search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthumaipen scheme"

    • பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார் முதல்-அமைச்சர்.
    • அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் விழா ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி இணை பேராசிரியர் மோனிக்கா ராம்ராஜ் முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் ஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.

    திட்டத்தை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஓன்று. அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து பின்னர் கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு எத்தனை வருடமாக இருந்தாலும் ஓருமுறை பதிவு செய்து விட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்துவிடும். முதல்-அமைச்சர் இத்திட்டத்தை நேரடியாக தொடங்கி வைத்துள்ளார். பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார். கல்வியறிவு இல்லாத மாநிலமாக உருவானால் எல்லா வகையிலும் வளர்ச்சியடையும். கடந்த காலங்களில் கல்லூரி படிப்பை தொடர முடியாத பலரும் இந்த புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்து தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு ரூ. 349 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தில் தொடங்கி பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு கல்லூரி படிப்பை தொடர புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி பாரதி கண்ட புதுமைப்பெண் கனவை நிறைவேற்றியுள்ளார். பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பை தொடரும் நீங்கள் இதில் பயன்பெற்று பயனடைய வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், நாகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சமூகநல அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னான்டோ நன்றி கூறினார்.

    • மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்- அமைச்சரால் கடந்த மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

    இதுவரை 2,3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள (https://www.pudhumaipenn.tn.gov.in) என்கிற வலைதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இந்த வலைதளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம்,

    அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் நேரடியாக விண்ணப்பிக்க கூடாது எனவும்் கூறப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற் கட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×