என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது.
- டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் வெளியான டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், 'டிராகன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரன்-டைம் 2 மணி 35 நிமிடங்கள் ஆகும்.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
- யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது. பி.சி.சி.ஐ. வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுகிறார். மேலும், இந்திய அணியில் வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய் செல்வார்கள்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
- வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர், 'சுபம்' என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
இந்த கப்பல் வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, இனி செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று இயக்கப்பட இருந்த கப்பல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிக்கப்படும் என கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம் என உற்சாகத்துடன் காத்திருந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் ரத்தசோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ரத்தசோகை நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மகப்பேறு காலகட்டத்தில் பெண்களுக்கு ரத்தசோகை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவ நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே ரத்தசோகைக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மட்டுமே ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு 15-49 வயது பெண்களிடம் ரத்தசோகை பாதிப்பு தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, இந்தியாவில் அதிகப்படியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 71.4 சதவீத பேரும், திரிபுராவில் 67.2 பேரும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 25.8 சதவீத பேரும், நாகாலாந்தில் 28.9 சதவீத பேரும், மணிப்பூரில் 29.4 சதவீத பேரும், மிசோரம் மாநிலத்தில் 34.8 பேருக்கும் ரத்தசோகை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 53.4 சதவீத பேரும், புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத்துறை 2019-2021 காலகட்டத்தில் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 22-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, "ஏறத்தாழ 50 சதவீத ரத்தசோகை நோய் பாதிப்பு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. மற்றவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் வருகிறது" என்றார்.
- ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது.
- எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் வளர்ச்சி பாதை வழங்கும் எண்ணற்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரிஸ்-இல் நடைபெற்ற 14-வது இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன். ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு சிறந்த உதாரணம் ஏவியேஷன் துறையில் தெளிவாக காணப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ளன. மேலும், நாங்கள் தற்போது 120 புதிய விமான நிலையங்களை திறக்க இருக்கிறோம். இதை வைத்து எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்."
"இந்தியாவின் வேகமும் பிரான்சின் துல்லியமும் இணையும் போது; பிரான்சின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணையும் போது... வணிக நிலப்பரப்பு மட்டுமல்ல, உலகளாவிய மாற்றமும் ஏற்படும். இந்தியாவும் பிரான்சும் ஜனநாயக முறையில் மட்டுமே இணைக்கப்படவில்லை. நமது நட்பின் அடித்தளம் ஆழ்ந்த நம்பிக்கை, புதுமை மற்றும் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது. நமது கூட்டாண்மை இரண்டு நாடுகளுக்கு மட்டும் குறுகி இருக்கவில்லை," என்று கூறினார்.
- வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
- வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க சூரியமூர்த்தி கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டது.
இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அ.தி.மு.க.வில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்ககு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 12-ந்தேதி (இன்று) ஒத்திவைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
- இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன.
புதுடெல்லி:
'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊழல் புலனாய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் 2024-ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சி.பி.ஐ.) தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 96-வது இடத்தைப் பிடித்து உள்ளது.
நிபுணர்கள் மற்றும் வணிகர்களின் கூற்றுப்படி, பொதுத்துறை ஊழலின் அளவை இந்த அமைப்பு மதிப்பிடுகிறது. அதன்படி 180 நாடுகளின் நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டது. நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதில் 'பூஜ்ஜியம்' என்பது மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், '100' என்பது ஊழலற்ற நிர்வாகத்தையும் குறிப்பதாகும்.
அந்த வகையில் இந்த பட்டியலில், 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38 ஆக உள்ளது. 2023-ல் 39 மதிப்பெண் பெற்றிருந்த இந்தியா, தற்போது ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது. அதாவது ஊழல் மலிந்து உயர்ந்துள்ளது. 2022-ல் இந்த மதிப்பெண் 40 ஆக இருந்தது. 2023-ல் இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன. வங்காளதேசத்தின் தரவரிசை 149 ஆக பின்தங்கி உள்ளது. சீனா 76-வது இடத்தைப் பிடித்து உள்ளது. ஊழல் குறைந்த நாடாக பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளன.
- ரோகித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
- மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று, தொடரை முழுமயாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
அதே நேரத்தில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டியதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
- இன்று பவுர்ணமி.
- சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவிலில் தெப்ப உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-30 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி இரவு 8.12 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.24 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி, சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர், சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில்களில் தெப்ப உற்சவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருது நகர் ஸ்ரீ சிவபெருமான் வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராம பிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-கடமை
மிதுனம்-நற்செயல்
கடகம்-ஜெயம்
சிம்மம்-அன்பு
கன்னி-ஆசை
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- நிறைவு
மகரம்-தெளிவு
கும்பம்-பயணம்
மீனம்-உண்மை
- அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
- ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை நேரில் சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பாரிஸ் நகரில் வைத்து அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் அருமையான சந்திப்பு. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவரது மகன் விவேத் பிறந்த நாளில் அவர்களை சந்தித்தது பெருமகிழ்ச்சியை கொடுத்தது," என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கருணை கொண்டவர். அவர் அளித்த பரிசுகளால் எங்களது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அருமையான உரையாடலுக்காக அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவில் பிரதமர் மோடி, ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
- சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன.
- உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
புதுடெல்லி:
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி, ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்தது. பத்திரிகையில் அச்செய்தியை பார்த்த அசாம் ஐகோர்ட்டு, தானாக முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கி, மத்திய அரசு, அசாம் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து வங்கி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புக்கு ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அதை அமல்படுத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஏ.டி.எம்.களில் வரிசையை ஒழுங்குபடுத்தவும், ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவும் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன. அசாம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-
அசாம் மாநிலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்.களிலும் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிப்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசாம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று கூறினர்.
- நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த பல்வேறு முக்கியமான தரவுகளையும் பெற்றுள்ளது.
- ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவின் தென்துருவத்தில் எந்த நாடுகளுமே இறங்காத இடத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரை இறங்கி, 13 நாட்கள் நிலவில் பல முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனை படைத்தது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது 'சந்திரயான்-3' திட்டம் மூலம் பெற்றது.
நிலவில் 'சந்திரயான்-3' தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி புள்ளி' என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டார். சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்து உள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த பல்வேறு முக்கியமான தரவுகளையும் பெற்றுள்ளது.
'சந்திரயான்-3' விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தின் முதல் வரைபடம் மூலம் இந்த தகவல் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கரடுமுரடாக உள்ள பகுதி, சமவெளி பகுதி, ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதி என 3 வெவ்வேறு தன்மைகள் கொண்ட நிலப்பரப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில், ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதியில்தான் சந்திரயான்- 3 தரையிறங்கிய இடமான 'சிவசக்தி புள்ளி' உள்ளது.
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 14 கிலோ மீட்டர் தெற்கே 540 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பாறைத் துண்டுகள் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தன, அவை அருகில் உள்ள 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, 'நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கியதே மிகப்பெரும் சாதனைதான். தற்போது அமைவிட ரீதியில் அப்பகுதி பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. பூமியுடன் நிலவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது, மதிப்புமிக்கது' என்றார்.
ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தில் நில அமைப்பியல் மற்றும் நில அடுக்கு ஆகியவற்றை ஆராய்ந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்பட்ட 'இமேஜிங்' கருவிகளை பயன்படுத்தி, நிலவின் பள்ளங்கள் மற்றும் பாறை அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






