என் மலர்
விளையாட்டு

பார்ல்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீரர்கள் அதை தவற விட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி அதற்கு அடுத்த 2 டெஸ்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை (19-ந் தேதி) நடக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
ஒயிட் பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாததால் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி எல்லாவகையிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுபோல், ஒருநாள் தொடரையும் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றிபெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, இஷான்கிஷன், வெங்கடேஸ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், சாஹல், தீபக் சாகர், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ்.
தென் ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), கேசவ் மகாராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டிகாக், மார்க்கிராம், ஜான்மேன் மலன், மில்லர், வான்டர் டூசன், ஹம்சா, கெய்ல்வெரீனி, ஷம்சி, ரபடா, பிரிட்டோரியஸ், பெகுலுவாயோ, பர்னல், நிகிடி, சிசாந்தா மகலா, ஜான்சென்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
விராட் கோலியின் இந்த முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கூறியதாவது:-
விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது புதிதாக ஒன்றும் இல்லை. கேப்டன் பதவி என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை. யாருடைய பிறப்புரிமையும் அல்ல.

கேப்டன் பதவியை கோலிக்கு அளித்த டோனி அவரது தலைமையின் கீழ் விளையாடவும் செய்தார். அதுவும் டோனி 3 ஐ.சி.சி. மற்றும் ஐ.பி.எல். கோப்பைகளை வென்றுள்ளார்.
விராட் கோலி இனி ரன்களை எடுக்க முயல வேண்டும். அதுதான் முக்கியம். இந்திய அணிக்காக விளையாட நினைக்கும்போது கேப்டன் பதவிக்காக யாரும் கனவு காண மாட்டீர்கள். இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க கனவு காண்பீர்கள்.
நாட்டுக்காக விளையாடுவது பெருமைக்குரியது என்பதால் உங்களுடைய ஆர்வம் மாறப் போவதில்லை.
இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.
முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதை வரவேற்கிறேன். அந்த பதவியை அவர் ரசிக்கவில்லை. கேப்டன் பதவி என்பது கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய பணியாகும்.
சமீப காலமாகவே அவர் கடும் நெருக்கடியில்தான் இருந்தார். அவர் ஒரு முதிர்ச்சியான மனிதர். இந்த முக்கியமான முடிவை எடுக்கும் முன்பும் கோலி பலமுறை சிந்தித்து இருப்பார்.
கவாஸ்கர் எனது தலைமையில் விளையாடி இருக்கிறார். ஸ்ரீகாந்த், முகமது அசாருதீன் ஆகி யோரது கேப்டன்ஷிப்பில் நான் விளையாடி இருக்கிறேன். எனக்கு எந்த ஈகோவும் இருந்ததில்லை.
விராட் கோலி ஈகோவை உதறிவிட்டு இளம் வீரர் ஒருவரின் தலைமையில் விளையாட வேண்டும். இது அவருக்கும், இந்திய அணிக்கும் உதவும். இந்திய கேப்டனுக்கும், இளம் வீரர்களுக்கும் அவர் வழிகாட்ட முடியும். கோலி பேட்ஸ்மேனாக அணிக்கு மிகவும் முக்கியமானவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







