என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதின.
    • இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலங்களாக விமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மரானா பகுதியில் அமைந்த விமான நிலையத்தில் இன்று காலை 8.28 மணிக்கு செஸ்னா 172எஸ் என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. அதே சமயம் லன்கெய்ர் 360 எம்.கே. 2 மற்றொரு விமானம் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

    விமானங்கள் இரண்டும் ஒற்றை என்ஜின் கொண்டவை. இவை மோதி கொண்டதில் தீப்பிடித்து எரிந்தன. இந்தச் சம்பவத்தில் 2 விமானங்களில் இருந்த தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது.

    கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த இரு வாரங்களில் இதுபோன்ற விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை எதிர்கொண்டு வருகிறது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது.

    • இஸ்ரேலை சேர்ந்த பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
    • இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பிணைக்கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் தகவல்

    4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர்.

    இவை 2023 அக்டோபர் 7, தாக்குதலின் போது கடத்தப்பட்ட ஷிரி பிபாஸ் என்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் மற்றும் 83 வயதான ஒடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் உடல்கள் என நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் தாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இந்த 4 பேரும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் பேனர் வைத்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தனர். பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
    • இதன்மூலம் இந்தியாவில் டெஸ்டா நிறுவனம் கால் பதிப்பது உறுதியாகிவிட்டது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டெஸ்லா அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்க்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "மின்சார வாகனம் தயாரிக்கும் டெஸ்லா, அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, கார்கள் மீதான இந்தியாவின் அதிக வரி தொடர்பாக வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த டொனால்டு டிரம்ப், விரைவில் முன்னதாக உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படவும், வரிகள் தொடர்பான மோதலைத் தீர்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 300 பேர் பனமாவில் உள்ளனர்.
    • அவர்கள் 40 சதவீதம் பேர் சொந்த நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக (ஆவணங்கள் இன்றி) குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தியது. அவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

    ஒவ்வொரு நாட்டின் குடிமகன்களையும் வெளியேற்ற கடினம் என்பதால் மொத்தமாக அனைவரையும் பனமா மற்றும் கோஸ்டா ரிகா நாட்டிற்கு நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதற்கு ஏற்றபடி இரண்டு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் நபர்கள், பனமாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள். அங்கிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அந்த வகையில் 300 பேரை பனமாவிற்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இந்த 300 பேரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    இந்த 300 பேரில் சுமார் 40 சதவீதம் பேர் சொந்த நாடுகளுக்கு திரும்ப விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது பனமா அரசு ஒரு ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவுகள் வழங்கும் பணியை பனமா அரசு செய்து வருகிறது.

    இதற்கிடையே பனமா ஹோட்டலில் உள்ளவர்கள், உதவி... உதவி... என கதறி வருகிறார்கள். மேலும், எங்கள் நாட்டில் பாதுகாப்பு இல்லை என எழுதி வெளியே தெரியும்படி ஒட்டி வைத்துள்ளனர்.

    இது தொடர்பகா பனமா அதிபர் கூறுகையில் "அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் 299 பேர் பனமா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 171 பேர் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    171 பேரும் ஊடுருவல்காரர்களுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு உதவியுடன் சொந்த நாடு செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் 128 பேர் சொந்த நாடு செல்வதற்கான நடைமுறை இன்னும் நடந்து வருகிறது.

    3-வது ஒரு நாட்டிற்கு அவர்கள் அனுப்பப்படுவதற்கான வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த பெண் அவருடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார். சொந்த நாடு திரும்ப மறுக்கும் நபர்கள் தற்காலிகமாக டேரியன் மாகாணத்தில் தங்க வைக்கப்படுவார்கள்" என்றார்.

    • நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.
    • ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகர் அருகே உள்ள கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேர் சமீபத்தில் இறந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் கொசுவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக ஒரு கொசுவை பிடித்து கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.

