுதியில் கொட்டும் மழையில் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு சென்றார். அப்போது கனமழை காரணமாக ஏரல் தாமிரபரணி ஆற்று பாலம் மூழ்கியது. மேலும் ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. மேலும் தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

    இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக ஏரலில் சிக்கி கொண்டார்.


    அங்கு பொதுமக்களுடன் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் பொதுமக்களுடன் நிவாரண உதவிகளை செய்தார். எனினும் கடும் வெள்ளம், தொலை தொடர்பு சேவை பாதிப்பு, சாலை துண்டிப்பு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு செல்ல முடியவில்லை.

    இந்நிலையில் இன்று வெள்ளம் ஓரளவு வடிந்ததால் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

    • வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
    • 'இந்தியா' கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்கு சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அவர்களை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.


    தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக 'இந்தியா' கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு,  திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    • ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல்.
    • அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார். இதுதவிர, ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    ராக்கெட் எவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சார்பில் நாளேட்டில் கொடுக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.

     


    அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் சீன ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ராக்கெட் ஒன்றின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.

    இதற்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தி.மு.க. எந்த பணியையும் மேற்கொள்ளாமல், அதற்கு பெயரை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. அவர்கள் நம் திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர். இஸ்ரோ ஏவுதள திட்டத்தில் அவர்கள் சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்."

    "விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வருவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விண்வெளி துறையில் இந்தியாவின் வெற்றியை உலகிற்கு எடுத்து சொல்ல அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் நம் விஞ்ஞானிகள் மற்றும் நம் விண்வெளி துறையையே அவமதித்து விட்டனர். அவர்களின் தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரம் தி.மு.க.-விற்கு வந்துவிட்டது," என்று தெரிவித்தார்.


    முன்னதாக இஸ்ரோவின் பெருமையை கூறும் இடத்தில் சீன ஸ்டிக்கர் இடம்பெற்று இருந்ததற்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும்.
    • விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

    சென்னை:

    மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

    தலைவாசலில் அமைந்து உள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.

    இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், 2021-ல் கழக ஆட்சி பொறுப்பேற்ற போது 50 சதவிகித பணிகள் கூட முடிவடையாத நிலையே இருந்தது.

    உலகத் தரத்தில் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடம் அதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்த ஆராய்ச்சி முதலில் நடைபெற்றிருக்க வேண்டும்.

    அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சரியான திட்டமிடுதல் இல்லாமல், அவசர கதியில், மக்களின் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தை தொடங்கி உள்ளார்கள்.

    கால்நடை பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். தினசரி 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் ஒரு நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்தது எந்த வகையான திட்டமிடல் எனத் தெரியவில்லை.

    எனினும், கடந்த 7.5. 2021-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சி அமைந்த பிறகு இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து கால்நடை வளர்ப்போர் உண்மையாகவே பயன் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று, 2023-ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை காரணமாக ஜனவரி 2024-ல் முடிக்கப்படவேண்டிய பணிகள் சிறிது தாமதமாக முடிக்கப்பட்டு வருகின்றன.

    அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருகே உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூரும் புகைப்படங்களை பார்வையிட்டார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    இந்நிலையில் கவர்னர் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

    நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.

    நேற்று வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் கலெக்டர் பங்கேற்கவில்லை.

    முன்னதாக, வேதாரண்யம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். தமிழக அரசின் நலன் சார்ந்த கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா கைப்பாவையாக கவர்னர் செயல்படுவதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜாஜி பூங்கா எதிரே கருப்பு கொடி காட்டி கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கறுப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×