என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • கருங்கடலில் ரஷியாவில் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
    • உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து ரஷியா முக்கிய தளத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உள்ளார். இதனால் சண்டை நீடித்து வருகிறது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. கருங்கடலில் ரஷிய கப்பல்களை தாக்க, உக்ரைன் கடல் டிரோன்களை (ஆளில்லா விமானம்) பயன்படுத்தி வருகிறது.

    Sea Baby என அழைக்கப்படும் இந்த டிரோன்கள், ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது 1500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 2 ஆயிரம் கிலோ எடை வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

    இந்த டிரோனை வெளி உலகத்திற்கு உக்ரைன் காட்டியுள்ளது. இலக்கை துல்லியமாக அளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    செங்கடலில் உள்ள 11 கப்பல்களை உக்ரைன் டிரோன் மூலம் வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில் போர்க்கப்பல் மற்றும் ஏவுகணை தாங்கிகளும் அடங்கும்.

    உக்ரைன் தாக்குதலால் ரஷியா கிரீமியாவின் செவாஸ்டோபோலிருந்து நோவோரோசிய்ஸ்க் பகுதிக்கு முக்கிய தளத்தை ரஷியா மாற்றியுள்ளது.

    • இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • ஒரு பகுதியில் போரை நிறுத்த முடியும் என்றால், மற்ற இடங்களிலும் நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. விரைவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெலன்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "நான் டிரம்ப் உடன் டெலிபோன் மூலம் பேசினேன். அப்போது, இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால், உக்ரைன்- ரஷியா போர் உள்ளிட்ட மற்று போர்களை உறுதியாக நிறுத்த முடியும்" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், டிரம்பிடம் உக்ரைனின் எரிசக்தி சிஸ்டம் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அத்துடன், எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியா உக்ரைன் மீது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை.

    • கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் சரமாரி தாக்குதல்.
    • 251 டிரோன்களை வீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ரஷியா பேச்சுவார்த்தைக்கு இணங்காததால், சண்டை நீடித்து வருகிறது.

    தற்போது டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை டிரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மேற்கு ரஷியாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ரஷியப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் டிரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.

    251 டிரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷியா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    • ரஷியாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன்.
    • கடினமான காலகட்டத்தில் நாட்டுடன் இருக்க வேண்டும், நாட்டுக்கு உதவ வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.

    உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் முடிவுக்கு வந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ரஷிய போர் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. ஜெலன்ஸ்கி கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்து வருகிறார்.

    "ரஷியாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன். ஏனென்றால், தேர்தல் எனது இலக்கு அல்ல. மிகவும் கடினமான காலகட்டத்தில், என் நாட்டுடன் இருக்க வேண்டும், என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஆதரித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
    • உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அமெரிக்காவி 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பை ஆதரித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.

    இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது குறித்த கேள்விக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்," ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை.

    ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நினைக்கும் நாடுகள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    • கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மறுபுறம் இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் நள்ளிரவில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் கீவ்வின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கட்டிடம் உக்ரைனின் அமைச்சரவை கூடும் கட்டிடம் ஆகும்.

    மேலும், கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ கூறும்போது,"எதிரி தாக்குதலால் அரசு கட்டிடத்தின் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்" என்றார்.

    அதேபோல் ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இதற்கு பதிலடியாக ரஷியாவின் எண்ணை குழாய் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 3 வருடத்திற்கு மேலாக உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நடைபெற்று வருகிறது.
    • ஏற்கனவே 7 பிராந்தியங்களில் ரஷியப் படைகள் ஊடுருவியிருந்தன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் புதின் சந்தித்த நிலையில், உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொண்டு முன்னேறிச் செல்லாமல் தடைபட்ட நிலையில், உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தில் உள்ள கிராமங்களில் ரஷியப் படைகள் நுழைந்துள்ளன. இதனோடு 8ஆவது பிராந்தியத்தில் ரஷிய துருப்புகள் காலடி எடுத்து வைத்துள்ளது.

    டொனெட்ஸ்க் பிராந்தியதில் கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தொழில்துறை மையமாக விளங்கும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நோவோஹெயோர்ஹிவ்கா மற்றும் சபோரிஸ்கே ஆகிய கிராமங்களில் ரஷியப் படைகள் ஊடுருவியுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ரஷியா, இரண்டு கிராமங்களை பிடித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.