    இதனால் ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • அங்கு உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கார்டூம்:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை ராணுவப் படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் ராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர். தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 3 நாளாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைனில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார்.
    • உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.

    வாஷிங்டன்:

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

    உக்ரைன் நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி:

    ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.

    அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.

    விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க உள்ளேன். ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிக்க உள்ளது.
    • வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புகிறோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    காசாவில் மொபைல் வீடுகள், கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பிணைக்கைதிகள் இவர்கள் ஆவர்.

    ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என இஸ்ரேல் கூறியது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் அரசுக்கு நாளை (இன்று) மிகவும் கடினமான நாளாக இருக்கும். ஒரு துக்கமான நாள், துக்கத்தின் நாள். இறந்த எங்கள் அன்பான பிணைக்கைதிகள் 4 பேரை வீட்டிற்கு அழைத்து வருகிறோம். நாங்கள் குடும்பங்களை அரவணைக்கிறோம், முழு தேசத்தின் இதயமும் கிழிந்துவிட்டது. என் இதயமே கிழிந்துவிட்டது. உங்களுடையதும் அப்படித்தான் என பதிவிட்டுள்ளார்.

    • விளம்பரங்கள் மூலம் ஈட்டிய வருவாய் தொடர்பாக வரி ஏய்ப்பு செய்ததாக இத்தாலி வழக்கு.
    • விசாரணையை கைவிட இத்தாலிக்கு பணம் செலுத்த கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது.

    கூகுள் உலகளவில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விளங்கி வருகிறது. யூடியூப் உள்ளிட்டவைகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

    கூகுள் மூலம் சேவைகள் வழங்கினாலும் விளம்பரங்கள் மூலமாக அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்திற்கு கூகுள் முறையாக வரி கட்டுவதில்லை. வரி ஏய்ப்பு செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம் சுமத்தியதுடன் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    அந்த வகையில் பிரான்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி வரி ஏய்ப்பு விசாரணையை முடித்துக்கொண்டது.

    பிரான்சை தொடர்ந்து இத்தாலியும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இத்தாலி அரசுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இறுதியாக 2015 முதல் 2019 வரை விளம்பரம் உள்ளிட்டவைகள் மூலம் வருவாய் ஈட்டியதற்கான வரி ஏய்ப்பு விசாரணையை கைவிட கூகுள் நிறுவனம் 340 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2953 கோடி) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளோம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

    ஆனால் கூகுள் நிறுவனம் இது தொடர்பாக உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.

    • முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.
    • ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் நீடா கலந்துகொண்டார்.

    அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டார்.

    அப்போது நடந்த கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது உலக பணக்காரர் பில் கேட்ஸ் அல்லது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆகிய இருவரில் யாருடன் இரவு உணவு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த நீடா அம்பானி, "ரன்பீர், ஏனென்றால் என் மகன் ஆகாஷ் மிகவும் சந்தோஷப் படுவான்- ரன்வீர் ஆகாஷின் சிறந்த நண்பர்" என்று பதில் அளித்தார்.

     

    இதற்கு முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீடா, மோடி நாட்டுக்கு சிறந்தவர், முகேஷ் வீட்டுக்கு சிறந்தவர் என முத்தாய்ப்பாகப் பதில் கொடுத்தார். 

    • மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடு செய்ததாக வழக்கு நடந்து வருகிறது.
    • கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    எனவே இந்த மூன்று வழக்குகளையும், ஒரே அமர்வில் விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.

    மேலும் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வீடியோ வெளியிட்டுள்ளது.
    • எலான் மஸ்க் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.

    டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் மூன்று கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் அண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை ASMR வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

    "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோவை வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

    வீடியோவில், அதிகாரிகள், நாடுகடத்தப்படுபவர்களை சங்கிலியால் பிணைப்பது, அவர்கள் (கைதிகள்) காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்கா பிறநாட்டவரை கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது. இதற்கிடையே உலக பணக்காரரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×