என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தொடர்ந்து, நேரில் வந்து நலம் விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் T.R.பாலு MP அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

    தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.
    • பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும்.

    சென்னையில் இன்று உயர்நிலைப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுவதால் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
    • இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    இது, முழுமையாக குளிர்சாதனம் செய்யப்பட்ட நவீனமான உள் அலங்காரம் கொண்ட அறையாகும். சொகுசான சோபா செட்கள் மற்றும் சாய்வு இருக்கைகள் கொண்டவை. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள்.

    மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.

    24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டண ஏசி காத்திருப்பு அறைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.

    அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு தலா ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை. நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தி இங்குக் காத்திருக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டை சீரமைப்பதற்கு நேற்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
    • இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அபினேஷ் 11-ம் வகுப்பும், முகேஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இளங்காடு பகுதியில் உள்ள தனது தாத்தா முனியன் வீட்டிற்கு பள்ளி மாணவர்கள் நேற்று காலை வந்தனர்.

    முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு நேற்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.

    • குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும்.
    • கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா?

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில் "நாம் வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை. அடுத்த வர்களின் முகவரியில் அர சியல்வாதிகளாக இருந்து கொண்டிருக்கிற இவர்கள் எல்லோருக்கும் ஒரு சவால்.

    என்னை மாதிரி தனியாக சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டுகிற "தில்" இருக்கிறதா? "திராணி" இருக்கிறதா?" என்றார்.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும். குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும்.

    கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா? (த.வெ.க.-வுக்கும் திமுக-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி என விஜய் சொன்னதற்கு பதில் அளித்தபோது). ஒருக்காலம் முடியாது. ஒரு கவுன்சிலர் கூட இல்லை. 30 சதவீதம் வாக்கு 2 வருடத்தில் வந்திருச்சி எனச் சொல்கிறார். அனுபவத்தில் பார்க்க வேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். 32 சதவீதம் வாக்கு இருக்கு என்பதை நடிகர் என்பதனால் சொல்ல முடியுமா?.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.

    • தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
    • 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.

    பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.

    தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

    எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.

    • A.R.Rahman's- The Wonderment Tour இன்னிசை கச்சேரி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
    • சென்டிரலில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு கடைசி ரெயில் புறப்படும் எனத் தகவல்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள Nehru Outdoor Stadium வளாகத்தில், நாளை 14.02.2026 A.R.Rahman's- The Wonderment Tour இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

    Noise and Grains Private Limited ஆனது A.R.Rahman's - The Wonderment Tour இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ ரெயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் தனித்தனி நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (Event Ticket) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும்.

    பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 14.02.2026 அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு).

    இந்தப் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையிலுள்ள எந்தவொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை சென்று வரலாம். இதற்கு, மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் QR-ஐ ஸ்கேன் செய்யலாம்.

    நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 15.02.2026), வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 15.02.2026), பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 15.02.2026), புறப்படும்.

    பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அழைக்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை.
    • மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

    பிப்ரவரி 23-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    • ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.
    • வருகிற 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி டெட் முதல் தாள், 5-ம் தேதி டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு வரும் 18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க ஏப்ரல் 10-ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
    • நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம்.

    சேலத்தில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது பற்றியும், சேலம் மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களுடன் த.வெ.க.வினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்தும் த.வெ.க. கட்சியின இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "இதனால் நாங்கள் வருத்தமடைந்தோம். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் இருந்து கேள்விப்பட்டோம். நாங்கள் அனைத்து முதலுதவிகளையும் வழங்கி, எங்கள் ஆம்புலன்ஸையும் அனுப்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் காலமானார். இந்த இழப்புக்கு நாங்கள் வருத்தப்படுகிறோம். எங்கள் பணியாளர்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர்.

    4,998 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தோம், அதை விடக் குறைவாகவே அனுமதித்தோம். 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தனர். பல மினி-கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் அவசர நிலைக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனுமதி இருந்தது. எங்கள் தலைவரின் உரைக்குப் பிறகு, மதியம் 1:10 மணிக்கு நிகழ்ச்சியை முடித்தோம். பொது பாதுகாப்பு குறித்து நாங்கள் நிச்சயமாக மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.

    சேலத்தில் நிருபர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து, சேலத்தில் சிறிய தவறான புரிதல் ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம், எதிர்காலத்தில் அப்படி நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

    நயினார் நாகேந்திரன் த.வெ.க.-வின் பலத்தை அறிவார், ஏனென்றால் கடந்த ஒரு வருடமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் தனது சகாக்களிடம் அவர் கேட்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் எங்கள் பலத்தை அறிந்திருப்பதால், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் தங்கள் கூட்டணியில் சேர எங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரே போட்டி த.வெ.க.-வுக்கும், தி.மு.க.-வுக்கும் இடையில்தான் என்று தெளிவாகக் கூறியுள்ளார். வேறு எந்தக் கட்சியும் களத்தில் இல்லை, மக்கள் ஏற்கனவே அவர்களை நிராகரித்துவிட்டனர். இந்தத் தேர்தல் நிச்சயமாக த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையேயான தேர்தல். இந்த விஷயத்தில் நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம்," என்றார்.

    • நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
    • FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா?

    அதிமுக ஐ.டி. விங் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?

    அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க...

    வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த், புரட்சிக் கலைஞர் விஜய காந்தி ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu....

    அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu...

    இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

    "தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control" என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரது உத்தரவின்படி நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்...!!

    சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

    கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பதுபோல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

    உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர்தானே நீங்கள்?

    எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்!

    எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்!

    நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள்தான்!

    நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத்தான்!

    "அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின்போது, 41 பேர் மரித்தபோது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடுதான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.

    அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?

    கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற நபர் உயிரிழந்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முதலுதவி அளித்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அதிமுக கட்சியைச் சேரந்த கோவை சத்யன், "தவெக கூட்டத்திற்கு போனா இனிமேல் கையோடு சவப் பெட்டியையும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி" என விமர்சித்துள்ளார்.

    கரூரில் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் எற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

    இந்த நிலையில் தற்போது மற்றொரு கூட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

    ×