என் மலர்
நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
- அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள்.
கன்னியாகுமரி:
அ.தி.மு.க. கொள்கை பரப்பு மாநில துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 4½ ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் சந்திக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வருகிற சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் தான் தீர்வு கிடைக்கும்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றியடைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அதிசய பிறவிகள். நடிகர் விஜய்யின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பது தெரியும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் மக்களின் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால் மக்களை தேடி சென்று மக்கள் பிரச்சனைகளை பேசும் பயணமாக மாறி உள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கண்டிப்பாக பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பேசவே இல்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
- கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா?
- எடப்பாடி பழனிசாமி, திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.
சென்னை:
கோவில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி ஆரம்பித்தால், மாணவர்களின் தேவைக்கான நிதி கிடைக்காது என்பதால் அந்த கருத்தை கூறியதாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,
* கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா?
* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்.
* எடப்பாடி பழனிசாமி, திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.
* கொள்ளிக்கட்டையை எடுத்து தலைமை சொறியும் வேலையில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார் என்றார்.
- மாணவர்களின் நலன் கருதி அதை, அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர சொன்னேன்.
- அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது கோவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறையில் இருந்துதான் அதற்கு நிதி ஒதுக்க முடியும். மாணவர்களின் நலன் கருதி அதை, அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர சொன்னால், கண்ணு, காது, மூக்கு வச்சு இரண்டு நாளாக விவாதம் நடக்கிறது
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற முறையில், நானே முடிவு செய்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்இடஒதுக்கீடு கொண்டுவந்தேன். ஏழைகளும் மருத்துவர் ஆகலாம் என்ற கனவை நினைவேற்றிய அரசு அதிமுக அரசு
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம். ஒரேயொரு மருத்துவக் கல்லூரி உங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வர முடிந்ததா?" என்று தெரிவித்துள்ளார்.
- கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல் என சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
- கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள் அமைக்கலாம்.
திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற கல்லூரிகளைத் திறந்து வைத்ததை "கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்" என பதவி சுகத்துக்காக பேரறிஞர் அண்ணாவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது, "உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?" என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.
ஆனால் அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஜூலை 14ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி அளவில், "கோவை, டாடாபாத், சிவானந்தா காலனி"யில், தி.மு.க. மாணவர் அணி செயலாளரான எனது (ராஜீவ்காந்தி) தலைமையில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராஜீவ் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.
- கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க.வை மீட்க முடியாதவர் தமிழ்நாட்டை மீட்க போகிறாராம்.
* பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.
* துரோகம் செய்வது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது.
* ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.
* தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கே துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.
* கீழடி என்றால் கீழே படுத்து செல்வது மட்டும்தான் இ.பி.எஸ்.-க்கு தெரியும்.
* பா.ஜ.க.வின் ஒரிஜினல் குரலாக பேச ஆரம்பித்து விட்டார் இ.பி.எஸ்.
* பழனியாண்டவர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை மயக்கத்தில் போய் திறந்து வைத்தாரா இ.பி.எஸ்.
* கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.
* தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு எப்படி பயணம் மேற்கொள்கிறார் இ.பி.எஸ்.
* கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது அறநிலையத்துறை சட்டத்திலேயே உள்ளது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தார் இ.பி.எஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர்.
- 'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்யுமோ, அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியே!" என்ற தத்துவம் தமிழ் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலையை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மடங்கு சொத்துவரி உயர்வுடன் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்துவரி உயர்வு, பலமடங்கு குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம், தொழில்வரி உயர்வுடன் குப்பை வரியையும் பலமடங்கு உயர்த்தி உள்ளாட்சியின் நிதி நிலைமையை உயர்த்திய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு, வாங்கக்கூடிய வரிகளுக்கு ஏற்ப சாலை வசதியையோ, குடிநீர் வசதியையோ, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் எதையும் மேம்படுத்தவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முன்னாள் உதவி கமிஷனர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதன் அடிப்படையில்தான் நாங்கள் சொத்து வரியைக் குறைத்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எப்போதும் குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற முயலும் மு.க.ஸ்டாலின், குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக மண்டலக் குழுத் தலைவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தவிர, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனாலேயே குறிப்பிடப்பட்ட திமுக-வினர் வசம் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், திமுக மேயர் மற்றும் தலைவர்களாக உள்ளவர்களை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளோடு, திமுக-வின் கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துவதும் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்குக் காரணம், உள்ளாட்சி பதவிகள் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, 'கமிஷன்', 'கலக்ஷன்', 'கரப்ஷன்' தங்கு தடையின்றி நடப்பதுதான்.
