என் மலர்
பாகிஸ்தான்
- பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
- இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
- இதில் இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.
லாகூர்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று (14-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.
நட்சத்திர வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களே கூறிவருகின்றனர். இதேபோல், இந்தப் போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான தன்வீர் அகமது இந்தப் போட்டி குறித்து கூறுகையில், இந்த ஆசிய கோப்பை போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சைம் அயூப் 6 சிக்சர்கள் அடிப்பாரென நினைக்கிறேன் என தெரிவித்தார்.
- பலுசிஸ்தானில் ஏராளமானோர் கலந்துகொண்ட ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது.
- அப்போது அங்கு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், பலுசிஸ்தானில் மற்றொரு இடத்தில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள துணை ராணுவப்படை தலைமையகத்தைக் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ தலைமையகத்தின் சுவரில் மோதி வெடிக்க வைத்தனர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
- அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பேரணியில் கலந்து கொண்ட அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
- 20 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பேய்மழை கொட்டித் தீர்த்தது.
இதுபோன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மழை வெள்ள அபாய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் எனக்கூறியது விசித்திரமாக உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், செய்தி சேனலுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
வெள்ள அபாயம் போன்ற சூழ்நிலைக்கு எதிராக போராடும் மக்கள், மழை வெள்ளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் வெள்ளத்தை மழைநீர் வடிகால் கால்வாயில் விடுவதற்குப் பதிலாக கண்டெய்னர், தொட்டிகளில் சேமிக்க வேண்டும். மக்கள் வெள்ளத்தை ஆசீர்வாதமாக (Blessing) பார்த்து, சேமித்து வைக்க வேண்டும்.
10 முதல் 15 வருட பெரிய திட்டங்களை விட, சிறிய அணைகளை கட்ட வேண்டும். சிறிய அணைகள் கட்டும் வேலைகள்தான் உடனடியாக முடிவடையும். நீரை கால்வாயில் விட்டுக்கொண்டிருக்கிறோம். அதை நாம் கட்டாயம் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பஞ்சாப் மாகாணத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 854 பேர் மழைக் காரணமாக உயிரிழந்துள்ளனர். 1,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
செனாப் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இன்றைக்குள் முல்தான் மாவட்டத்தை வெள்ளம் சென்றடைந்து, ராவி ஆற்று நீருடன் கலக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
- மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கம் நடைபெற்றது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நேற்று, டயமர் மாவட்டத்தின் சிலாஸில் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
- இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
இதனிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்த விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஷாக் தார், "காஷ்மீர் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
- வெள்ளப் பெருக்கு ஏற்படும் என பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
- இந்த எச்சரிக்கையால் 1.5 லட்சம் பாகிஸ்தானியர் உயிர் தப்பினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.
பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இது குறித்துத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய அரசின் எச்சரிக்கையால், பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்த நிலையிலும், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால் 1.5 லட்சம் பேர் உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கான், பல்வேறு குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் உள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவரான இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், கடும் பதவி வெறி பிடித்தவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் கூறியதாவது:-
ராணுவ தளபதி அசிம் முனீர் அதிகார வெறி பிடித்தவர். பாகிஸ்தானில் மிகவும் மோசமான வகையிலான சர்வாதிகாரத்தை அமல்படுத்தியுள்ளார். அவர் ஒழுக்கும் அல்லது இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை.
நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதை விட, 2023 மே 9ஆம் தேதி வன்முறைக்காக அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மே 9 வன்முறை அவரால் கட்டமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் திருடப்பட்டன.
பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.
நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மூன்று மாதங்களில் மூன்று முறை மட்டுமே ஆலோசனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஒரு மாதங்களாக வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கடந்த 8 மாதங்களான என்னுடைய மனைவி புஷாரா பேகமும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு, உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்த அசுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. எல்லா வகையான கொடுமைகளும் அவள் மீது திணிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அசிம் முனீரால் செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் என்னை விட்டு விலகிச் செல்வதற்காக செய்யப்படுகிறது. ஆனால், அவர் எனது பக்க நியாயத்தை புரிந்து கொண்டுள்ளார். எனக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், எனது குடும்பத்தினரை சிறையில் அடைத்தாலும் பெரிய விசயமில்லை. நான் ஒருபோதும் அடிய பணியமாட்டேன். உங்களுடைய அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதுதான் அசிம் முனீருக்கான என்னுடைய செய்தி. என்ன விலை கொடுத்தாவது உண்மையான சுதந்திரத்திற்காக என்னுடைய போராட்டத்தை நான் தொடர்வேன்.
நீதித்துறை அழிக்கப்பட்டுள்ளது, ஊடகங்கள் மவுனமாக்கப்பட்டுள்ளன, காவல்துறை அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இம்ரான் கான் தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- இம்ரான்கான் மீது பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
- இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட் உறுதி செய்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், பண மோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட் உறுதி செய்தது. எனவே ராவல்பிண்டியில் உள்ள கோர்ட்டில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.
முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.
- பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் செப்டம்பர் 23 வரை நீட்டித்தது.
இஸ்லாமாபாத்:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
- ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை பாகிஸ்தான் அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 14) வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் இறந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
ஹவில்தார் முகமது நவீத், நாயக் வக்கார் காலித், லான்ஸ் நாயக் திலாவர் கான் மற்றும் பிறருக்கு தங்கா-இ-பசலத் விருதுகள் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டன.
அதேபோல் நாயக் அப்துல் ரெஹ்மான், லான்ஸ் நாயக் இக்ரமுல்லா, சிப்பாய் அடில் அக்பர் மற்றும் பிறருக்கு தங்கா-இ-ஜுராத் விருதுகள் வழங்கப்பட்டன.






