என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Fisheries Day"

    • நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
    • மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டின் உலக மீன்வள தினம் "கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்" ('Strengthening the value addition in Seafood exports)' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று சென்னை நந்தனத்தில் அனமந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துனற இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துனற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்று, மாநிலத்தின் சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்போர், கடலில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்போர், சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துனறமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, சிறந்த விற்பனையாளர் (TNFDC) ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர் நலவாரிய பயனாளர்களுக்கும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம் மற்றும் உள்ளீடுகள் / இடு பொருட்களுக்கான மானியம், சிறிய உயிர்கூழ்ம (பயோபிளாக்) குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பிற்கான மானியம், குளிர்காப்பிடபட்ட நான்குசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

    • உலக முதுகெலும்புடைய உயிரிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை என அறியப்படுகிறது.
    • உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது.

    உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி இன்று உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மீன்வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கொண்டாடுவதும் தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

    நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு. உலக முதுகெலும்புடைய உயிரிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை என அறியப்படுகிறது.

    இந்த எண்ணிக்கையின் சூழலில் 536 மீன் குடும்பங்கள், 5,324 பேரினங்களை உள்ளடக்கிய மீன்கள் கூட்டம் மற்றும் 37 ஆயிரத்து 424 சிற்றின மீன் இனங்களாக அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது உயிரியல் ஆய்வில் ஓர் அதிசயம்.

    உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலக மீன்வளம் மற்றும் நீருயிரின் வளர்ப்பின் நிலை 2024-ம் ஆண்டு அறிக்கையின்படி உலகளாவிய பிடிப்பு மீன்வளம் 92.3 மில்லியன் டன்களை எட்டியிருக்கிறது. இதில் கடல் மீன்பிடிப்பு 81 மில்லியன் டன்களாகவும், உள்நாட்டு மீன்பிடிப்பு 11.3 மில்லியன் டன்களாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா, பெரு மற்றும் ரஷியா கூட்டமைப்பு போன்ற நாடுகள் மீன்பிடி உற்பத்தியில் இருந்து வருகின்றன.

    தற்போது கடல்நீர் வெப்பமடைதல், அமிலமயமாதல், வாழ்விடச் சீரழிவு, அசாதாரண வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு, வேதிப்பொருள் போன்ற மாசுபாட்டின் விளைவுகள் உலக மீன்வளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆகவே உலகளாவிய மீன்வளத்தின் எதிர்காலத்தையும், அவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்களையும் உறுதிப்படுத்த, கடலோர கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை மிக முக்கியமானது. மேலும் நிலையான மீன்பிடி முறைகள், ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே உலக மீன்வள நாளின் முக்கிய நோக்கமாகும்.

    • மூன்று ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வருவாயை அதிகரிக்க திட்டம்.

    மீன்பிடித் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மீன்வளர்ப்பை தீவிரப்படுத்துதல் மற்றும் மீன்வள மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து இன்று உலக மீன்பிடி தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள டாமன் நகரில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரிகள் சஞ்சீவ் குமார் பல்யான், எல்.முருகன் மற்றும் அரசுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகள் வரை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் மீன் வளம் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என்று, மத்திய மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரைவலை மூலம் நாள் ஒன்றுக்கு 1 டன் வரை மீன்பிடித்தவர்கள், தற்போது 200 கிலோ கிடைப்பதே அரிதாகி விட்டதாக அங்கலாய்க்கிறார்கள்.
    • பாரம்பரிய மீன்பிடித்தலில் நாளுக்குநாள் பெருகிவரும் விதிமீறல்களால் வாழ்வாதாரம் பாதித்து மாற்றுத்தொழிலை தேடும் நிலை எப்போதே வந்துவிட்டது.

    தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்டிருந்தபோதும், அதன் மூலம் தங்கள் வாழ்வை தேடும் மீனவர்களின் எதிர்காலம் மிகவும் குறுகியதாகவே இருக்கிறது. கடல் தாயை நம்பியுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிய காலம் போய், அதிலிருந்து விடுபட நினைப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதற்கெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் வரும் உலக மீன்பிடி தின அறிவிப்பு வாழ்வை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இன்றும் மேலோங்கி வருகிறது.

    நவம்பர் 21-ந்தேதி உலக மீன்பிடி தினமாக கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் நலன் காக்க ஓருயிராய் கடலுக்கு செல்லும் மீனவரின் வாழ்வு காக்கப்படுகிறதா? என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஒருநாள் போவார், ஒருநாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்... என்ற பாடல் வரிகள் மட்டுமே தற்போதைய மீனவர்களின் ஒரே அடையாளமாக திகழ்கிறது

    இந்திய பொருளாதாரத்தில் அன்னியச்செலாவணியை அதிகம் பெற்றுத்தருவதில் மீன்பிடி தொழிலுக்கு பெரும் பங்கு இருந்தபோதிலும், அவர்களது பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் இருப்பதுதான் வேதனைக்குரியது. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இடர்பாடுகள், அண்டை நாட்டாரின் கெடுபிடிகள், உரிய பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடித்தலை விட்டு வேறு ஏதாவது வேலைக்கு செல்லலாமா? என்ற நிலைக்கு கூட மீனவர்கள் வந்துவிட்டனர்.