    ஆனால், அந்த கிராமத்தில் ரஷியப் படைகள் வேரூன்றவில்லை அல்லது கோட்டை கட்டவில்லை. சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என உள்ளூர் தரைப்படைகளின் செய்தி தொடர்பாளர் விக்டர் ட்ரேஹுபோவ் தெரிவித்துள்ளார்.

    மிகப்பெரிய ராணுவப் பலம் கொண்ட ரஷியாவை, மீண்டும் பின்னுக்குத் தள்ளும் அழுத்தத்திற்கு உக்ரைன் துருப்புகள் உள்ளாகியுள்ளன. சுமார் 1000 கி.மீ. எல்லையில் இருதரப்பிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள ராணுவ வீரர்கள் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியப் படைகள் ஏற்கனவே சுமி, கார்கிவ், லுகான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஸ்சியா, கெர்சன், மைகோலைவ் பிராந்தியங்களில் ஊடுருவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2014 மார்ச் மாதம் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியது, தற்போதைய சண்டையில் உக்ரைனின் ஐந்தில் ஒரு புகுதியை ஆக்கிரமித்து்ளளது.

    ரஷிய துருப்புக்கள் உக்ரைனுக்குள் தீவிரமாக ஊடுருவி கொண்டிருக்கும் வேளையில், ரஷிய அதிபர் புதின் அமைதி முயற்சிகளில் தாமதம் செய்து, தீவிர பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதாக மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதின்- ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார். பேச்சுவார்த்தை ஒப்பந்தம் ஏற்படுவதற்குள் முடிந்த அளவிற்கு உக்ரைன் நிலங்களை ஆக்கிரமிக்க புதின் திட்டமிடுள்ளார்.

    • ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்
    • பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ரஷிய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனிடையே, உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
    • கார்கிவ் மீது ரஷிய ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

    உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று முன்தினம் ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் ரஷியா இன்று நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

    கார்கிவ் நகரில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தை ரஷிய டிரோன் தாக்கியது. இந்த சம்பவத்தில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர்.

    தகவல் கிடைத்தவுடன், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கார்கிவ் மீது ரஷிய ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் 13 வயது சிறுவன் உட்பட எட்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' துப்பாக்கியால் 2 ரஷிய வீரர்களைக் அவர் கொன்றார்.
    • முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது.

    ரஷியாவுடன் நடந்து வரும் போரில் உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்துள்ளார்.

    13,000 அடி (கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷிய வீரர்களை Sniper துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொன்றார். இதை உக்ரைன் செய்தித்தாள் கீவ் போஸ்ட் தெரிவித்தது.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 அன்று போக்ரோவ்ஸ்க் பகுதியில் நடந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' Sniper துப்பாக்கியால் 2 ரஷிய வீரர்களைக் அவர் கொன்றார்.

    அலிகேட்டர் 14.5 மிமீ

    இதை வெற்றிகரமாகச் செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது. 12,400 அடி தூரத்தில் இருந்து ரஷிய வீரர் ஒருவரை அவர் சுட்டுக் கொன்றிருந்தார். தற்போது அந்த சாதனையை மற்றொரு உக்ரேனிய வீரர் முறியடித்துள்ளார். 

    • உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது.
    • இது எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    ரஷிய அதிபர் புதினுடன் வருகிற 15-ந்தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமைதி ஒப்பந்தத்தின்படி சில நிலங்களை உக்ரைன் விட்டுகொடுக்க வேண்டியதிருக்கும். இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கி கூறியதாவது:- போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30 சதவீதத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் விரும்புகிறார்.

    உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது, எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • டொனால்டு டிரம்ப்- புதின் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
    • இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன போர் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் போர் முடிவை ரஷிய அதிபர் புதின் ஏற்கவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் புதின் இதற்கு அடிபணியவில்லை.

    இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே உக்ரைன் பிராந்தியத்தை முறையாக விட்டுக்கொடுப்பதை நிராகரிப்பதாகவும், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உக்ரைன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் எந்வொரு அமைதி ஒப்பந்தமும் செயலில்லாத தீர்வுக்கு வழிவகுப்பதாக இருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    புதின்- டிரம்ப் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச இருக்கிறார்கள்.

    ×