உள்ளாட்சி மன்றங்கள் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும், இவை 'உடன்பிறப்புகளின் குடும்ப ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையோ' என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய ஊழல்கள் மீண்டும் மீண்டும் எழுவது மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. இந்நிலையில், விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அடிக்கடி பொதுவெளியில் பேசி வரும் 'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏன் இவர்களை தேர்ந்தெடுத்தோம் என்று தங்களைத் தாங்களே தமிழக மக்கள் நொந்து கொண்டிருக்கின்றனர். தமிழக நலனை கவனிக்காமல், குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் விடியா திமுக ஸ்டாலின் அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது. உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டவை, குடும்ப ஆதிக்கத்திற்கு அல்ல என்பதை தமிழக மக்கள் வரும் 2026 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தத் தயாராகிவிட்டார்கள் என்பதை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் மக்கள் கூட்டம் எடுத்துரைக்கிறது. மேலும், 2026ல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
- காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை:
புளியந்தோப்பில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா? என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,
தி.மு.க. ஆட்சியில் 46 கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். கல்வி பணியை தி.மு.க. ஆட்சி செம்மையாக நடத்தி கொண்டிருக்கிறது. கல்விக்கு சரஸ்வதி என்று குறிப்பிடுகிறோம். பசிப்பிணி போக்குதலும், கல்வி அளித்தலும் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் ஆகும்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் கல்லூரிகளால் அதிகம் பயன்பெறுகின்றனர். 19 கோவில்களில் மருத்துவமனைகளையும் தொடங்கியுள்ளோம். கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சங்கிகள் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்விநிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பழனி ஆண்டவர் கல்லூரியில் 2017-ம் ஆண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி விஷ விதைகளை பரப்பி வருகிறார் என்றார்.
- மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது!
- பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களில் ஒருசில 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்கிற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் 7.7.2025 அன்று துவங்கினேன்.
மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது! ஆனால், மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை!
ஸ்டாலின் மாடல் அரசின் அக்கிரமங்களினாலும், அட்டூழியங்களினாலும், செயலற்ற தன்மையாலும் நம் மக்கள், எதிர்பார்த்ததைவிட அதிகமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள் என்பதை நான் பார்த்து மனம் நொந்தேன்!
திரு. ஸ்டாலின் அவர்களே! உங்களின் காட்டாட்சியும், கொடுங்கோல் ஆட்சி பற்றியும் எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர், பஞ்சாலை உரிமையாளர்கள் என்று எண்ணற்றோரை எனது எழுச்சிப் பயணத்தில் சந்தித்தேன்.
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது. மன வேதனை அடைந்தேன்.
மின் கட்டண உயர்வால் பொதுமக்களும், மின் நிலைக் கட்டண உயர்வால் தொழில் நிறுவனத்தினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
வரி உயர்வாலும், விளைச்சலுக்கு சரியான விலை இல்லாமலும், வரிச் சுமையாலும் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லி, இதற்கெல்லாம் முடிவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் வரவேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்துக் கவலைகளை தெரிவித்தனர்!
உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் ஸ்டாலின் அவர்களே! தமிழகத்தில் இப்போது இருக்கும் இருண்ட காலத்தை மாற்றி, இழந்த பொற்காலத்தை நான் மீட்டுத் தருவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்.
திமுக-வின் விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை நானறிவேன்; ஏன் இந்த நாடே அறியும்!
மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 50 மாதங்களில், தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியதுதான்.
திமுக ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவோம் எனச் சொன்னீர்களே… செய்தீர்களா?