    அது ஒருபுறம் இருந்தாலும், மீன்பிடி முறையில் உள்ள பாரம்பரியங்கள் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டதும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கரைவலை என்று அழைக்கப்படும் பாரம்பரிய முறையிலான இழுவை மீன்பிடித்தல் என்பது பழமை வாய்ந்தது. சுமார் 40 முதல் 50 பேர் வரை கடலில் விரித்திருக்கும் வலை மூலம் கரையில் இருந்தவாறு மீன் பிடிக்கும் முறை. இவ்வாறு மீன்பிடிப்பதால் கடல் வளம் காக்கப்படுவதோடு, மீன்பாடு எப்போதும் குறையாது என்பதும் பரவலான கருத்து.

    ஆனால் வளர்ந்து வரும் நாகரீம், தொழில்நுட்பம், பெருகும் விசைப்படகுகள் ஆகியவற்றால் இந்த கரைவலை மீன்பிடித்தல் காணாமல் போய்விட்டது. கரையில் இருந்து 3 கடல்மைல் தூரத்திற்கு அப்பால்தான் விசைப்படகுளை பயன்படுத்த வேண்டும் என்ற விதிகள் இருந்த போதிலும் அவை கடல் காற்றோடு சேர்ந்து பறந்து விட்டது. அத்துடன் ஒரு கடல்மைல் தூரம் வரை வீசப்படும் இந்த கரைவலை மீன்பிடித்தல் நசிந்துவிட்டதால் நாள் ஒன்றுக்கு மீனவர்கள் ரூ.15 ஆயிரம் வரை இழப்பையும் சந்திக்கிறார்கள்.

    பாரம்பரிய இழுவை மீன்பிடி (உள்ளூரில் கரைவாலை என்று அழைக்கப்படுகிறது) என்பது ஒரு வகை மீன்பிடி ஆகும், அங்கு 40-50 பேர் கொண்ட குழு ஏற்கனவே கடலில் போடப்பட்ட வலையை கரையில் இருந்து மீன் பிடிக்க இழுக்கும். கடலில் இருந்து ஒரு கடல் மைல் தொலைவில் கடலில் வலை வைக்கப்படும். இந்த முறை முன்பு மிகவும் பிரபலமாக இருந்தது. இருப்பினும், இந்த வகை மீன்பிடியைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து கால்வாசி ஆகிவிட்டது.

    கடலில் கலக்கப்படும் கழிவுநீர் கடல் நீரோட்டத்தை மாற்றுவதோடு, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இழுவை படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது சற்றும் குறையவில்லை. படகுகளின் நீளம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, இன்று போர்க்கப்பல்களை போன்று கடலில் வலம் வரும் விசைப்படகுளை மீனவர்கள் பயன்படுத்துவதால் ஒட்டு மொத்த மீன்பாடும் அவர்களுக்கே சென்றுவிடுவதாகவும், பாரம்பரிய மீன்பிடி முறை பாதிக்கப்பட்டு விட்டதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    கரைவலை மூலம் நாள் ஒன்றுக்கு 1 டன் வரை மீன்பிடித்தவர்கள், தற்போது 200 கிலோ கிடைப்பதே அரிதாகி விட்டதாக அங்கலாய்க்கிறார்கள். பாரம்பரிய மீன்பிடித்தலில் நாளுக்குநாள் பெருகிவரும் விதிமீறல்களால் வாழ்வாதாரம் பாதித்து மாற்றுத்தொழிலை தேடும் நிலை எப்போதே வந்துவிட்டது. இனியும் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க கரையோர மீனவர்களின் நலனையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

    உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, இன்று கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால், அவர்கள் பிரச்சனைகளை கொண்டு அரசியல் செய்யத்தான் பார்க்கிறார்கள் என்று மீனவர்கள் தெளிவாக கூறுகின்றனர். அதேபோல் பாம்பன் குந்துகால், மூக்கையூர், தனுஷ்கோடி, செக்குவாடி உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தும் வராமல் இருக்கும் துறைமுகங்களால் மீனவர்கள் நலன் எந்தவிதத்திலும் காக்கப்படவில்லை.

    இதுபோன்று கோடிகளை அள்ளிக்குவித்து நிறைவேற்றப்படும் அரசு திட்டங்களால் பயனடைவது மீனவர்களை பொறுத்தவரை 30 சதவீதம் பேர்தான். வெளிநபர்களே அதிகம் ஆதாயம் அடைவதாக ஆதங்கப்படும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வருங்காலத்தில் உலக மீன்பிடி தினம் என்பது கடலில் கால் வைக்கும் ஒவ்வொரு மீனவரின் ஆத்மார்த்தமான மகிழ்ச்சி தினமாக அமைய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தான்.

    ×