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மேலும் 2 லட்சம் பணியிடங்கள் என்று மொத்தம் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்.
அரசுத் துறைகளில் கடந்த 50 மாத காலத்தில் உங்களின் விடியா அரசு உருவாக்கிய வேலைவாய்ப்புகள் வெறும் ஐம்பதாயிரத்தைக் கூட தாண்டவில்லை என்பதுதானே உண்மை. (அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் காலிப் பணியிடங்களே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது). எத்தனை நாளைக்குத்தான் இந்த உண்மையை மறைப்பீர்கள்.
அரசாங்க ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவேன் எனச் சொன்னீர்களே? கொண்டுவந்தீர்களா?
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய தேதியில் சம்பளம் தரவில்லையே.
சில கல்விக் கூடங்களில் அரங்கேறிய பாலியல் வன்முறைகளை நினைத்து மக்கள் மன வேதனையில் இருக்கிறார்களே....
ஒடுக்கப்பட்டோரும், பாட்டாளி வர்க்கமும் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாய் இல்லை.
முதியோர் கொலைகள், திட்டமிட்ட தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டே இருக்கின்றதே.
இதுபற்றியெல்லாம், உங்களையும், உங்கள் ஆட்சியையும் நோக்கி சாமானிய மக்கள் தினமும் கேள்வி எழுப்புவதும், உங்களிடம் பதில் இல்லாததை நினைத்து உங்களுக்கு
ஜூரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே!
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்; மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப் பொருள் புழக்கம்; கள்ளச் சாராய மரணங்கள்; 25-க்கும் அதிகமான காவல் நிலைய மரணங்கள்; கனிம வளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர்கள் விபத்தில் மரணிப்பது; கல்குவாரிகளை திமுக-வினர்களே விதிகளை மீறி ஏலத்தில் எடுத்து சுரண்டுவது; வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம்சாட்டியது; போலீஸ் விசாரணயில் உயிரிழந்தவரின் தாயாரிடம் கைபேசி மூலம் பேசும்போது, பொறுப்பற்றத்தனமாக ளுடீசுசுலு எனச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழித்தது என்று, தமிழக மக்கள் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் வஞ்சினம் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து தான் உங்களுக்கு ஜூரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே...!
வெற்று விளம்பரங்கள் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆரம்பிக்கபபட்ட திட்டங்களுக்கு புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது. அதைத் தான் எனது இந்த எழுச்சிப் பயணத்தில் மக்கள் என்னிடம் கோரிக்கையாக வைத்தார்கள்.
நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது இதை உணர்வீர்கள். மக்கள் கோபத்தை நேரில் எதிர்கொள்ள இயலாமல் பரிதவிப்பதை யாராலும் மாற்ற முடியாது. வாக்கு செலுத்தி உங்களை முதலமைச்சராக்கிய மக்களின் கேள்விக்கு உங்கள் பதில்தான் என்ன? அந்த பதில் தெரியாமல் தான் உங்களுக்கு ஜூரம் வந்துவிட்டது போலும்!
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கு, கடந்த இரண்டு நாட்கள் நான் சென்ற பிரச்சார சுற்றுப் பயணத்தின்போது
திரண்டு வந்த மக்களின் எழுச்சியும், அவர்கள் கொடுத்திட்ட பேராதரவுமே சாட்சி!
மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
- அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தம்பியாக நான் அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அதிமுக பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டு விட கூடாது. பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.
அதிமுக தனது செல்வாக்கை இழந்து விட கூடாது என்பதை தோழமையுடன் சுட்டி காட்டுகிறேன்.
பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ்.
அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.
அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.
திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி ஆட்சி முழுக்கத்தை வைத்துள்ளனர்.
சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம், தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை.
இந்து சமய அறவிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள்.
- ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே.
கோவையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவில் வருமானத்தில் தி.மு.க. அரசு கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
- நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.
அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
- ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
* அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற் கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
* குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர்.
* அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் மினி பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
* இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் வருகிற 11-ந் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபட வேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயககுமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.